ஊழி
- சேரன்
Riders of the Apocalypse
எங்களுடைய காலத்தில்தான்
ஊழி நிகழ்ந்தது.
ஆவிக் கூத்தில் நிலம் நடுங்கிப்
பேய் மழையில் உடல் பிளந்து
உள்ளும் வெளியும் தீ மூள
இருளின் அலறல்.
குழந்தைகளை, மனிதர்களை
வெள்ளம் இழுத்து வந்து
தீயில் எறிகிறது.
அகாலத்தில் கொலையுண்டோம்
சூழவரப் பார்த்து நின்றவர்களின்
நிராதரவின்மீது
ஒரு உயிரற்ற கடைக்கண் வீச்சை
எறிந்துவிட்டு
புகைந்து புகைந்து முகிலாக
மேற் கிளம்பினோம்
காஃப்காவுக்குத்தான் தன்னுடைய எழுத்துக்களைத்
தீயிலிட வாய்க்கவில்லை
ஆனால் சிவரமணி எரித்து விட்டாள்
அந்தர வெளியில் கவிதை அழிகிறது
மற்றவர்களுடைய புனைவுகள்
உயிர் பெற மறுக்கின்றன.
எல்லோரும் போய் விட்டோம்
கதை சொல்ல யாரும் இல்லை
இப்பொழுது இருக்கிறது
காயம்பட்ட ஒரு பெருநிலம்
அதற்கு மேலாகப் பறந்து செல்ல
எந்தப் பறவையாலும் முடியவில்லை
நாங்கள் திரும்பி வரும் வரை.
0
( ஊழி, பக். 201, 'நீ இப்பொழுது இறங்கும் ஆறு')
7 Comments:
//காஃப்காவுக்குத்தான் தன்னுடைய எழுத்துக்களைத்
தீயிலிட வாய்க்கவில்லை
ஆனால் சிவரமணி எரித்து விட்டாள்//
நான்கைந்துமுறை மீள மீள வாசிக்கவைத்த வரிகள்.
அழகாய் பத்திகள் எழுதிக்கொண்டிருந்த பொடிச்சியிற்கும் அலுப்புத்தட்டிவிட்டது போல :-).
//அழகாய் பத்திகள் எழுதிக்கொண்டிருந்த பொடிச்சியிற்கும் அலுப்புத்தட்டிவிட்டது போல//
சிவரமணிக்காகத்தான் போட்டிருக்காரென்று நினைக்கிறேன்!
நன்றி மயூரன்,
டீ.ஜே:அலுப்பு? இருக்கலாம்..!
ஆனால் இது போட்டதற்கான காரணம் வேறு.
சுந்தரவடிவேல்: சரிதான்..
நல்ல கவிதை.
சரி, பத்தி எழுதறத நிறுத்திட்டீங்களா?
:-(
//காஃப்காவுக்குத்தான் தன்னுடைய எழுத்துக்களைத்
தீயிலிட வாய்க்கவில்லை//
வாய்த்த நட்பு காரணம். Max Brod அதையெல்லாம் தன் எழுத்து என்று பதிப்பித்திருந்தாலும் கேட்க ஒரு ஜீவன் இருந்திருக்காது. வாழ்க்கை ஓரளவு கருணையுள்ளதுதான்!!
Post a Comment
<< Home