@font-face { font-family: TSCu_InaiMathi; font-style:normal; font-size: 10pt; font-weight:normal; src:url(http://mathy.kandasamy.net/fonts/TSCUINA1.eot); }

Sunday, December 12, 2004

ம்

ஒருநாளின் இரண்டு மணித்தியாலங்களும் கொஞ்சங் கூடவும் போதுமாயிருந்தது இதை வாசிக்க. 1999 ஆண்டில் பக்கத்துநாட்டில் ‘கொலராடோ உயர்பாடசாலை’ சூட்டுச் சம்பவத்தில், எதிர்ப்பட்ட மாணவர்களை துப்பாக்கிகளால் குறுகிய நொடியில் சுட்டு முடித்த இளைஞர்கள்போல், பிரதியின் ஒவ்வொரு பக்கங்களும் விரிய விரிய சூடு நடந்துகொண்டே இருக்கிறது, மரணமும். சுடுவதுகூடப் பறவாயில்லை, ஒரு சொட்டு நிமிடத்தில், நடந்துமுடிந்திடும். ஆனால் இதில் மரணம் அவ்வளவு கெதியில் நடப்பதில்லை. கோடாரிகள், தடிகள், கம்பிகள், கத்திகள், பென்சில்கள், இவற்றுடன் இதில் வருகிற கதாபாத்திரம் ஒன்று சொல்வதுபோல fucking weapons துவக்குகள் சகிதம் நேரம் மெனக்கெட்டுத்தான் செய்கிறார்கள் கொலைகளை ஒவ்வொருத்தரும்.
ஒரு காதுகுடிமி(!) (Qtip) ஆல் காதைக் குடைகிறபோது அதை வைத்து சுட்டியலால் காதுக்குள் அடித்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப்பார்த்ததுண்டு(!). அதை எல்லாம் இதிலே செயலிலேயே காட்டுகிறார்கள்.
“நீதிமன்றம் பார்ப்பதுபோல -குற்றவாளியாவும் நிரபராதியாவும்- மனிதர்களைப் பார்ப்பது தவறு. இங்கே எல்லோரும் victims தான்’ என்று சொல்வதை ஏற்க நேரடி அனுபவங்கள் விடுவதில்லை. ‘அவனும் victim நானும் victim’ என்பது சொல்லத்தான் ‘பரந்த’ மனப்பாங்கே ஒழிய, அதால் தனிப்பட்ட ஒருவளு(னு)க்கு ஒரு ஆறுதலுமில்லை. ஒவ்வொரு மனிதர்க்கும் சார்புகள் உண்டு, எதிர்ப்புகள், எதிர் விமர்சனங்கள் உண்டு. இந்தப் பிரதியில்- மனிதர்கள் மற்றவர்களை கொல்வதற்கு சார்பும் சார்பின்மையும் மட்டுமே காரணங்களாகின்றன. தமிழன்களை சிங்களவன்கள், சிங்களவன்களைக் தமிழன்கள், தமிழ்க் கைதிகளை சிங்களக்கைதிகள், தமிழ்க்கைதிகளை தமிழ் இயங்கங்கள்... என்று அது விரிகிறது. இந்த இடத்தில், ஒற்றைப்படையான நீதி, நேர்மை, குற்றவாளி, சுற்றவாளி இந்தச் சொல்களிடமிருந்து பிரிந்து போய்விடுகிறது பிரதி.

குழந்தையை புணர்ந்தவனை பெடோபைல் (pedophile) எனச் சட்டம் தரம் பிரிக்கிறது; அவனும் இச் சமூகத்தின் victim என்பதாக ஷோபாசக்தி. அவனுக்கு, வாழ்நாளெல்லாம் தேடிப் பெறாத ‘பரிசுத்தமான காதல்’ அவனது குழந்தையிடம்தான் இருக்கிறது. அவன் நிறைய சொல்கிறான். சொல்லிக்கொண்டேட இருக்கிறான். சிறுமி தனது பக்கத்தைச் பேசவே இல்லை. ''அவளது இருஇதழ்களின் நடுவே தோல் வளர்ந்தது”

வன்முறையாளரின் நோக்கிலிருந்து இந்த பிரதி பேசுகிறது; -இதில், முதிர்ச்சியற்ற, பரிசுத்தமானவளாய் இருக்கிற, பிரதியாசிரியரால், பேசுவதற்கு எவ் வார்த்தையும் அனுமதிக்கப்படாத, அந்த சிறுமியுடைய பக்கத்தை அவள்தானே சொல்ல முடியும்? அந்தப் பக்கத்திற்கான பதில், பிரதியில் அவளது மெளனம் மட்டுமே.

பாலியல் துஸ்பிரயோகத்துக்குள்ளான சிறுவர்கள் குழுமி இருந்த அறையில், என் கண்முன்னால் உடைந்தழுத சிறுமியொருத்தி ‘அந்த ஆண்குறியை வெட்டவேண்டும்’ என்று சொன்னாள். அதையொத்த வலியைத்தான் ‘தன் குழந்தையைப் புணர்ந்தவனை’ நாம் (எமது ‘பொது’மனம்) கேட்க விரும்புகிற கேள்விகளைக் கேட்டுக் கேட்டு அடிக்கிறபோதும் எழுகிறது- Fucking system என்று சொல்லியபடிக்கு.

மற்றப்படி, ஒரே மூச்சில் படித்துமுடிக்கக்கூடியதாய் இருப்பதும், அவன் போன்றவர்களை, ஒரு பொதுக் கதையாடல் போல ‘மிருகமாய்'க் கட்டமைக்காததும், வாசிக்கையில் ‘அதை ஏற்காட்டிலும்’ ஒருவித உணர்வுக்கு ஆட்படச் செய்வதும்தான் ஷோ.சக்தியின் வெற்றியா தெரியவில்லை.
ஆனால்
தாஸ்தாவ்ஸ்கி (Dostoevsky) யின் மரணவீட்டின் குறிப்புகள் போன்ற படைப்புக்கள் மனிதர்களை வெறும் குற்றம் நிமித்தம் அளவிடாமல் சமூக, புறச் சூழல்கள் ‘கட்டி எழுப்பிற’ அவனிலிருந்து விடுவித்து, வேறாய் உலவவிட்டிருக்கின்றன. ஒரு ‘கொலைகாரன்’ எப்போதுமே கொலைவெறியை உடையவனாய் இல்லை. ராஜம் கிருஷ்ணன் கதைகள், மணிரத்தினம் படங்கள்போல வன்முறையாளர்கள் முகங்களில் என்றென்றைக்கமான நித்திய கொடூரம் இருந்ததில்லை. ஒருவளை(ன)க் கொன்றுவிட்டு அன்றேயோ பிறகோ அந்த ஒருவனோ ஒருத்தியோ தமது துணைகளைப் காதல் செய்யவோ, குழந்தைகளைக் கொஞ்சவோ செய்தார்கள். அந்த யதார்த்தமான ‘மனிதனைப் பற்றி’ பேசியபடியாற்தான் அவை தரமான இலக்கியப்பிரதிகளாக இன்றைக்கும் நிற்கின்றன; அத்தகைய பிரதிகள் தமிழில் இல்லை என்றே சொல்லலாம். மாறாக பாரபட்சமான கதாசிரியர்களின் எண்ணப்படி நகர்ந்தவைதான் பெருவாரியானவை.


முதலாய் உலக யுத்த்திற்குப் பின்பான ஒரு தலைமுறையை lost generation என குறிப்பிடுவார்கள். ஹெமிங்வேயின் முதல் நாவலான ‘சூரியனும் உதிக்கிறான்” (The Sun Also Rises) இல் ஒழுக்கம், மதம், காதல், பிம்பங்கள் சகலதும் மீதான நம்பிக்கையிழப்புக்குட்பட்ட அத் தலைமுறையின் கசந்த வாழ்வு வரும். அது ஒரு தொலைந்த தலைமுறை. இன்றைக்கு ஈழத்தில், இடைப்பட்ட யுத்த நிறுத்த அ(ன)ர்த்தப்படாத காலத்தில், தலைவரின் பாசையில் ‘அரசியல் வெறுமையில்’ இருக்கிற காலத்தில், அத்தகையதொரு தலைமுறையே யதார்த்தமாயிருக்கும். ஈழத்தில் ஒரு பாதி, அங்கிருந்து புலம்பெயர்ந்த தேசங்களில் பிற பாதி என- அத்தகையதொரு ‘தொலைந்த தலைமுறை’யின் வாழ்க்கைப்போக்கையே இந்தப் பிரதி பதிவுசெய்திருக்கிறது.

இது குறித்த தமிழக வாசகர்களது வாசிப்பனுபவம் எப்படியிருக்குமென்று தெரியவில்லை, இதில் இடம்பெற்றிருக்கிற பல விடயங்களுக்கு புதியவளா இருந்தாலும் ஒன்ற முடிந்தது, ஒன்ற முடிகிறதன்மை அவர்களுக்கும் இயல்பாய் வருமா தெரியவில்லை. வெலிகடை சிறையில் உறவினர் ஒன்றரை வருடங்கள் இருந்தார். இன்னமும் அச்சிறையில் இப்படிப் பலர் இருக்கிறார்கள். எந்த குற்றச்சாட்டும் இல்லை ‘சும்மா’ கைதானவர். அவர் காரணமாக, வெலிக்கடைச்சிறையின் விருந்தினர் அறையையும், தடிப்பான காக்கிச் சட்டைகளின் துவேசமான நடத்துதல் பற்றிய அச்சமும் அனுபவம். அதற்கப்பால், உள்ளே, சிறைக்கூடங்களுள் மனிதர்கள் நடத்தப்படுகிற விதம் பற்றிய காட்சி, எமது உலகத்திற்கு புதியது.

ஷோபாசக்திகளின் படைப்புகள்மீதான இன்னொரு விமர்சனம்: அவரது பிரதிகள் புனைவும் நியமும் கலந்தவை. ஒரு படைப்பிற்கு ‘புனைவு’ (Fiction) என அடையாளம்தந்துவிட்டு உள்ளே நிர்மலாக்கா, டேவிட் ஐயா, டக்ளஸ் என பெயர் தருவதில் உள்ள சிக்கல், பிரதியின் எல்லாத்திற்கும் ‘நியமுகம்’ தருவதாய் இருக்கும். எனினும் இந்தப் பெயர்களை பயன்படுத்துவதை, பொதுமனிதர்கள் என்ற அடிப்படையில், ஒரு காலத்தின் நடிகைகளின் பெயர்களை மற்றும் பெப்ஸி/கோலா என பொது உரையாடல்களில் வந்துவிட்ட பெயர்களைப் பயன்படுத்துவதுபோல எடுத்துக்கொள்ளலாம். ஒரே சிக்கல், பிரதி முழுமைக்கும் தரப்படக்கூடிய ‘உண்மைக் கதை’ சிக்கல்தான். இதிலும், அத்தகைய பிரச்சினைகள் உண்டு. சிறையில் இருந்ததாக எழுதப்பட்டிருக்கிற நியாமான சில நபர்கள், அங்கு இருக்கவில்லை என்று சொன்னர்கள்! இதுபற்றித் தெரிந்தவர்கள், இனிவரும் தங்கட விமர்சனங்களில் பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கலாம்.

பெண்கள் தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் வருமென எதிர்பார்க்கிறேன்.
சிறுமியின் வயது குறிப்பிடப்படாதபட்சத்தே, தாயின் கூற்றுப்படி ’10 வயதுப் பெண்ணாய்’ இருப்பவள் மார்பு –காலில் அழுந்த உட்கார்ந்திருக்கம் காட்சி குறித்து தோழி விசனப்பட்டாள் “10 வயது சிறுமிக்கு மார்புவளர்ச்சி எங்க வந்தது?” என்று. மேற்குலக சிறுமி என்ற அடிப்படையிலோ, 14-15 வயது சிறுமியாக இருந்தாலுங்கூட, இத்தகைய ‘காட்சிப்படுத்தல்கள்’ தருகிற uneasy ஐ தவிர்க்க முடியாதென்றே தோன்றுகிறது. ஏனெனில் ஆண்களின் கதையாடல்களில் வருகிற பல சித்தரிப்புகள், குறிப்பறிவித்தல்கள் ஒரே மாதிரியானதாக ஒரே விடயத்தை மையங்கொண்டனவாய் இருக்கின்றது. பாலியல்சார் விடயங்களை எழுதுகிறபோது ‘பிரா கூக்கை களட்டினான், மார்பு அழுந்த உட்கார்ந்திருந்தாள்” போன்ற வரிகளைக் கடந்து எந்த தமிழ் எழுத்தாளனும் போனதில்லை. அது ‘நாகரீகமான’ ஆபாசத்தைத் தொடாத ஒரு நிலையென அவர்களுக்குத் தோணலாம், ஆனால் சிறுமியைப்பற்றி எழுகையில்கூட அப்படியொரு மார்பை முன்வைத்த குறிப்பறிவித்தல்தான் வருகிறது!

இன்னொரு சமயம் ‘ம்’ குறித்து எழுத முடியுமா தெரியவில்லை. தொலைந்த தலைமுறையிடமிருப்பது துயரமில்லை; கசப்புத்தான். எல்லாவிதமான –ஏன் தங்கள் மீதான கூட- கசப்பே. அது தருகிற மனநெருக்கடி கொஞ்ச நாட்களுக்கு ஒட்டியிருக்குப் என்று தோன்றுகிறது. அத்தோடு வழமையாய் விமர்சகர்கள் சிலாகித்துச் சொல்வதுபோல “ஷோபாசத்தியால் மட்டுமே இதை எழுத முடியும்” என்றும் சொல்லத் தோன்றுகிறது. தவிர ஒரு பெண்ணால் *இத்தகைய சார்பற்று இத்தகு பிரதியை எழுதமுடியும் என்றும் தோன்றவில்லை. இதை மிகவும் மனவருத்தத்துடன்தான் சொல்கிறேன் ஏனென்றால் இது ஒரு balanced ஆன பிரதி. இறுதி பகுதியின் அந்த கதாபாத்திரத்தின் ‘குரல்’ மற்றும் குதிரையை முன்வைத்த குறியீட்டுச் செய்தி தவிர (அநாவசியமா துரத்திக்கொண்டு!), நாவல், மிக இறுகிய, செப்பனிக்கப்பட்டெல்லாம் இருக்கிறது.

நிகழும் எல்லா அத்தியாயங்களுக்கும்/அநியாயங்களுக்கும்
‘ம்’ கொட்டிக்கொண்டிருக்கும் அவரது சனம், எல்லாவகையான வன்முறைகளாலும் ஊறிய இனம், இவையே இக்கதைப் புத்தகத்தின் பின்னணி.

போராளிகளால் கொல்லப்பட்ட ராஜினி திரணகம அடிக்கடி சொல்லுவாவாம்: ‘எங்கட மதம் வன்முறையாலானது. எங்கட கடவுள்கள் ஆயுதங்களுடன் இருப்பவர்கள். எங்கட இனம் வன்முறையாலானது”. இதை நினைவுகூர்ந்தவர், புலத்தில் இருக்கிற, ஒரு த.வி.புலிகள் ஆதரவாளர்.

இப்பிரதி குறித்த விமர்சனத்தை -முடிந்தால்- பிறகும் தொடரலா
ம்






*சிங்கள மக்கள் மீதான போராளிகளின் வன்முறை இதில் பதியப்பட்டிருந்தாலும், இது முற்றுமுழுதாக ‘சார்பற்ற’ பிரதி அல்ல. தமிழ் மக்கள் எதிர்கொண்ட வன்முறைதான் 99 வீதம். இதில் ‘சார்பற்ற’ என நான் கூறுவது ஒழுக்க ‘சட்டத்தினடிப்படையில்’ ‘உணர்ச்சிபூர்வமாக’ மனிதர்களை பார்க்காத தனத்தைத்தான் (உதாரணம்: சிறுமி மீதான தகப்பனின் பாலியல் தொடர்பு; அத் தகப்பனைக் கொடியவனாக காட்டாமல்விட்டது).
0000000000000000000000000000000000
தொடர்புகளுக்கு:
karuppu2004@rediffmail.com
shobasakthi@hotmail.com

12 Comments:

Blogger ஈழநாதன்(Eelanathan) said...

சிங்களவர் மீது தமிழர்கள் மேற்கொண்ட இனப்படுகொலைகள்,வன்முறைகள் பேசப்படவேண்டியது நியாயமானது.ஆனால் இப்போதெல்லாம் நெர்மையுடன் வரலாற்றுப் பதிவுகளை எழுதுவதாகக் கூறிக்கொள்பவர்கள் அவற்றை மிகைப்படுத்தியும் தமிழர் மீது சிங்களவர்களால் மேற்கொள்ளப்படும் வன்முறைகளுக்கு இவற்றைக் காரணம் காட்டி நியாயப்படுத்தியும் வருவதை அவதானிக்ககூடியதாக உள்ளது.புஸ்பராஜாவின் சாட்சியம் கூட சிங்களவர்களின் இனப்படுகொலைகளையும் இந்திய இராணுவத்தின் செயற்பாடுகளையும் மிகச் சாமர்த்தியமாகத் தவிர்த்து இயக்கங்களின் வன்முறைகள் அதிலும் குறிப்பாக விடுதலைப்புலிகள் மீதான விமர்சனங்களை மிகைப்படுத்துவது இவர்கள் தானாக இயங்காமல் இயக்கப்படுகிறார்களோ என்ற சந்தேகத்தை எனக்குள்ளே தோற்றுவிக்கின்றது.

12/12/2004 05:06:00 p.m.  
Blogger இளங்கோ-டிசே said...

சோபாசக்தியின், 'ம்' இன்னும் வாசிக்கவில்லை. உங்களதும், வெங்கடேஷினதும் வாசித்து எழுதிய அனுபவங்களைப் பார்க்கும்போது, கட்டாயம் அந்தப்புனைவை வாசிக்கவேண்டும் போலத்தோன்றுகிறது. எந்தப்பிரதியும் தன்சார்பற்று/தன்னை ஏதோவொரு தருணத்தில் நியாயப்படுத்தாமல் வருவது சாத்தியமில்லைப் போலும். நீங்கள் சொன்னதுபோல, சிறுமியின் பக்கம் பேசாப்படாததால் சார்பற்ற பிரதியென்று சொல்வது சாத்தியமில்லை என்பது முக்கிய குறிப்பு. Serial Killersஓ அல்லது sexual abusersஓ எவராயிலிருந்தாலும் அவரவர் தமக்கான நியாயங்களைச் சொல்லிக்கொண்டே தானிருக்கின்றனர். அந்தவகையில் சிறுமியை வன்புணர்ச்சி செய்த அந்தப்பாத்திரமும் (பரிசுத்த அன்பு சிறுமியிடம்தான் கிடைத்தது) என்று ஏதோவொரு காரணத்தை பிரதியில் நேராகாவோ, மறைமுகமாகவோ சொல்லியிருக்கக்கூடும்.
..........
ஷோபாசக்தியோ, சாருநிவேதிதாவோ இப்படி எழுதிவிட்டு தங்கடைபாட்டில் (சிலவேளைகளில் பெருமிதமாகவும்) திரியக்கூடிய இருப்பதுவும், தான் என்ரைபாட்டில் (எவரையும் பாதிக்காமல்) சுயமைத்துனம் செய்தேன் என்று எழுதுகின்ற பெண்களை கல்லடி/சொல்லடி எறியும் காலத்தில் வாழ்ந்துகொண்டிருப்பத்து சமூக யதார்த்தம்.
..........
மற்றபடி, இத்தனைகாலமும் ஈழ/புலம்பெயர்ந்தவர்களாய் உருப்படியாய் ஒரு புனைவும் (எத்தனையோ அனுபவங்கள் இருந்தும்) படைக்கவில்லையென்று கூறும் தமிழ்நாட்டு விமர்சகர்களுக்கு பதிலிறுக்க எம்மிடமும் சிலபிரதிகள் இருக்கின்றன என்று காட்ட சோபாசக்தி போன்றவர்கள் நம்மிடம் இருக்கிறார்கள் என்பது ஒருவித நிறைவே.

12/12/2004 05:35:00 p.m.  
Blogger ROSAVASANTH said...

இந்த விமர்சனம் என்னை எப்படியாவது உடனடியாய் இதை படித்துவிட வேண்டும் என்று தூண்டுகிறது. `கதை கேட்ட' அனுபவத்தை (சும்ம பெருமைக்காக்க அல்ல,என் அபிப்ராயப்படி இந்த கதையை `கேட்ட' ஒரே ஆள் நான்தான் என்று நினைக்கிறேன்) மட்டும் வைத்து எதுவும் சொல்லமுடியாது என்பதனால். எப்படி வரவழைப்பது என்று யோசித்துகொண்டிருக்கிறேன். படித்ததும் மீண்டும் எழுதுகிறேன்.

12/13/2004 01:13:00 a.m.  
Blogger ROSAVASANTH said...

டீஜே, நீங்கள் சொல்வது முழுவதும் சரியல்ல. சாருவின் உன்னத சங்கீதம் ஒரு சிறுமியுடனான பாலியல் உறவை, உறவு கொள்ளும் முதிர்ந்த ஆணின் பார்வையில், அதற்கான நியாயங்களுடன் சொல்லபட்டிருக்கும். ஷோபாசக்தியின் நாவலில் வரும் நிகழ்வு அப்படிபட்டது என்று தோன்றவில்லை.சிறுமியின் பக்கம் சொல்லபடவில்லை என்ற விமர்சனம் சரியாக இருக்கலாம். ஆனால் உன்னத சங்கீதத்துடன் ஒப்பிடகூடியதல்ல.

12/13/2004 02:53:00 a.m.  
Blogger ROSAVASANTH said...

This comment has been removed by a blog administrator.

12/13/2004 02:53:00 a.m.  
Blogger ROSAVASANTH said...

This comment has been removed by a blog administrator.

12/13/2004 02:53:00 a.m.  
Blogger ROSAVASANTH said...

®Æ¡¿¡¾ý ¦º¡øÅÐ §ÅÚ º¢Ä ºó¾÷Àí¸Ç¢ø ¯ñ¨Á¡ö þÕì¸Ä¡õ. §„¡À¡ºì¾¢Â¢ý ±ØòÐì¸Ç¢ø ±øÄ¡Å¢¾ ÅýӨȸÙõ, ÀÂí¸ÃÅ¡¾í¸Ùõ, ´Õ ¯ò§¾º¢ì¸ÀðÎûÇ ºÁÛ¼ý «¨Áó¾¢ÕôÀ¨¾ ¸¡½ÓÊÔõ. þí§¸ ¦À¡ÊÔõ õ ¿¡ÅÄ¢ø 99% ¾Á¢úÁì¸û ±¾¢÷¦¸¡ñ¼ ÅýӨȧ §ÀºôÀðÊÕôÀ¾¡¸ ÜÚ¸¢È¡÷. ¦¸¡Ã¢øÄ¡ ¿¡Å¨Ä 'ÒÄ¢¸Ç¢ý À¢Ã¾¢'¡¸ Å¡º¢ò¾Å÷¸Ùõ ¯ñÎ. ¯¾¡Ã½Á¡ö ¸üÍÈ¡ ±ýÅ÷ §†Ã¡õ À¼õ §À¡Ä þÃñÎ Àì¸ ÅýӨȨÂÔõ ÜÚž¡¸ Å¢Á÷º¢òÐûÇ¡÷.

Ò‰ÀშÅÔõ 'þÂì¸ÀÎù¾¡¸' ÜÚÅÐ ´Õ «ÅàÈ¡¸§Å þÕìÌõ ±ýÚ ¿¢¨É츢§Èý. ®Æ¿¡¾¨É ܼ ¿¢¨Éò¾¡ø «ôÀÊ ±ò¾¨É§Â¡ ÜÈÓÊÔõ.

12/13/2004 06:39:00 a.m.  
Blogger ROSAVASANTH said...

orE kament kEm sO meni taimS, So rimUvd!

12/13/2004 07:08:00 a.m.  
Blogger ஒரு பொடிச்சி said...

எனக்கு அப்படிக்கூறமுடியவில்லை ஈழநாதன். ஓரளவு ஈ.வி. போராட்டம் பற்றியறிந்தவர்களுக்கே (நியாயமான விடயங்கள் தெரிந்தவர்களுக்கு) 'ஈழ.வி.போராட்டத்தில் எனது சாட்சியம்' நூலில் வருகிற 'தன்னை முன்னிறுத்திய' அவரது வீரசாகசங்களை தெரிந்திருக்கும் என்றே நான் நினைக்கிறேன். தன்னை முன்னிறுத்தாமல் அவரால் எழுத முடியாதென்றால் எழுதிவிட்டுப் போகட்டும். அதுபோல அதில அவர் எவ்வளவுக்கெவ்வளவு 'போராளிகளை விமர்சித்தாரோ' அவ்வளவுக்கவ்வளவு த.பிரபாகரன் பிறந்த வல்வெட்டித்துறையை எல்லாம் புகழ்ந்து தள்ளியுள்ளார்! அவரிடம் அத்தகைய சமன்பாடுகள்.

ஷோபா சக்தியினுடைய பிரதிகள் புலிப் பிரமுகர்களாலும் விரும்பித்தான்படிக்கப்படுகின்றன. 'ம்' ஐப் படித்துவிட்டு யாரும் தமிழர்களது போராட்டத்தை எதிர்க்கப்போவதுமில்லை. இதில் சிங்கள மக்கள்மீதான வன்முறை ஒரு இடத்தில் குறிப்பாகத்தான் வருகிறது; கதைப்போக்கில் அது பதைத்து நின்றுவிடுகிற இடமும் இல்லை. அதை எழுதாவிட்டால் ஷோபா சக்தியின் நடுநிலமை பாதிக்கப்படும் நிலமையாய் இருக்கும்.;-)

அவரது பிரதிகளுக்காக தமிழக வாசகர்கள்முன் தலைநிமிர்ந்து நிற்கும் பெருமையெல்லாம் இல்லை. தமிழில் இதுவரை அணுகப்படாத ஒரு நிகழ்வு- இன்னும் ஈழத்திலிருந்துகூட ஆரம்பிக்கவே இலலாத பல பிரதிகளுக்கு ஒரு முன்னோடி(!)யாக இருக்குமென நினைக்கிறேன். அங்கிருக்கிற சாட்சிகளிடமிருந்து பதிவுகள் வருமெனில் இவர்கள் விடுகிற இடைவெளியை வாசகர்கள் நிரப்பிக்கொள்வார்கள்.
இவர்கள் யாரிடமோ 'கூலி" பெறுகின்றார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை; அப்படியிருந்தாலும்கூட அதற்கு வஞ்சகமே செய்கிறார்கள்! ஏனெனில் இதைப் படித்துவிட்டு ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளை யாரும் நிந்தித்தால் அது ஒரு 'இந்திய தேசிய உளவியல்' அடிப்படையில் மட்டுமாகத்தான் இருக்கும்.

வெலிக்கடை சிறைக்காட்சியை தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து சொல்லப்படுவதற்கு மாறாய், அவர்களதை விட உக்கிரத்துடன், சொல்லப்பட்டிருக்கிறது. பிந்துனுவெல விலும் இதுதான் நடந்திருக்கும் என உணரவே முடிகிறது.
ஆனாலொன்று போராட்டம் ஆரம்பித்த 'திக்குக்கெட்ட' காலம்பற்றிய பதிவும், ஈழத்து 'சாதி'மனோபாவத்தைப் பற்றியும், த.வி.புலிகள் மீதான தார்மீக விமர்சனங்களும் - எழுத எழுத அதற்கான காரண்களை பெற்றவண்ணமே இருக்கும்.

மற்றது-
சா.நியை ஷோபா.சக்தியோடு பார்ப்பதுதொடர்பாக-
சாநி யின்ர படைப்பை விமர்சிப்பது, எதிர்ப்பது இலகுவாக இருக்கிறது. ஆனால் "ஒரு மனிதன் இப்படி நடந்துகொள்கிறான்"
எனப் பார்ப்பது, அதற்கான காரணங்களைத்தேடுவது எதிர்கொள்ள, எதிர்க்க ஏதுவாய் இல்லை.
கதை எழுதிறன் பேர்வழியென கருக் கோர்த்து குழந்தை பாலியல் வன்முறைய 'அவளும் விரும்பினாள்' என எழுதுவதில் 'திமிர்' இருக்கிறது. 'கதை பின்னும்' கவனம் தான் கூட. சமூகத்தின் இன்னபிற வன்முறைகளோடு ஒரு பகுதியாக அதை நிறுவுவது வேறு.
அது தருகிற மனப் பாதிப்பு வேறு.
இதைப்பற்றி வேற எழுத முடியாது!

12/13/2004 07:49:00 a.m.  
Blogger ஈழநாதன்(Eelanathan) said...

நானும் முழுமையாக அவ்வாறு நம்பவில்லை சிறு பொறி ஒன்றைப் போட்டுப் பார்த்தேன் இப்படியும் ஒருபக்கம் இருக்குமா என்று உங்கள் கருத்தை அறிவதே அதன் நோக்கம்.மற்றையது இவ்வாறான பல படைப்புகள் வரவேண்டும் அப்போதுதான் இதனைப் பற்றிய தெளிவுடன் சரியான பாதை நோக்கி நகர்த்த முடியும் அந்த வகையில் சோபாசக்திக்கு முன்னோடிப் பட்டம் கொடுத்தால் கூட தவறில்லை.

ரோசா சாரு நிவேதிதாவின் உன்னத சங்கீதம் படித்தேன்.அதில் குழந்தை(சிருமி என்றாலும் பாலியல் முதிர்ச்சி ரீதியில் குழந்தை)யுடனான பாலியல் உறவில் அவர் அக்குழந்தையின் பக்கத்து நியாயத்தை எப்படி நிருப்பிக்கிறார்.பிள்ளையின் தகப்பனின் ஓரினச்சேர்க்கை அதனால் குழந்தைக்கு இவர் மேல் விளைந்த பிரியம் கூடவெ பாலியல் பற்றி அறியும் ஆர்வமுள்ள குழந்தை என இவர் தான் செய்தவற்றைத் தான் நியாயப்படுத்துகிறாரே ஒழிய தான் செய்வது சரியா தவறா எனத் தெரியாத குழந்தையின் பக்கம் பெசப்படவேயில்லை.விட்டால் நான்கு வயதுக் குழந்தை வித்தியாசமாக இருக்கிறதே என்று விளையாடக் கேட்டது அதனால் தன் ஆண்குறியை அவளிடம் கொடுத்தேன் என்று இன்னொரு அதியுன்னத சங்கீதம் எழுதுவார்.

12/16/2004 11:19:00 p.m.  
Blogger ROSAVASANTH said...

/அதில் குழந்தை(சிருமி என்றாலும் பாலியல் முதிர்ச்சி ரீதியில் குழந்தை)யுடனான பாலியல் உறவில் அவர் அக்குழந்தையின் பக்கத்து நியாயத்தை எப்படி நிருப்பிக்கிறார்/

இது குறித்து நான் எதுவும் சொல்லவில்லையே!

12/17/2004 08:58:00 p.m.  
Blogger ஒரு பொடிச்சி said...

if it's not you then who?!
ம்.............!

11/17/2005 04:28:00 p.m.  

Post a Comment

<< Home