@font-face { font-family: TSCu_InaiMathi; font-style:normal; font-size: 10pt; font-weight:normal; src:url(http://mathy.kandasamy.net/fonts/TSCUINA1.eot); }

Monday, June 20, 2005

சீடாரின்மீது வெண்பனி விழுகிறது - ஜென் கவிதைகள்



மலையின் ஆழ்சரிவுகளில்
காலடியில் க்ரிம்ஸன் இலைகள் நசுங்கத்
திரிந்தலையும் கலைமான் அழைக்கிறது.
அதன் தனிமைக்குரலை நான் செவியுறும்போது,
இந்த இலையுதிர் காலம்தான்
என்ன சோகம், என்ன சோகம்!
0

ஸாருமாரு
ஆண்.ஜப்பான்.9ஆம் நூற்றாண்டு


ப்பானைப்பற்றி நிறைய பிரேமை உண்டு; அத் தேசம், 'பொம்மை' போன்ற அழகிய பெண்கள், மென்மை, சாந்தம், அழகு + 'ரஃப்' ஆன ஆண்கள்! வன்கூவருக்கு வருமுன்னம் இந் நகரம் பற்றிய சித்திரத்துடன் இங்கு வசிக்கிற ஜப்பானியர்கள் பற்றியதும் கலந்திருந்தது. சிறு வயதுக் கதைப் புத்தகங்களில் நீண்ட மெல்லிய மீசையுடன் சிறிய மீன் கண்களுடன் பின்னாலே குடுமி வைத்திருந்த சீனத்து மற்றும் ஜப்பானிய ஆண்கள், பெண்கள், நெடிய மூங்கில் மரங்கள்...
மற்றும், பள்ளி ஓவிய வகுப்புகளில் தூரிகைகளை இலாவகமாய்க் கையாள்கிற ஜப்பான் மாணவர்கள், அவர்களது கலைத்துவமான எழுத்துக்கள் முதல் அவர்கள் குறித்து நிறைய பிம்பங்கள்; பிறகு, ஒரு நூதனமான உலகத்துள் அழைத்து செல்வதுபோல இருக்கும் படித்த ஸென் படைப்புகள். புதிர், தேடல், சரணடைதல் என அத் தத்துவம் உணர்வுத்தளங்களில் சென்று சலனப்படுத்தும்.
அவர்கள்சார் கலைத்துவமான திரைப்படங்களில், பின்னணியில் போகிற இசையே தன்னோடு எடுத்துச்செல்லும் பார்வையாளர்களை. (எல்லோருடையதும்போலவே) பாரம்பரியமிக்க அவர்களது கலாசாரம், வாழ்வியல் அழகியல்- இவற்றை எதிரொலிக்கும் கலைப் படைப்புகள், அவர்களது பாதிப்பில் விளைகிற எல்லாவற்றிலுமே இழைகிற நாதம் எங்கோ வெகுதூரங்களில் சாத்தியப்படுகிற மகா அமைதியை சாத்தியப்படுத்துகின்றன போலத் தோன்றும்...
ஒருவகையான சாய்வு மனோநிலையுடனே ஜப்பானிய படைப்புகளை அணுகிவருவது. சில வருடங்களிற்குமுன் வகுப்பறையில் நடந்த இனத்துவேச மற்றும் பெரும்பான்மை சமூகங்களால் அடக்கப்படுகிற சிறிய குழுமங்கள் பற்றிய உரையாடலின்போது, ஜப்பானியர்களை பின்னணியாகக்கொண்ட ஒரு படமும் Obasan என்கிற நாவலும் அறிமுகமாயின. இந்தப் பத்தி, 1994இல் வந்த David Guterson இன் நாவலின் படமாக்க வடிவமான Snow Falling on Cedars (1999) என்கிற, ஒரு, மிக மிக அழகான, படத்தைப் பற்றியது.
உண்மையில் அது ஒரு அழகான படம்! அழகான சீடர் மரங்கள் மேலே வெண்பனி விழுகிறது! படம்பூரா வியாபும் கவித்துவ அழகியலை இத் தலைப்பே சொல்லிவிடுகிறது. மரத்திலிருந்து ஒழுகிற நீர் வரை அழகியலின் ஈரம்பட எடுத்திருக்கிறார்கள்.

இப்படத்தின் கதைப்பின்னணி, 1954 இல் வோஷிங்டனிற்குத் தொலைவே, ஒரு மீனவச் சிறு நகரில், மர்மமான முறையில் ஒரு வெள்ளை மீனவன் இறந்துபோவதில் ஆரம்பிக்கிறது. இச் சிறு நகர்ப்புற மக்களிடையே, இச் சம்பவமானது இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னரிருந்திருக்கும், அமெரிக்க-ஜப்பானியர்கள் (Japanese American) மீதான அமெரிக்க மக்களின் அவநம்பிக்கையை மேலும் வலுக்கச் செய்கிறது. ஒரு ஜப்பானிய மீனவன் (இறந்தவனின் கூட்டாளி) சந்தேகத்தின்பெயரில் கைதாகிறான். அவனது மனைவி ஹற்சூ (Hatsue) இன் இளம்பிராயக் காதலன் இஸ்மேல் ((Ishmael) அந்த சிறுநகரின் பத்தரிகையாளன், அவன் அவள் தன்னை –இனப்பிரச்சினைகளின்பொருட்டு- 'ஏமாற்றியது' என்பதையும்மீறி அவளது கணவன் வெளியேவர உதவுவானா என்பதுதான் கதை. அதூடே, தொடரும் நீதிமன்ற விசாரணைகள், உணர்ச்சிகளை வெளிக்காட்டாத, புலனடக்கத்திற்கு கலாசாரரீதியாகப் பழக்கப்படுத்தப்பட்ட கைதான ஜப்பானியனை, குளிர்வான, ஒரு –குற்றஉணர்ச்சியற்ற- கொலையாளியாக வெள்ளை மக்கள் பார்த்தல், ஒரு இனத்தின்மீதான 'நம்பிக்கையின்மை' 'பாதுகாப்பின்மை' (Insecure) ஆய் உணர்தல், ஒரு நிரபராதியை எப்படியெல்லாம் பார்க்க வைக்கிறது என்பதையெல்லாம் வெளிப்படுத்துகிறது.
இரண்டாம் உலக யுத்தத்தின் பின், கனடாவிலும் அமெரிக்காவில் பலவிடங்களில்போல, வன்கூவரில் அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்து, முகாம்களில் இட்டது கனேடிய அரசாங்கம் (இதை அடிப்படையாக கொண்டதே மேலே குறிப்பிட்ட Obasan என்கிற நாவல்). பிழைப்புத்தேடி வாழ வந்து, உழைத்து, நிலங்களை வாங்கி முன்னேறிய அந்த மக்கள் கல்வி மறுக்கப்பட்டு கடின உழைப்பிற்காக (hard labour) நிறுத்தப்பட்டார்கள். இதற்குக் காரணமான, 1941 வருடம், பேர்ள் துறைமுகம் தாக்கப்பட்டபிறகு, மாறிய அமெரிக்கச் சூழலால், ஒரு இடத்தில அன்பான இரண்டு காதலர்களோட வாழ்வு எப்படிப் மாறிப்போகுது...

அத் தாக்குதலுக்கு முந்தைய அமெரிக்காவில், தனது குடியிருப்பிற்குப் புதிதாய் வருகிற சிறுமி ஹற்சூவை வியப்புடன் கண்காணிக்கிறான் சிறுவன் இஸ்மேல். சிறிது சிறிதாக, அந்த வெள்ளைப் பையனுக்கும் சின்ன ஜப்பான் பெண்ணுக்கும் வருது காதல்... வசந்த காலங்களில் சீடர் மர மறைவுகளூடே அவர்கள் கூடித் திரிவதும், மரத்திலிருந்து நீர் சொட்டிக் கொண்டிருப்பதும்... அத்தகைய அவர்களுடைய வளரிளம் பருவத்து (Aadolescence) க்காதல் துறைமுகத் தாக்குதலிற்குப்பிறகு, அது அமெரிக்க-ஜப்பானியர்கள்மீது திருப்பப்பட்டு, அவர்கள் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு முகாம்களிற்கு அனுப்பப்பட்டபோது பிரிந்துபோகிறது. இஸ்மேல் அமெரிக்க படைவீரனாய் போரிடுகிறபோது, ஹற்சூவினது கடிதம், அவர்கள் இணையமுடியாதெனவும் அவள் திருமணம் செய்துகொள்ளப்போவதையும் கூறுகிறது; போரிடலின்பின்னான, முகாமில், அதைப் படித்தபடி அழுகிறான்; அந்த யுத்தத்தில் அவனது கையை இழக்கிறான். ஹற்சூ ஜப்பானியனொருவனை (அவனும் அமெரிக்க இராணுவத்திலிருந்தவன்) மணமுடிக்கிறாள்; அவன், அவர்களது முதல் இரவில், அவளை ‘இது உன் முதல் தடவைதானே’ எனக் கேட்க அவள் ஓமென்பதும், தனது கை அகற்றப்படுகிறபோது இஸ்மேல் அவளை ‘ஜப்பானிய வேசை’ (Japs Bitch) என்று திட்டுவதும் ஆய் யதார்த்தமாய், ஒரு பயணம்போல, அந்தக் காதலில், உறவில், வாழ்வின் இயல்பில் நாமும் ஐக்கியப்பட்டிருப்பதுபோல கதை நகர்கிறது. யுத்தத்திலிருந்து ஒரு கையின்றித் திரும்பிவருகிற அவன், திருமணம் செய்துகொண்டுவிட்ட ஹற்சூவை மறித்துக் கேட்கிறான்: I know you'll think this is crazy, but all I want to do is hold you, and I think that if you'll let me do that just for a few seconds, I can walk away, and never speak to you again.
அவள் அது தன்னால் முடியாது என்றுவிட்டு நகர்வாள்.

பின்னர், நீதிமன்றத்தில் தனது கணவன் -மற்றும் தன்- ஜப்பானிய சமூகம் நடத்தப்படுகிற விதம் குறித்த ஹற்சூ (இஸ்மேலிடம்) சொல்லுவாள்: ''இது நியாயமே இல்லை.” '' it’s not fair”. அவன் சொல்லுவான்: it’s about all the unfair things we all do to each other. அந்த அவனது வசனம் -அவள் தன்னை திருமணம் செய்ய மறுத்ததை சுட்ட- மனிதர்கள் ஒருவருக்கொருவர் செய்கிற அநியாயங்களூடே, ஜீவநாடியாய் காதலைவைத்து, அழகான ஒரு கதையை படம் பிடித்திருக்கிறார்கள்.
அமைதியாய் உட்காந்திருந்து, ஜப்பானியர்களின் ஜென் கவிதைகள் படிக்கிறபோதும், இந்தப் படம்தான் நினைவோடு வருகிறது. இஸ்மேலின் காதலின் ஏக்கம் கலந்த கண்கள், சொல்லிக்கொண்டேயிருக்கின்றன (மாமன்னர் கோக்கோ, ஆண்.ஜப்பான்.830-884):
வசந்த காலத்தில்
வயல்களில்
பச்சிலைகள் சேகரித்தவண்ணம்
உனக்காகத்தான் நடந்து செல்கிறேன்,
என் ஆடையின்தொங்கும் கைகளில்
வீழும் பனி
திட்டுத் திட்டாய்ப் படிய.
0


ப்படியான கலப்பான பல்வித வியித்திர உணர்வலைகளுடன் படித்தது: பெயரற்ற யாத்ரீகன் என்றொரு ஜென் கவிதைகள் தொகுதி (தமிழில்: யுவன் சந்திரசேகர்). தற்செயலாகத்தான் இந்தப் புத்தகத்தை வாங்கினேன். யுவன் சந்திரசேகர், மோசமான புனைவாளாராக கவிஞராக பேச்சாளராக பலவிடங்களில் மனப்பாதிப்பு/பதிவு தந்தவர்.
1: சொல் புதிது இதழில் இவரும் செயமோகனும் பங்குகொண்டு பேசிக்கொண்ட கவிதை பற்றிய உரையாடல் (அதுவும் 10 இற்கும் மேற்பட்ட பக்கங்களில் என நினைவு) தந்த மனப்பாதிப்பு இன்னும் போகவில்லை. ஒலிப்பதிவுஇயந்திரத்தை போட்டிட்டு, தங்கட பாட்டுக்கு, அவர்கள் நடத்திய “கவிதை பற்றிய” உரையாடலில் வாசகர்களுக்கோ கவிதைகளுக்கோ ஏன் அவர்களுக்குத்தானும் பிரஜோயனம் உண்டா என்றால்....... தேரியவில்லை. அதைப் (முழுமையாக) படித்துவிட்டு, வாழ்க்கை வெறுத்துப்போய் இருந்தபோதுதான் என நினைக்கிறேன், இரண்டாவது 'கொடுமை' படித்தேன்.
2: ஆரண்யம் இதழில் யுவன் எழுதிய 22 காதற் கதைகள். கண்ணராவி, அதையெல்லாம் சேர்த்து காலச்சுவடு ‘ஒளி விலகல்‘ என்றொரு தொகுப்பாய், வெளியிட்டது. தமிழினி வெளியிட்ட இவரது குள்ளச் சித்தன் சரித்திரம் அபத்தம். இப்படி, இந்த யுவனே ஒரு அபத்தமாய்த்தான் மனப்பதிவு. பிடிக்கும் என்கிற எண்ணமே துளியுமற்று, சும்மா விரித்து படிக்க ஆரம்பித்த எதிர்பாராக்கணம் ரம்மியமா மனமெங்கும் நூல் வியாபித்தது. இப்போதுகூட இதை எழுதுகிறபோது புத்தகத்தின் 95 வீதமான கவிதைகளை இந்த பத்தியெங்கும் பரப்பத் தோன்றுகிறது, அப்படியொரு ரம்யமும் சாந்தமும்..
மொழிபெயர்ப்பென்று பார்த்தால், அது பெரிதாய் தொந்தரவு செய்யவில்லை. தொடர்ச்சியும் இடறலின்மையுமே முக்கியம். moss ஐ ஈரநிலச்செடி என்றும், Pine tree இற்கான தமிழ்ச் சொல்லாய் ஊசியிலை மரமென்றும் பைன் என்றுமும் உபயோகிக்கிறார். இரண்டும் பிடித்திருந்தது. Moss என்பதை பாசி என உபயோகித்தால் எளிமையாக, நன்றாக இருந்திருக்குமென்று பட்டது. இவைகள் சில கவனங்களே.
அடிப்படையில், அமைதியானதொருபோது வாசிக்கையில் மிகவும் ஏகாந்த உணர்வைத் தந்தது நூல். ஸோக்கா! ஸென்/ஜென் கவிதைகளை தாய்மொழியில் படிக்கையில் ஒருவித கிறுக்கும் மோக/னநிலையும் எழுந்தது. வாசிப்பை தடைசெய்யாத புத்தக வடிவமைப்பு. ஜென் கவிதை நேசகர்கள் அல்லாதோரும் கூட விரும்பக்கூடிய நூல்.




நூலிலுள்ள, சுவாரசியமான, சில ஜென் கவிதைகள்

1
எனது மங்கைக்காக நான்
ப்ளம் மரத்தின்
உச்சாணிப் பூக்களைப் பறித்தபோது
கீழ்க் கிளைகள்
பனித்துளிகள் சொட்டி
நனைத்தன என்னை
0

ஹிட்டோமாரோ
ஆண்.ஜப்பான். 8-ஆம் நூற்றாண்டு


2
எட்டங்குல நீளம் அது. உறுதியானது. என்
செல்லப்பொருள். இரவில்
தனித்திருக்கும்போது
முழுக்கத் தழுவிக்
கொள்கிறேன் அதை –
வெகுகாலமாயிற்று
அழகான பெண்ணொருத்தி அதைத்
தொட்டு. என் கோவணத்துக்குள்
இருக்கிறது ஒரு
முழுப் பிரபஞ்சம்!
0

இக்யு ஸோஜன்

3
எதிலும் முனைப்பின்றிச்
சோம்பலாய் இருக்கிறேன். தன்னைத்
தானே பார்த்துக்கொள்ளட்டுமென
விட்டுவிட்டேன் உலகத்தை.
பத்து நாட்களுக்கான அரிசி
என் பையில் இருக்கிறது.
கணப்பருகில் ஒரு கட்டுச் சுள்ளிகள்.
எதற்குத் தொணதொணப்பு
மாயையையும் ஞானத்தையும் பற்றி?
கூரையில் வீழும்
இரவுநேர மழையைச் செவிமடுத்தபடி
வசதியாக அமர்ந்திருக்கிறேன்,
கால்கள் இரண்டையும் நன்கு நீட்டி.
0

ட்டய்கு ரியோக்கன்

4
உனது மரணகாலம்
நெருங்குகிறது, நீ
இறந்து விடுகிறாய்
என்றால், மிக நல்லது!

உனது மரணகாலம்
நெருங்குகிறது, நீ
இறக்காதிருக்கிறாய்
என்றால் - மிக மிக நல்லது!
0

ஸேங்காய் கிபன்

5
நான் பிறந்த இந்த உலகத்தை
இறக்கும்போது
விட்டுச் செல்கிறேன். ஓர்
ஆயிரம் நகரங்களுக்கு,
கணக்கற்ற இல்லங்களுக்கு
என்னைச் சுமந்து சென்றிருக்கின்றன
என் கால்கள் -
இவையெல்லாம் என்ன?
நீரில் பிரதிபலிக்கும் நிலா,
வானில் மிதக்கும் பூ,
ஹோ!
0

கிஸன் ஸென்ரை
ஆண். ஜப்பான். 1871-1878


6
எங்கே போனான் ஸோக்கன் என
எவராவது கேட்டால்,
இதை மட்டும் சொல்லுங்கள்.
“வேறொரு உலகத்தில்
கொஞ்சம்
வேலையிருந்தது அவனுக்கு.”
0

யாமஸாக்கி ஸோக்கன்
ஆண். ஜப்பான். ?-1540


7.
இரண்டு
அல்லது மூன்று
நூற்றாண்டுகள் வசிக்க
எண்ணியிருந்தேன். இருந்தும்,
இதோ என்னிடம்
வருகிறது மரணம், வெறும்
எண்பத்தைந்து வயதே நிரம்பிய
குழந்தையிடம்.
0

ஹனபுஸா இக்கீய்
ஆண். ஜப்பான். ? – 1843


8.
நிஹோன் எனோக்கியில் உள்ள
எனது கல்லறைக்கு
வந்து சேர்கிறேன்.
ஆனந்தமாயிருக்கிறது. இங்கே,
என் அருகில்,
நண்பர்கள் கிக்காக்குவும்,
இட்ச்சோவும் இருக்கிறார்கள்,
எனக்குப்
பேச்சுத் துணையாக.
0

க்கிட்டா ட்டக்கெக்கியோ
ஆண். ஜப்பான். ? – 1856


9.
என்ன வேடிக்கை!
அதோ, தியான அறையில்
தேநீர் விநியோகிக்கும் நடிகன்
நான்தான்
தான் என்று
நினைத்துக் கொள்கிறான்!
0

லூ ஹார்ட்மேன்
ஆண். ஆமெரிக்கா. 20 ஆம் நூற்றாண்டு


10.
எதிலும் நம்பிக்கையின்றி
சும்மா அமர்ந்திருக்கிறேன்,
என் சுவாசத்தைக் கவனித்தவாறு.
முப்பது வருடங்களுக்கு பிறகும்
அது
வெளியில் போகவும்
உள்ளே வரவுமாக
இருக்கிறது
0

ஆல்பர்ட் கோல்ஹோ
ஆண். ஆமெரிக்கா. 20 ஆம் நூற்றாண்டு

-------------------------------------------
பெயரற்ற யாத்ரீகன்
ஜென் கவிதைகள் (தமிழில: யுவன் சந்திரசேகர்)
உயிர்மை பதிப்பகம் (டிசம்பர் 2003)

Monday, June 13, 2005

குசும்புக்காரன்கள்


என்னைப் பற்றி
இவங்களுக்கென்ன தெரியும்?
நினைத்தாலே சிரிப்புத்தான்
என்ர வாழ்க்கையே மிகப்பெரிய நகைச்சுவையாய் இருந்தது
A dance that's walked
A song that's spoke
நான் ‘இருந்த இடத்துக்கு’ இவங்க சொன்ன பேர் ஒண்டு
இருந்த எனக்குத் தெரியாதா, என் னெண்டு?
சன்னலுக்குள்ளால பாத்தண்டுதான் இருந்தன்
தங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் எண்டாங்கள்!
அப்பிடி எண்டாங்கள் இப்பிடி எண்டாங்கள்
அதெண்டாங்கள் இதெண்டாங்கள்
அசந்தா
சடாரெண்டு இன்னொண்டக் காட்டினாங்கள்
அட! இவங்கள நினைச்சாலே சிரிப்போ சிரிப்புத்தான்!
என்னடா இப்ப வேற எண்டாலோ
அதுதான் இது எண்டாங்கள்!
விழுந்து கிடந்து சிரிப்பன்
வயிறு நோகச் சிரிப்பன்
ஒண்ட வெட்டினா இன்னொண்டத் தளைச்சு
வித்தியாசம் பார் எண்டாங்கள்
ஐயோ! கடவுளே! இவங்கள நினைச்சாலே சிரிப்போ சிரிப்புத்தான்!
நான் விழுந்து கிடந்து சிரிப்பன்
வயிறு வெடிக்கச் சிரிப்பன்
---என்ர வயிறுதானே...
ஆஹ்ஹாஹா அஹ்ஹாஹா!
0



Who? வை 'ஆரத்த்' தழுவி

Wednesday, June 01, 2005

ஜெயமோகனின் 'பின்தொடரும் நிழலின் குரல்'

இயலாமையின் புகலிடம் தாய்மையா?

-ராஜினி

நன்றி

தமிழக மற்றும் ஈழ இடதுசாரி வாசகர்கள் மத்தியில் அண்மையில் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நாவல், ஜெயமோகனின் பின்தொடரும் நிழலின் குரல். சிலர் இதை தமிழில் வெளிவந்துள்ள குரூரம் எனவும், ஜோர்ஜ் ஓவலின் ‘1984’ என்றும் விமர்சிக்கின்றனர். சிலர், இடதுசாரி முகாமை கேள்விக்குள்ளாக்கும் காலத்தின் தேவையாக இந்நூலைக் காண்கின்றனர். இன்னும் சிலரோ இதன் மீது இறுக்கமான மௌனத்தை சாதிப்பதன் மூலம் இதைப் பேசப்படாப் பொருளாக்க முயல்கின்றனர்.

ஒட்டு மொத்தத்தில் இந் நாவல் பற்றின எதிர்மறை, நேர்மறை விமர்சனங்கள், மௌனப் பகிஷ்கரிப்புக்கள் யாவும் கம்யூனிச கட்சிமுறைமையிலும், சோவியத் நாட்டின் சோசலிச பொருளாதார நிர்மாணத்திலும் வெளிப்பட்ட அதிகாரத்துவ போக்குகளையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொய்மையையும் வன்மமாக சாடும் இந்நூலின் விமர்சன தன்மையின் மீதானவையாகும்.

கதையின் பிரதான பேசுபொருளான கம்யூனிச கட்சி முறைமை, சோசலிச பொருளாதார நிர்மாணத்தில் வெளிப்பட்ட சோசலிச விரோத போக்குகள் என்பனவே வாசகரின் கவனத்தையும் பிரதானமாக ஈர்ப்பதால், வாசகர்கள் இரு முகாமாகப் பிரிந்து விவாதங்களும் அதைச் சுற்றிச் சுற்றியே நடைபெறுகின்றன. இதைக் கடந்து, இக்கதையின் ஓட்டத்தில் வெளிப்படும் இஸ்லாமிய எதிர்ப்புணர்வு, தலித் விரோத மனோபாவம், சரணாகதி சமரசவாதம், புரட்சிகர வன்முறையைக் கொச்சைப்படுத்துதல், ஆன்மீகம் நோக்கிய அதீத சரிவு, ஆணாதிக்கம்...... என்பன மீதான விவாதங்கள் இரண்டாம் பட்சமாக்கப்பட்டு விடுகின்றன.

இந்நாவலை, பெண்ணிய வாசிப்புக்கு உள்ளாக்குவதன் மூலம் இதில் புதைந்துள்ள ஆணாதிக்க சிந்தனை ஓட்டத்தை அடையாளங் கண்டு அதை நிராகரிப்பதே இங்கு எனது நோக்கமாகும்.

இக்கதையின் பிரதான கதாபாத்திரம் அருணாச்சலம் எனும் தொழிற்சசங்கவாதி. அருணாச்சலம் எனும் இந்த ஆணின் அரசியல் வாழ்வு, தனிப்பட்ட வாழ்வு, ஆகிய இரு தளங்களையும் தொட்டு கதை பின்னப்பட்டுள்ளது. இவன் நேரில் உறவாடும் மனிதர்கள், இவனுள் பாதிப்பை ஏற்படுத்திடும் கடந்தகால வரலாற்றுப் பாத்திரங்கள் ஆகியோரது அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்வும் பிரதான கதாபாத்திரமான அருணாச்சலத்தின் வாழ்வுக்கு அக்கம்பக்கமாக சித்தரிக்கப்படுகின்றன. ஒப்பீட்டளவில் ஒத்ததன்மையுடைய அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்வை அநுபவித்த ஆண்களை மையப்படுத்தி கதையை புனைந்திருப்பதன் மூலம் தனது தர்க்கங்களைப் பலப்படுத்தி ஒரு சிந்தாந்தத்தை உருவாக்க முயல்கிறார் கதைசொல்லி.

குடும்பம்:

அருணாச்சலத்தின் முன்னோடியான மாதவ நாயர் இறுக்கமான ஸ்டாலினிஸ்ட். கட்சி மற்றும் சங்க விதிகளில் மிகக் கறாரானவர். தனது சொத்துக்களையெல்லாம் கட்சிக்கு அளித்துவிட்டவர். தனது இளமைக்காலத்தில் பொலிசின் கடும் அடக்குமுறைக்கு மத்தியிலும் இரகசியமாக இறப்பர் தோட்டங்களில் தொழிலாளர்களை திரட்டி தொழிற்சங்கத்தை உருவாக்கியவர். ஈற்றில், கட்சி மேற்கொள்ளப் போகும் புதிய சீர்திருத்த நிலைப்பாட்டுக்கு ஒத்துவரமாட்டார் என்பதால், மூப்பைக் காரணங்காட்டி அவரை தொழிற்சங்கத் தலைமையிலிருந்து நீக்கிவிட்டு அருணாச்சலத்தைத் தலைவராக்குகின்றனர். போக்கிடமற்ற அவர், தனது துணிப்பையுடன் தான் தங்கியிருந்த கட்சி தொழிற்சங்க காரியாலயத்திலிருந்து (ஒருகாலத்தில் அவருக்கு சொந்தமான நிலமும் கட்டிடமும்) வெளியேறுகிறார். அவருக்கென யாருமில்லை. இந்த தள்ளாத வயதில் இம்மனிதர் எங்கே போயிருப்பார் என இளகிய சிந்தையுள்ள அருணாச்சலம் கவலைப்படுகிறான். மாதவ நாயருக்கு முன்னர் ஒரு இரகசிய காதலி இருந்திருக்கிறாள். அவர்களது உறவில் ஒரு மகன் பிறந்தது இவருக்குத் தெரியாது. வயோதிப தொழிற்சங்கத் தலைவர் அவளை தஞ்சமடைகிறார். அப்பெண்ணும் மகனும் இவரை அன்புடன் ஏற்று பணிவிடை புரிந்து பாதுகாக்கின்றனர்.
ஒவ்வொரு ஆணையும் இறுதிக்காலத்தில் பாதுகாப்பதற்க்கு, மனஆறுதல் வழங்குவதற்க்கு அவனுக்கென குடும்பம், மனைவி, பிள்ளைகள் தேவை என்பதை கதாசிரியர் வலியுறுத்துகிறார். நாவலை வாசிப்பவரின் மனதில் எதிர்காலம் பற்றிய அச்சமூட்டும் எச்சரிக்கையை ஏற்படுத்திடுவதன் மூலமாக குடும்பம் பற்றிய சித்தாந்தத்தை மீள்ஸ்தாபிதம் செய்கிறார்.

நல்மனைவி:

அருணாச்சலத்தின் அனைத்து துயரங்களையும் தாங்குபவளாக அவனது மனைவி சித்தரிக்கப்படுகிறாள். அவனது பற்றாக்குறையான வருவாயில் மிகவும் சிக்கனமாக குடும்பத்தை நடாத்துகிறாள். குழந்தையை பராமரித்திடும் முழுப் பொறுப்பும் அவளைச் சார்ந்ததே. தொழிற்சங்க, கட்சி செயற்பாடுகளின் போது அவனுக்கு ஏற்படும் மன உபாதைகளுக்கு வடிகாலாக அப்பெண் இருக்கிறாள். அருணாச்சலம் அவளுடன் சீறிப் பாய்வான், அவளை மிகவும் உதாசீனப்படுத்துவான், சில சமயங்களில் அடிப்பான், அவர்களுக்கிடையே சண்டை மூழும். கோபித்துக் கொள்வார்கள். ஆயினும் அவன் வெளியே சென்று வருகையில் அவனுக்கான சேவைகளை வழங்க அவள் தயாராகவே இருக்கிறாள். அவனது துயரங்களை சுமப்பவளாக, அவனை தன்னலமற்று அன்பு செய்பவளாக, அரவணைத்து தைரியமூட்டுபவளாக, அவனது வீழ்ச்சியின் போது அவனைத் தாங்கி பலப்படுத்துபவளாக...

இந்தப் பெண் பாமரத் தன்மையானவள், மட்டுப்பட்ட உலக அறிவைக் கொண்டிருப்பவள், அவளுக்கென தனித்துவமான வாழ்க்கை கிடையாது, முற்றிலும் கணவனை சார்ந்து அவனுக்கூடாக தனது இன்ப துன்பங்களை இனங் காண்பவள். இத்தகைய பெண்தான் நல்மனைவிக்குரிய பண்பைக் கொண்டிருப்பவள் என்பதும் வரிகளுக்கிடையே புதைந்திருக்கிறது.

அருணாச்சலத்திற்க்கும் கட்சிக்குமிடையிலான முரண்பாடு கூர்மையடைந்து ஈற்றில் அவன் கட்சியிலிருந்து வெளியேற்றப்படுகிறான். அரசியல் வாழ்வில் ஏற்பட்ட தோல்வி அவனை மனநோயாளியாக்குகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறான். மனைவியின் அன்பான பராமரிப்பால் குணமடைகிறான்.
ஒவ்வொரு ஆணினதும் வெற்றிகரமான வாழ்வுக்கு மாத்திரமல்ல அவனை வீழ்ச்சியிலிருந்து தூக்கிவிடுவதற்க்கும் “நல்மனைவி” அவசியம் என்பதாக கதை அமைந்துள்ளது.

பாலியல்:

உளப்பிறழ்விலிருந்து மீண்ட அருணாச்சலம், மனைவியின்(பெண்ணின்) வட்ட யோனிதான் தனக்கு புதுவாழ்வு அளித்ததாகக் கூறுகிறான். பெண்ணுடனான பாலுறவில் அவன் பலமடைகிறான். ஆணின் மனமகிழ்விற்கும், உளவியல் ஆரோக்கியத்திற்க்கும் பெண்ணுடல் அவசியம். மறுபுறம், பெண் தன்னை எக்கணமும் ஆணுக்கு அர்ப்பணிக்கத் தயாராக இருக்க வேண்டும் எனும் கருத்துகள் புதிய கோணத்திலிருந்து கூறப்படுகின்றன.
கட்சியுடனான முரண்பாட்டில் மனம் வெதும்பியிருந்த காலத்தில் ஒருநாள் கிராமக் கோயிலுக்கு செல்கிறான் அருணாச்சலம். அங்கு நிறுவப்பட்டுள்ள பெரிய சிவலிங்கம் அவனை ஈர்க்கிறது. ஆண் லிங்கம் நிமிர்ந்து நிற்கிறது அதன் கீழ் வட்டவடிவிலான பெண் இதழ்கள். பெண்குறியின் மீது பதிந்துள்ள ஆண்குறி. அருணாச்சலத்திற்க்கு மெய் சிலிர்க்கிறது. ஆணை பெண் தாங்குகிறாள். ஆணின் பலம் பெண்ணை சார்ந்து ஸ்தாபிக்கப்படுகிறதாக அவன் உணர்கிறான். பெண்ணை அடக்கிடும் லிங்கமைய கருத்தாக்கத்தை ஆசிரியர் மெதுவாக ஒதிக்கிவைத்துவிட்டு, புதிய கோணத்தில் லிங்க ஆதிக்கத்தை நியாயப்படுத்துகிறார்.

பெண்மை-தாய்மை:

ஆண்களின் உலகில் முரண்பாடுகள் சகித்துக் கொள்ள முடியாது போகும் போது அதற்க்கு தீர்வு தருபவர்களாக நூலாசிரியர் பெண்களைக் காட்டுகிறார்.

சோவியத் ஒன்றியத்தில் சோசலிசம் தோல்வியடைகிறது. சோசலிசத்தின் பெயரால் மக்கள் மீது அடக்குமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் வழியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் அதிகாரத்துவமயப்பட்டு சீரழிகிறது. மனிதம் சிதைக்கப்படுகிறது. ஆண்களினால் தலைமை தாங்கப்படுவதனால் தான் வன்முறைகளும் அழிவுகளும் உலகில் நிகழ்கின்றன. கொடிய யுத்தங்கள் நடைபெறுகின்றன. இந்த அழிவிலிருந்து உலகை பெண்கள் தான் மீட்க வேண்டும். தாய்மை உணர்வுடைய, அன்பு, கருணை, இரக்கம், தியாகம் ஆகிய குணாம்சங்களைக் கொண்ட பெண்கள் புரட்சிகளுக்கு தலைமைதாங்கும் போதுதான் அழிவுகள் தடுக்கப்படும். மனித குலம் பாதுகாக்கப்படும். தமது தாய்மையின் மூலம் பெண்கள் தம்மையும் தமது பிள்ளைகளையும் ஆண்களையும் இரட்சிக்க வேண்டும் என கதாசிரியர் விபரிக்கிறார்.

எத்தனை இலகுவாக தமது ஆயிரமாயிரமாண்டு கால ஆணாதிக்க சீரழிவுகளை பெண்களின் தலையில் சுமத்திவிட்டு தப்பித்துக் கொள்ள முயல்கிறார். உண்மையில் இது ஒரு கேலிக்கூத்தாக தெரியவில்லையா? தமது ஆதிக்கத்தின் மூலம் ஆண்கள் உலகையே வன்முறைக் காடாக மாற்றியுள்ளனர். அதைப் பெண்கள் தான் மீள சீரமைத்து மனிதத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்... அதுவும் "பெண்களுக்கேயுரித்தான" தாய்மை, அன்பு, கருணை, தியாகம் ஆகிய குணாம்சங்களைப் பிரயோகித்து.

இவ்விடத்தில், கதாசிரியரை நோக்கி ஒரு அடிப்படைக் கேள்வியை எழுப்புகிறேன். சமூக ரீதியாக அதிகாரங்கள் மறுக்கப்பட்டிருக்கும் பெண்கள் சமூகத்திற்கு தலைமை தாங்குவதற்கு அவ்வளவு இலகுவில் ஆணாதிக்க உலகு சம்மதித்துவிடுமா?

இதிலுள்ள நகைச்சுவை என்னவென்றால், தம்மை அடக்குமுறைக்குள்ளாக்கி வரும் ஆண்களையும், அவர்களால் சீரழிக்கப்பட்டுவரும் சமூக அமைப்பையும் ஈற்றில் பெண்கள் தான் காப்பாற்ற வேண்டுமாம்.

கதையின் பிரதான அண் கதாபாத்திரத்தின் இயலாமை, மனச்சோர்வு, ஆத்திரம்... அனைத்துக்கும் அவனது மனைவி எப்படி வடிகாலாக அமைகிறாளோ, அதேபோல் ஆண் உலகின் தோல்விகள், இயலாமை, முரண்பாடு, பகைமை... அனைத்துக்கும் பெண்கள் வடிகாலாக இருக்க வேண்டுமென பெண்களிடம் கோரிக்கை வைக்கப்படுகிறது. இதைப் போன்ற கயமை வேறெதுவும் இருக்க முடியாதென்றே நான் கருதுகிறேன்.
சுருங்கக் கூறின் நவீனகால ஆணாதிக்க தமிழ் இலக்கியத்திற்கு இந்நூல் ஒரு வகைமாதிரியாகும்.

பி.கு:

தாயாகும் உள்ளாற்றலைக் கொண்டிருப்பவர்களாதலால் பெண்கள் இளகிய சுபாவமுள்ளவர்கள் எனும் ஆணாதிக்க ஐதீகத்தை மார்க்சியக் கொள்கையை நம்பும் ஆண்கள் பலரிடமும் காணக் கூடியதாயுள்ளது. அவ்வாறான குணாம்சங்களை வெளிப்படுத்தாத போது அதுவே பெண்கள் மீதான குற்றச்சாட்டாகவும் வெளிப்படுகிறது.
எனது ஆண் நண்பர் ஒருவருடன், இந்தியா டுடே வாஸந்தியின் ஈழப் போராட்டத்திற்கு எதிரான குரூர எழுத்துக்கள் சந்திரிகாவின் சர்வாதிகாரத்திற்கு துணைபோவது பற்றி உரையாடிக்கொண்டிருக்கையில் நண்பர் இந்த உரையாடலுக்கு புறம்பான ஒரு கருத்தையும் தெரிவித்தார். அதிகாரம் கைகளுக்கு வரும்போது ஆண்களிலும் விட பெண்கள்தான் சர்வாதிகாரிகளாவும் குரூரமானவர்களாகவும் இருக்கிறார்கள் என்றார். இதன் மறுபுறம், அவர்கள் தாய்மைக்கு உரித்தான தமது இளகிய சுபாவத்தை புதைத்துவிட்டார்கள் எனும் குற்றச்சாட்டும் அடியோடிக் கிடந்தது. மார்க்சியரும் சமூக ஆய்வலருமான எனது நண்பரின் இக் கருத்து எனக்கு அதிர்ச்சியூட்டியது.

பிரேமதாச சர்வாதிகாரியாக செயற்படுகையில் அது ஆச்சரியமூட்டவில்லை. துக்ளக் சோவும் இன்னபிற இந்து பார்ப்பனிய வெறி கொண்ட ஆண்களும் ஈழப் போராட்டத்தை அவமதிப்பது இயல்புக்கு மாறானதாகப் படவில்லை. அது அவர்களின் ஆதிக்க அரசியலாக அடையாளங் காணப்படுகிறது. ஆனால் சந்திரிகா சர்வாதிகாரியாக செயற்படுவதும், வாஸந்தி குரூரமாக சிந்திப்பதும், ஜெயலலிதாவின் மோசடிகளும் மாத்திரம் அதீதமானதாக தென்படுகிறது? இதை ஏன் உடனடியாக ஆதிக்க அரசியலுடன் தொடர்புபடுத்த முடியாது போகிறது? பெண் சுபாவம் பற்றிய கதையாடல்கள் எல்லாம் ஏன் அநாவசியமாக வெளிப்படுகின்றன?

எதற்காக பெண்களிடம் அதீதமான இளகிய தன்மையை, விசேட பண்புகளை எதிர்பார்க்க வேண்டும்? மறுபுறம் பெண்கள் அதிகாரித்துவவாதிகளாக, சர்வாதிகாரிகளாக, குரூர சிந்தனையுடையவர்களாக இருக்கிறார்கள் என்பதற்காக ஏன் அதிர்ச்சியடைய வேண்டும்? பெண்களை மனிதர்களாகப் பார்த்தால் இந்த தடுமாற்றம் ஏற்படாதல்லவா?

சமூக விஞ்ஞானத்தில் ஆண்கள் முழமையடைய முடியாதிருப்பதன் காரணம், பெண்கள் பற்றிய கண்ணோட்டத்தில் ஆண்கள் சமூக விஞ்ஞானிகளாக இல்லாதிருப்பதாகும்.
0


-ராஜினி
(நன்றி: சக்தி 2001 மே- இதழ்-26, நோர்வே)