@font-face { font-family: TSCu_InaiMathi; font-style:normal; font-size: 10pt; font-weight:normal; src:url(http://mathy.kandasamy.net/fonts/TSCUINA1.eot); }

Wednesday, July 27, 2005

பாப்லோ நெரூதா:

-"நீ" என்னை 'அரசி' ஆக்கினாய்
-"நீ" என்னை 'மகிழ்ச்சியற்ற ஒருத்தி' ஆக்கினாய்
-"நீ"என்னை 'கடினமானபோது உன்னுடன் வருபவள்' ஆக்கினாய்
-"நீ" என்னை 'காத்திருப்பவள்' ஆக்கினாய்
-"நீ" என்னை 'தீயவள்' ஆக்கினாய்
-"நீ" என்னை 'நிர்வாண அழகி' ஆக்கினாய்
-"நீ" என்னை 'மறுபடி வரும்வரை உனக்காய் பாத்துக் கொண்டிருப்பவள்' ஆக்கினாய்
-"நீ" என்னை 'ஒவ்வொருநாளும் "உன்னை" இழந்துகொண்டிருந்தவள்' ஆக்கினாய்
-"நீ" எனக்காய் 'மனைவி இழந்தவனின் டாங்கோ' ஆக்கினாய்
-"நீ" என்னை 'கைவிடப்பட்டவள்' என்றாக்கினாய் .............................


'நான்' உன்னை
'மாபெரும் மூத்திரக்குடுக்கை' ஆக்கினேன்


பாப்லோ நெருடாவை ஒருவள் பெற்றுக்கொள்ளுதல் என்பது, அவருடைய ஆணாதிக்க/வயமூட்டும்/தன்னல + தன்னகங்காரமிக்க கருத்துக்களை காவி வருகிற எழுத்துக்களை, ஒரு 'பெண்'ணாய் அக்கணம் தகவமைத்து பழக்கப்படுதல் என்பதுடன் இணைந்துதான் நிகழ்கிறது. அவரை ஒரு பெண் மொழிபெயர்ப்பது, அவரது 'புகழ்பாடலால்' (glorification) நெகிழ்ச்சிக்குண்டான மனோநிலையுடனேயே நிகழும். இதனால் ஒரு ஆண் அவரை உள்வாங்கி, அவரது உளத்தளத்தை –அரசியல், சமூக- பின்புலத்தை அடைந்து கவிதைகள் ஒருவனால் மொழிபெயர்க்கப்படுவது உகந்ததாய்ப் படுகிறது (அவரது அரசியலை/காதலை ஆண்கள்தான் தமிழில் பெயர்த்திருப்பார்கள்).

'பாப்லோ நெரூதா கவிதைகள்' தொகுதி (டிசம்பர் 2004) உயிர்மையால் - சுகுமாரனது மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளது. வாசகர்/தமிழ்மொழி பற்றிய அலட்சியத்துடன் கவிதைகள் மொழிபெயர்க்கப்படவில்லை என்பதை அவரது முன்குறிப்புகள் ஊடாக உணர முடிகிறது. சுகுமாரனது உழைப்பும் பா.நெ. மீதான அவரது ஈடுபாடும், கூடவே, தமிழில் நீண்ட கால வாசிப்பும் பரிச்சயமும், தானே ஒரு கவிஞராக இருப்பதும் அவருடைய மொழிஆளுமையும் இத் தொகுப்பிலுள்ள நீள் கவிதைகளை பெயர்த்தெழுதுவதற்கு நன்கு உதவியிருக்கின்றன.

இத்தகையதொரு தொகுப்பின் வரவு பல வகைகளில் முக்கியமானது, அதனால், மூலக் கவிதையின் அதி ஆழ உருக்கங்களை இப் பெயர்ப்புகள் இழந்திருக்குமாயின் மொழிபெயர்ப்பாளராய் மற்றும் பாப்லோ நெருடாவின் '...கவிதைகளின் மீதான விமர்சனம் தீண்டாத ஆர்வத்தின் விளைவாக அவரது முக்கியமான நூல்களில் பெரும்பான்மையானவற்றை வாங்கிச் சேர்த்திருந்த(பக். 09)' வாசகனாய் சுகுமாரனுக்கோ அவர் போன்ற வேறு யாருக்குமோ எழக்கக்கூடிய வருத்தங்கள் என்வரையில் சிறிதளவும் இல்லை; பா.நெருடாவே வந்து அந்த அற்புதக் கவிதைகளை தமிழில் மீள எழுதித் தருமாப்போல வேண்டுமென 0.0000000000.....1% அவா கூட இல்லை.

காதல் பற்றின கதையாடல்கள் சூழ் பதின்மத்தில் அருமையான சினிமாப் பாடல்களின் இடம்போன்ற ஒன்றை எடுத்த அவரது காதற் கவிதைகளிற்கு என்னால் செய்யக்கூடிய மரியாதை: அ.மார்க்ஸ் வாஸந்திக்கு மலம் துடைத்து அனுப்பியது போன்ற ஒன்றுதான். வாஸந்திக்கு அப்படி எதிர்ப்புத் தெரிவித்தது தொடர்பாக அன்றைக்கு சரியாக என்ன உணர்ந்தேன் என்பது மறந்துவிட்டது; அதில், மலம் குறித்த அருவருப்பு, கட்டாயம் இருந்திருக்கும். இப்போதாயின், அதை நினைவுகூர்ந்து, அ.மார்க்ஸிற்கு எதிர் தளத்தில் இருப்பவர்களே 'மலத்தை இழிவென எண்ணியதன் வெளிப்பாடு அல்லவா அது' என வாதிக்கக் எழுதக் கூடும். அப்படியல்லாமல், மலம்தான் இழிவின் குறியீடு, அவமானப்படுத்தலின் குறியீடு என்றானால், பாப்லோ நெருடா நூற்றாண்டின் பொருட்டு அவரது இந்தப் பக்கங்களை உபயோகித்துச் செய்ய நினைப்பதும் அதையே தான். இது சுகுமாரனை அவமானப்படுத்த அல்ல. மாறாக, Pablo Neruda is, indeed, a piece of shit என்பது -'குறைந்தபட்சம் சிலருக்கு' என்றாவது- பலருக்கும் தெரியவேண்டும் என்பதால்.

காலனியாக்கத்தில், மூன்றாமுலக நாடுகளை ஆக்கிரமித்த ஆங்கிலேய கனவான்கள், தம் பெண்களைக் கதிரைகளில் இருத்தியும், மார்புகளை கொர்செற் போட்டிறுக்கிய -அவர்களுக்கு- உயர்-ரகவான அக்காலத்தைய 'கண்ணியமான' ஃபாஷன் ஆடைகளுடன் புகைப்படங்கள் எடுத்தும், தம் வழிகளில் தம் நிலங்களில் எத் திக்கும் சுதந்திரத்துடன் திரிந்த 'மூன்றாமுலக' பெண்களது நிர்வாணங்களை, கேட்பாரற்று, காட்டு விலங்குகளைப்போல 'படம்' பிடித்ததும் போலத்தான், இந்த பாப்லோ நெருடா என்கிற புரட்சியாளனின் மூன்றாமுலக பெண்கள்மீதான பார்வையும் இருந்தது. he shows no remorse, no remorse என மரணதண்டனைக் கைதிகளை எல்லாம் பதட்டத்துடன் பார்த்துப் பழகிய மக்கள் குழாம் நூற்றாண்டுகளாக இந்த மனிதர்(கள்) தனது சுயசரிதத்தில் தானும் அத்தகைய remorse ஐ தான்(ம்) 'பாவித்த'வர்கள் குறித்துக் கொண்டிருந்தாரா என்பதை தேடிப் பார்த்ததில்லை. ஏதோ பாப்லோயியமே விமர்சனங்களிற்கு அப்பாற்பட்டதென்பதுபோல, 'புரட்சி' என்கிற சொல்லைப் படித்ததுடன் கிட்டும் இன்பத்துடன் பல் தேசங்களில் பா.நெருடாவின் வாலைப் பிடித்தபடி திரிகிறார்கள் முற்போக்கு இளைஞன்கள்; அலுக்காமல் சலிக்காமல் தூசுதட்டப் படுகிறார் அவர்.

காலச்சுவடில், பா.நெருடாவின் ஆணாதிக்கத்தை வெளிப்படுத்தும் தரவுடன், ரவிக்குமார், தனது சில அவதானங்களைக் குறித்து எழுதியிருந்தார்:

இலங்கையில் நெரூடாவுக்கு ஏராளமான பெண்கள் கிடைக்கிறார்கள். அவர்களில் பெருபாலானோர்
"காலனியத்தின் விளைபொருட்கள்". ...இப்படிப் பெண்கள் சுலபமாகக் கிடைத்தாலும் நெரூடா
திருப்தி கொள்ளவில்லை. அவரது உடல் பெரு நெருப்பாக இரவு பகல் இடையறாது எரிந்து
கொண்டிருந்தது. பல பெண்கள் தாங்களாகவே விரும்பி அந்த நெருப்புக்குத் தமது உடல்களைத்
தந்து சென்றனர். போயர் பெண்கள், ஆங்கிலேயப் பெண்கள், திராவிட ரத்தம் ஓடும் பெண்கள்.

நெரூடா கொழும்பில் வசித்த பங்களா மிகப் பெரியது. அதன்
கழிவறை வெளியே
தனியே அமைக்கப்பட்டிருந்தது. அந்தக் கழிவறையை யார் சுத்தம் செய்கிறார்கள் என்பது
நெரூடாவுக்குத் தெரியாது. ஒருநாள் அது யாரென்பது நெரூடாவுக்குத் தெரிய வந்தது.
"இலங்கையில் நான் இதுவரை சந்தித்திராத அழகி. ஒரு சிலையைப் போல இருந்தாள். அவள் ஒரு
தமிழ்ப் பெண், பறையர் சாதியைச் சேர்ந்தவள். அவள் சிவப்பும் பொன் நிறமும் கொண்ட
மட்டரகமான புடவையை உடுத்தியிருந்தாள். கைகளில் கனமான வளையல்கள். அவளது மூக்கின்
இருபுறமும் இரண்டு சிறிய சிவப்பு மூக்குத்திகள்
மின்னிக்கொண்டிருந்தன. அவை
வெறும் கண்ணாடிகள்தான் என்ற போதிலும் அவளது முகத்தில் ரத்தினங்களாய் மின்னிக்
கொண்டிருந்தன."

அவளை வசியப்படுத்த நெரூடா பலவித முயற்சிகளைச் செய்கிறார்.
எதற்கும் பலனில்லை. "ஒரு நாள் நேராகச் சென்று அவளது கையைப் பிடித்தேன், கண்களைப்
பார்த்தேன். அவளோடு பேச என்னிடம் ஒரு மொழியும் இல்லை. ஒரு சிறு புன்னகைகூட இன்றி
அவள் படுக்கையறைக்கு வந்தாள்.'' ஆயிரம் ஆண்டுகளுக்கு
முற்பட்ட தென்னிந்தியச்
சிற்பத்தைப் போல அவள் இருந்ததாக நெரூடா வர்ணிக்கிறார். "அவளைப் புணர்ந்தது ஒரு
சிலையைப் புணர்ந்ததுபோல இருந்தது. கடைசிவரை அவளது கண்கள்
திறந்தபடியே இருந்தன.
அவளிடமிருந்து ஒரு எதிர்வினையும் இல்லை.''

பறையர் என நெரூடா
குறிப்பிட்டிருப்பது அக்காலத்தில் (1929) கொழும்பில் துப்புரவுப் பணியில்
ஈடுபட்டிருந்த சக்கிலிய வகுப்பினரைத்தான். நெரூடாவின் வர்ணனையைப் படிக்கும்போது
ஏறத்தாழ நெரூடா அப் பெண்ணைக் கற்பழித்தார் என்றே சொல்லத்
தோன்றுகிறது.
(ரவிக்குமார், ஆகஸ்ட் 2004, காலச்சுவடு)


ஒருவருக்குத் தண்டனை தருவது, எச்சிலால், அனேகமாய் வசைச் சொற்களால் இடுப்புக்குக் கீழுள்ள உறுப்புகளைப் தொடர்புபடுத்தி -மலம், மூத்திரம்-, மிருக எச்சங்கள் (சாணியடித்தல் இத்தியாதி) இவை உடன்படக் கூடிய விடயங்கள் இல்லைத்தான். ஆனால் வெளிப்படையாக சொல்லப்படுகிற/அறியப்படுகிற 'குற்றவியலுக்கு அடங்குகிற மனிதர்கள் மீது
மட்டும் தம் விமர்சனங்களை, குற்றவியல் சட்டத்தை பிரயோகித்தபடி, 'பாப்லோ நெருடா'வை -மனிதனாக விட்டுவிடுமாறு கோரிக்கைகளோடு- நூற்றாண்டு கொண்டாடிக் கொண்டிருக்கிறது!
அப்படியாயின் அழகான வார்த்தைகளால் கவிதைகளால் "நாகரீகமாக" யாரையும் சுரண்டு அவமதி கீழ்நிலையில் வைத்திரு என்றுதான் அதற்குப் பொருள் கொள்ளலாம்.

சிலவேளை, நமது பொழுதுபோக்குப் படங்களில் பொதுமக்கள் ஒழுக்கம்/ஒழுங்கு கடைப்பிடிப்பதில் பின்னிற்பதே சமூகக் கேடுகள் எல்லாவற்றுக்குமான காரணமென்பதுபோல காட்டப்படுவதும், அவை 'ஒழுங்கு' படுத்தப்படுவதும், 'ஒழுங்கற்ற' அவர்கள் தண்டிக்கப்படுவதும், மூலகர்த்தாக்களான தலைவர்களும் அரசாங்கங்களும் நலமே
இருப்பதுமாய் எடுக்கப்படுகிறதன் உளவியல் நீட்சிதான் இந்த 'பிம்பங்கள்' மீதான மோகமும் என்று தோன்றுகிறது. கடவுளோ அரசாங்கமோ கேள்விக்குட்படுத்த(ப்படாமல்) முடியாமல் வீற்றிருக்க, பின்பற்றுவோர் தவற்றில்தான் சகல(ஒழுங்கு)மும் குலைவது என்பதான பிம்பத்தை ஏற்படுத்துவதும், கொண்டாடுவதற்கும் கேள்விகளற்று விசுவாசத்துடன்
இருக்கவும் அமைப்பு/கொள்கை/நபர்கள்/திருஉருக்கள் ஐ கொண்டலையும் மனித மனம், அதில், 'பாதுகாப்பை' உணருகிறது போலும்.


நெருடாவின் 'நான் உன்னை அரசியாக்கினேன்' எனும் வரி வருகிற குறிப்பிட்ட கவிதையை இப்போது எழுதினால், "நீ யாரடா நாயே என்னை
அரசி ஆக்குவது" எனத்தான் எகிற முடியும். ராஜாராணிக் கதைகளில் வருகிற மந்திரசக்தி உடைய கதாபாத்திரங்கள்போல, தமது மந்திரக் கோலை உபயோகித்து ஒருவளை உயர்ரக ஆடைகளுடன் அழகு நங்கையாக மாற்றிவிடுவதுபோல, நெருடா காதலனாக அப்படியான ஒரு சக்தி உடையவராகவே முன் வருகிறார். அது கவிஞன் (ஆண்) என்கிற உயர் ஆசனத்தில் உட்காருவது தருகிற போதையின் விளைவு, அதற்கு, மேலதிகமாக, 'புரட்சி' 'மனிதநேயம்' என பதாகைகளையும் தந்துவிட்டால்
சொல்ல வேண்டியதில்லை. இந்த 21ம் நூற்றாண்டில், நாங்கள் அந்த நாற்காலியை எடுத்துவிட விரும்புகிறோம், ஒரு நூற்றாண்டு முடிந்துள்ளது இல்லையா!

'சொல்லப்படுகிற' காதலின் உணர்ச்சிப் பெருக்கு அவருடைய கவிதைகளில் அற்புதமாக வந்திருக்கிறதுதான்; இன்றும் பேசப்படுகிற Twenty Love Poems and a Desperate Song நூல் அவரது இருபதாவது வயதில் வெளியானது (1924). இந்தக் காதல் கவிதைகளிற்கும் -இதைப் படித்திராத- வெகுசன ரசனையுடைய இளம்பெண் ஒருத்தியைப் பருவங்களிற் கவரக் கூடிய காதற் பாடல் வரிகளிற்கும் வித்தியாசம், முதலாவது, ஒரு புரட்சியாளரால் சொல்லப்பட்டதென்பதால் உள்ளதா என்றால் - இல்லை! இன்றும் தொலைபேசியின் அருகாமையில் தனது காதலனின் அழைப்புக்காக உட்கார்ந்திருக்கிற பதின்மக்காரிகளின் காத்திருப்பிற்கும் எங்கெங்கோ
தேசங்களில் எனக்காகக் காத்திரு என்று விட்டுவந்த இந்த காதலனின் காதலிகளின் காத்திருப்பிற்கும் -என்ன பாரிய- வேறுபாடுகளைக் கண்டுவிட முடியும்? சொல்லப் போனால், முன்னது, பின்னதைப் போல ஒருவளது காலத்தை -திரும்பியே போகப் போகாத ஒருவனால்- எடுக்கப்
போகின்றதல்ல என்கின்ற வகையில், உத்தமமானதுங்கூட.

எல்லாக் காதல்போலவும், எல்லாக் காதலர் போலவும், அற்புதமான கவிஞனால் (ஒரு ஆணால்) நீ நேசிக்கப்படுகிறாய் என்பதுதான் கவிதை மையம்; பின்னர் ஒரு புரட்சியாளனாய் ஆனபிற்பாடும், 'புரட்சியில் ஈடுபடுகிற' + காதலன் ஒருத்தன் வாறானே ஒழிய கவிதைப் பொருள், வழமையான எல்லாக் காதல்களதும் கருப்பொருள்தான்.

'தெருக்களூடே நீ நடக்கையில் யாரும் உன்னை கண்டுகொள்வதில்லை': "யாருமே பொருட்படுத்தாத உன்னை ''நான்'' பொருட்படுத்துகிறேன்" என்பதான, 'எல்லாப் பெண்களுக்குள்ளும் 'நான்' உன்னை தேர்ந்தெடுத்தேன்': "அதற்காய் பெருமைப் படு" என்பதான காதல் வரிகள், அவர் புரட்சிகரப் போராட்டத்தில் இணைகிறபோது கீழுள்ளவாறான மாதிரியாக மாற்றம் பெறுகிறது:

'எனது தேசத்தில் மலையிருக்கிறது
எனது தேசத்தில் நதி இருக்கிறது
என்னுடன் வா
...
போராட்டம்
கடினமாயிருக்கும்
வாழ்க்கை கடினமாயிருக்கும்
ஆனால் நீ என்னுடன் வருவாய்.'

(In my country there is a mountain./In my country there is a river./Come with me./…/the struggle will be hard,/life will be hard,/but you will come with me)
வருடைய காலம் (எச்சசொச்சங்கள் இன்றுவரை) நெருடா என்கிற
புரட்சியாளன் + கவிஞனின் வீட்டில் அவனுக்காய்க் காத்திருக்கிற, அவனை
ஏதிர்பார்த்திருக்கிற, (கஸ்ரத்தில்) துணைவருகிற பெண் வந்து போகிறாள், அதுவே அவளது பங்காக, கொடுப்பினையாக, பிறவிப் பெரும் பயனாக கவிதை கூறுகிறது. பெருவாரியாய், இத்தகு கவிதைகளில் உள்நாதமாய், கூடவே, பா.நெருடா என்கிற இப் பிம்பம், மாபெரும் பிம்பம், உயர்ந்த, புரட்சி நாயக பிம்பம் கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது. இதற்கு சுகுமாரன் குறிப்பிடுகிற காரணமொன்று: "...மானுட உறவுகளின் மாளாக் காதலர், இயற்கையின் தீவிர ஆராதகர், அயராத போராளி - இந்த மூன்று நிலைகளின் படைப்பியல் விரிவே அவரது கவிதை. ஆனால் தமிழில் அவர் அடையாளப்படுத்தப்பட்டது சிந்தாந்தச் சார்புடைய போராட்டக்காரராகவும் அரசியல் கவிதையாளராகவும்தான். அந்தக் காலத்தின் தேவை அதுவா இருந்தது. தவிர, புரட்சிகர அரசியல் என்ற கனவை பராமரிக்க நெரூதாவின் கற்பனைவாத ஆவேசம் உகந்ததாகவுமிருந்தது. ..."(பக். 11).

ஆனால், அவர்கள்போல, ஒரு கவிஞனின் கவி-மேன்மையில் –அவரது புரிகிற ஆதிக்கக் கூறுகளுடன்- தங்கி, மேலும் அவற்றை உன்னதப்படுத்த முடியவில்லை.

ஈழப் போராட்ட ஆரம்ப இலக்கியக் பங்களிப்புகளிலும், 'மரணத்துள்
வாழ்வோம்' (விடியல்) தொகுதியிலேயே அந்த மூன்று பெண் கவிகள் முன்வகித்திருந்த யுத்தகால தமது பாத்திரமே "காத்திருக்கும்" மனைவி, தானும் (கணவனைப்போல) போராட முனையிற மனைவி, புத்திரசோகத்தில் தோயிற தாய் ஆகிய பங்குகள்தான். இராணுவத்தினர் கண்ணோக்கில் இருந்து அவர்களது மனைவிகளுக்குத் 'திரும்பி வருதல்' பற்றிய கடிதங்களையும், விடுதலைப் போராட்டத்தின் முக்கியத்துவம் பற்றி மனைவிக்கும் தோழிகளுக்கும் கடிதமே கவிதையாய் எழுதி தாம் போரட்டத்தில் ஈடுபடுகிற தீரத்தை விவரித்தார்கள் கவிஞன்கள்; பிற்பாடு, பெண் போராளிகளின் முன்னெடுப்பில் அந்த era பறந்தது;
"அன்புக் காதலியே,
யுத்தத்தில் இணைகிறேன்

- நம் மண்ணை மீட்க
முடிந்தால் புரட்சி பூமியில் வாழ்வோம்-
இப்போது விடை தா"

என்று "விடைபெற்ற" பாடல்களும் ஒரு முடிவுக்கு வந்தன!
யுத்தத்தில் பெண்கள் இணைந்தார்கள், காதலன்களால் 'தூண்டப்பட்டு' அல்ல, அக் 'காலத்தால்' தூண்டப்பட்டு. இந்த மாற்றத்தை உள்வாங்காமல், இடையில், ஈழத்திலிருந்து 'புலம்பெயர்ந்த' கவிஞர்கள் அந்தக் காலத்திலையே தங்கியதோடல்லாமல், தாம் இன்னொரு பா.நெருடா என role play செய்யத் தொடங்கிவிட்டார்கள்.
'அவருக்கு'த் தெரிந்த இவர்கள் குறித்து, 'ஈழத்துக் கவிஞர்கள்' என பொதுப்படையாய் ராஜ்மார்த்தாண்டன் எழுதிய (காலச்சுவடு, நவ-டிச 2002, இதழ் 44) கருத்து: "ஈழத்துக் கவிஞர்கள் பலருக்கும் தாம் கவிஞர் என்ற தன்முனைப்பு அவர்களது கவிதைகளில் சற்றே தூக்கலாக வெளிப்படுவதுண்டு." சற்றே என்ன? மானியாக் என்று சொல்லக்கூடிய அளவுக்கே உண்டுதான்.
சாமிவந்ததுபோல 'நான் கவிஞன் நான் கவிஞன்' என flow வாய்ப் போய்க்கொண்டிருக்கிற கவிதைக்கிடையில் ஒரு துள்ளுத் துள்ளி உறுதிப் படுத்தாமல் இருக்க முடிவதில்லை அவர்களால். பாலஸ்தீனக் கவிதைகள், பாப்லோ நெருடா போன்ற 'புரட்சிக் கவிஞர்களின்' கவிதைகளிடம் அவர்கள் nostalgic ஆய் சரணடைந்தார்கள்; துர/அதிர்ஷ்டவசமாக பா.நெருடாவின் 'வாழ்க்கைமுறை' வசீகரிக்கப்பட்ட அளவுக்கு கவிதைதான் வாய்க்கவில்லை. IT இன் பாடல்வரிகளிலுள்ள -always trying to copy But when they tried to use her vocab, they sounded sloppy- ‘அவளைப்போல இருக்க முயன்று தோற்றனர்' என்பதான வரியாய்த்தான் ஆனது படைப்பிலக்கியத்தில் பா.நெருடா மாதிரிகளாக தங்களை மாற்றக் கண்ட ஈழத்து ஜாம்பவான்களின் பெருங்கனவு, நிலை. ஒன்றில் பழைய உன்னதங்களை மீள எழுத முயன்றபடி, அல்லது 'காதல்' என எழுதிவிட்டு, அதற்கு, பூக்கன்றுகளிற்குப் போலத் தண்ணியடித்து வித்தை காட்டிக்கொண்டு காதல் கவிதை என்றும் காதல் கவிஞர் என்றும் அறியப்படுவதைவிட, பிரச்சினைக்குரிய 'அசலாக' இருப்பது கௌரதை தான்.

இருபாலாரும் யுத்தத்தில் ஈடுபடுகிற ஈழத்திலுள்ள தலைமுறையோ, "டேய் பா.நெருடா புலுடா விடாதே" என்று கொடுப்புக்குள் சிரித்தபடி படிக்கத்தான் வாய்த்தன அவரது பிரேரிக்கப்படும் காதற் கவிதைகள். ஏனெனில், பின்னால் மனைவிகளும் காதலிகளும் போராட்டத்தின் பாரத்தை இறக்கி வைக்க இல்லாத ஏராளம் இளைஞர்கள் அதில் ஈடுபடத்தான் செய்தார்கள். அத்தகைய சூழல்களில், ஒருவகை 'கவிஞர்காள் குசும்புகள்' எனவே இவற்றை எண்ணியதுண்டு (கவிதைகளை இந்தப் புரிதல்களுடன் ரசிப்பது வேறு விடயம்). ஆனால் பா.நெருடா பற்றிய பதிவுகளையும் சிறு எதிர்வினைகளுக்கே எழும்புகிற வியாக்கியானங்களையும் பார்க்கும்போது, அந்த சகாப்தம் ஒரு நோய்போல பீடித்துள்ளதையே உணரமுடிகிறது. இங்கே, சுகுமாரன், "பெண் ஸ்பரிசங்களின் வளம் நிரம்பியது அவரது அந்தரங்கம். மூன்று மனைவியர். அநேக தோழியர். எண்ணிக்கையிலொடுங்காத படுக்கையறைப் பங்காளிகள். அயலிட வாழ்க்கை மேற்கொண்டிருந்த காலத்தில் நுகர் பண்டமாக அவர் துய்த்து வீசிய பெண்கள் பலர். ...வெவ்வேறு காலகட்டங்களில் பாப்லோ நெரூதா உறவுகொண்டு விலகிய பெண்களின் எண்ணிக்கை ஏராளம். முகமற்ற இந்த அனேகக் காதலிகளின் எண்ணிக்கையை ஒரே பெயரில் ஒளித்துவைத்துக் கவிதைகளில் நினைவு கூரவும் செய்திருக்கிறார். மாபெரும் மனிதநேயரான நெரூதா இந்த வஞ்சனைகளால் மனம் கொந்தளித்திருந்தார் என்பதை அவரது கவிதை வரிகளுக்கிடையில் உலர்ந்து கிடக்கும் கண்ணீர்க் கோடுகளையும் உறைந்திருக்கும் இரத்தக் கசிவுகளையும் உணர முடிந்தால் அறியவும் முடியும்" (பக். 25, 26) என எழுதுகையில், ஏலவே 'நெரூதா கவிதைகளின் மீதான விமர்சனம் தீண்டாத ஆர்வம் குறித்து' குறிப்பிட்டிருந்தார்தான் என்றாலும் கவிஞரின் கண்ணீர்க் கோடுகளை மட்டுமே அவரால்/பலரால் பார்க்க முடிவதையும், தான் மொ-பெயர்த்திருக்கிற இந்தக் கவிதைகளில்கூட -குறிப்பாகக் காதலில்- பா.நெருதாவின் கண்ணீர்க் கோடுகளை எப்படிக் கண்டடைகிறார்கள் என்பதும், முக்கியமாக காதலின் கண்ணீரால் -உலகத்தின் அ/சாதரண மகா ஜனங்கள் அனைத்தும் சிந்தும் ஒன்றை சிந்துகையில்- அவர் எப்படி மனித நேயராக ஆகிறார் என்பதும் மிகமிக ஆச்சரியமாய் இருப்பதையும் சொல்ல வேண்டும்.
பின் மட்டையில், 'இருபதாம் நூற்றறாண்டில் எந்த மொழியிலும் மகத்தான கவிஞர் நெரூதாதான்' என்று Gabriel Garcia Marquez சொன்னது போடப்பட்டிருக்கிறது. உணர்ச்சிவசப்படுபவர்கள் ஒன்றைக் கூறமுன் தமக்கெத்தனை மொழிகளில் புலமையுண்டு என்பதையாவது எண்ணி பார்த்துப் படவேண்டும். மாச்சுபிச்சுவின் சிகரங்கள் போன்ற நீள் கவிதைகளில் அவர் எளிய ஆனால் நுட்பமான கவிஞராகத் தென்படுகிறார். அப்பால், பா.நெருடாவின் கவிதையில்தான் இதற்குப் பதில் சொல்லவேண்டும்:
உன்னைவிட உயராமானவர்கள் உள்ளார்கள், உயரமானவர்கள்

உன்னைவிட தூய்மையானவர்கள் உள்ளார்கள், தூய்மையானவர்கள்

உன்னைவிட அழகுமிகுந்தவர்கள் உள்ளார்கள், அழகு மிகுந்தவர்கள்

(.../there are taller ones than you, taller./theree are purer ones than you, purer./there are lovelier than you, lovelier.)


மிழர்கள் (பொதுமைப்படுத்தல்தான்- 'மனிதர்கள்' என்றும் வாசிக்கலாம்) ஆண்களைக் கட்டி அழுபவர்கள், கொண்டாடுபவர்கள் (பட்டியலிடுதல் போல கொண்டாடுதலும் ஒரு சமூக நோய்).
'பழக்கப்பட்ட' பட்டியலிடலாளர்கள். அதை குறைந்தபட்சம் காலத்துக் காலம் ஆள்மாற்றமாவது செய்யவேண்டும். நடிகைகள்தான் மாறுகிறார்கள். ஆண்களால் ஆசனம்போட்டு அமர்வதுதான் வேலை; அசைவதே இல்லை. தமிழிலக்கியம் சில பெயர்களைத்தான் தொடர்ந்து ஒப்புவிக்கிறது.
ஜெயகாந்தன், சு.ரா, புதிய பெயர்கள், ஈழத்துக் கவிஞர்களோ எனில் சேரன், ஜெயபாலன், சேரன், ஜெயபாலன் தான், ம்ஹீம், அப்பால் இல்லை!
(இவர்களை தள்ள ஆவது 'எனக்குத் தெரிந்த' பட்டியலைத் தருகிறேன்: (இலங்கையிலிருப்பவர்கள்: றஷ்மி, தேவஅபிரா, அஸ்வகோஸ், கருணாகரன், நிலாந்தன், பா. அகிலன், எஸ்.போஸ் (சந்திரபோஸ் சுதாகர்), அமரதாஸ், ஆகர்ஷியா, உவைஸ் கனி, தானா.விஷ்ணு...)
பட்டியல்கள், இலக்கங்கள்- இவற்றையே
நேசிப்பவர்களால் ஆன இத்தனை வருட ந....வீ.......ன இலக்கியப் பாரம்பரியத்தை விரித்துப் பாருங்கள்.
1, 2, 3, 4...
நான் கடைத் தெருவில் நின்றிருந்தேன்.
குடைபிடித்தபடி, வெள்ளை நிறப் பெண் வந்தபடி இருந்தாள். அவள் கை பூனை முடிகூட வெள்ளை.

என ஆரம்பிக்கிற கதைகள் முதல், யூமா.வாசுகி தெருப்பெண் முதல் கடை
விற்பனைப் பெண் வரை உள்ளடக்கி 'அமுதபருவம் வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு' (தமிழினி 2001) என கவிதை செய்கிறார். மகுடேசுவரன் சித்தி முதல் கிழவி வரை புணர்ச்சிக் குறிப்புகள் எழுதுகிறார். அப்புறம், 1, 2, 3, 4 என காதலை இலக்கமிட்டு எழுதுவார்கள். இலக்கங்கள் பட்டியலிடல்களில் தான் என்ன பிரியமோ!

கேள்வி: 2005 ஆம் ஆண்டு இத் திகதி வரையில் தமிழ் இலக்கியத்தில் எவளாவது காதலன் 1, 2, 3, 4 என இலக்கமிட்டு எழுதினாளா? 'ஆபாசமாய்' எழுதியவள்களில் யாரேனும்? தெருக்களில் கவர்ந்த ஆண்களைப் பற்றி ஒவ்வொவ்வொன்றாக குறிப்பிட்டு ஒவ்வொவ்வொருவருக்கும் கவி/தைகள் உண்டா?
முடிவாக, குழந்தையை/பெண்ணை/மனைவி(/களை)யை வன்புணர்பவர்கள் போன்றவர்களுக்குத் தருகிற 'மரியாதை'யையே இந்த நாகரீகமான உபயோகிப்பாளர்களான இவர்களுக்கும் தரவேண்டும். அதனூடாக, உன்னுடையதல்லதாத ஒரு உடம்பை -அதற்குரிய காலத்தை- சுரண்டுதல் என்பதும், சொற்களாலான வன்முறையுமே மனித உரிமைகளிற்கு எதிரானதென்பது தொடர்ந்து வலியுறுத்த/பேசப்படவேண்டும். அப்படியாவது, இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்கு "காதல்" "புரட்சிகர காதல்" என்கிற வலு கலாதியான சோடிக்கப்பட் சொற்களூடே "காத்திருப்பு" என்கிற வன்முறையைப் போற்றிக் கொண்டு, பட்டியலிட்டபடி, அதால் பல
நலன்களைப் பெற்றபடி தம் சுரண்டலைத் தொடரப் போகிறார்கள் என்பதையும் பொறுத்திருந்து பார்க்கலாம். கவிதைகளை கவிஞரை விலக்கி வாசிப்பதும் ரசிப்பதுங்கூட பயிற்சிகளூடே சாத்தியப்படுத்திக் கொள்ளலாம். ஆனால், படு பயங்கர ---தனமான ஆதிக்கத்தை நியாய்ப்படுத்துவதைத்தான் இங்கே எதிர்க்கப்படவேண்டியதாகிறது.
---------------------------
(பா.நெருடாவின் ஒரு கவிதை சுகுமாரனால் 'மாபெரும் மூத்திரக்குடுக்கை' என மொழிபெயர்க்கப்படக் காரணமாய் அவர் எழுதுவது: "...இந்த நூறு கவிதைகளில் ஒன்றுக்கு மட்டும் புதிய தலைப்பு இடப்பட்டிருக்கிறது. நெரூதாவின் மறைவுக்குப் பின் வெளியான கவிதைகளில் ஒன்றான 'தி கிரேட் யூரினேட்டர்' 'மூத்திரக்குடுக்கை' யாகியிருக்கிறது. ஆத்திரக்குடுக்கை என்ற பொதுவழக்கிலிருந்து உருவாக்கப்பட்ட சோற்சேர்க்கை அது." நான் உபயோகிப்பது "பாப்லோ" = The Great Urinator என்கிற, அவரது சிந்தனை அவ்விடமே மையங் கொண்டிருப்பது என்கிற நேரடி அர்த்தத்திலேயே).
-----------------------
தொடர்புடையவை:

ரவிக்குமார்: "இந்த உதடுகள் ஒன்றுகூடும்போது"

Stephen Schwartz: Bad Poet, Bad Man

யமுனா ராஜேந்திரன்: "பாப்லோ நெருடாவின் துரோகம்"

எனது பதிவு: "பாப்லோ நெரூதா: ஒரு நூற்றாண்டுத் துரோகம்"

Thursday, July 14, 2005

பாப்லோ நெரூதா: ஒரு நூற்றாண்டுத் துரோகம்

யிர்மை (பிப்ரவரி 2005) 'பாப்லோ நெருதாவின் துரோகம்' என்கிற கட்டுரையில் யமுனா ராஜேந்திரன் எழுதுகிறார்:

பாப்லோ நெருதா நூற்றாண்டின் போது நெருதாவின் மீது வைக்கப்படும் விமர்சனங்கள், அனைத்துவகையான மார்க்சியர்களின் மீதும் காலம் காலமாக வைக்கப்பட்டு வரும் இருநிலை விமர்சனங்கள்தான். முதல் விமர்சனம் நெருதா பல பெண்களோடு உறவு கொண்டு பிற்பாடு அவர்களை நிராகரித்தார், அவர்களுக்குத் துரோகம் செய்தார் என்பதும், பாலியல் ரீதியில் அவர் பல பெண்களக் கடாசினார், என்பதாகவும் இருக்கிறது. ... பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு கார்ல் மாரக்ஸ், சே குவேரா, ஸார்த்தர், மாவோ என எவரும் தப்பவில்ல. இவ்வகையில் மிகவிரிவாக ஆவணப்படுத்தப்பட்ட ஒரு கலைஞரது வாழ்வு பாப்லோ பிச்காசோவினுடயதாகும். பாப்லே பிச்சாசோவோடு உறவு கொண்டிருந்த பற்பல பெண்களின் புத்தகங்கள் தற்போது வெளியாகிவிட்டது. ...ஆனால் பாப்லோ நெருதாவோடு உறவு கொண்டிருந்த பெண்களால் எழதப்பப்பட்ட அப்படியான நூல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. நெருதாவுக்கும் பிக்காஸோவுக்கும் பல வகைகளில் ஒற்றமையுண்டு. தம்மோடு உறவு கொண்டிருந்த பெண்கள் குறித்து தமது படைப்புகளில் வெளிப்படையாகக் குறிப்பிட்டவர்கள் அவர்கள். பெண்களின் மீதான தமது தீராத வேட்கையை வெளிப்படையாக முன்வைத்தவர்கள் அவர்கள். ...முதல் மனவியரை அடுத்து அவரோடு உறவு கொண்டவர்கள் அனைவரும், இவர்களது முதல் மனைவியர் குறித்தும் இவர்கள பல பெண்களுடனான தொடர்பு குறித்தும் அறிந்தவர்கள்தான். அதனைத் தெரிந்து கொண்டே இவர்கள் தம்மை இந்த ஆளுமைகளோடு பிணைத்துக் கொள்கிறார்கள். வயது ரீதியில் ஒப்பிடுகிறபோது சமூக அங்கீகாரம், புகழ் போன்றவற்றறோடு, பற்பல அரசியல் சமூகக் காரணங்களாலேயே இத்தகைய மனிதர்களோடு வாழ அப்பெண்கள் தம்மைத் தயார்படுத்திக் கொள்கிறார்கள். இத்தகைய சூழலில் சம்பந்தப்பட்ட ஆணின் மீது மட்டுமே கடுமையான விமர்சனங்கள முன்வைப்பதிலுள்ள பிரச்சினைகள் மிகவும் சிக்கலானவை. பிரச்சினையின் ஒரு பக்கம் மட்டுமே மிகைப்படுத்துப்படும் ஆபத்தும் இதில் உள்ளது.

தஸ்லிமா நஸ்ருதின், ஃப்ரீடா உள்ளடங்கலாகப் பல பெண்ணியப் பிரதிகளை தமிழில் கொண்டந்தவர்களில் ஒருவரான திருவாளர் யமுனா ராஜேந்திரன் இவ்வளவு சுத்தி வளைத்து பலப் பல குறிப்பிடல்களூடாக இங்கே எழுதுகிற வரிகளின் சாரம் இதுதான்:

"பெண்களும் தெரிந்து/விரும்பித்தான் அவரிடம் போனார்கள். அவர்களை விட்டுவிட்டு அவரை மட்டும் குற்றம் கூறுவது பிழை."

தமிழ் இலக்கிய உலக கர்த்தாக்களே! இத்தகையதொரு 'அபிப்பிராயதை'க் கூற ஒரு மார்க்சியர்தானா வரவேண்டும்? எத்தகைய வரலாற்றுத் தரவுகளுடன் குறிப்பிடப்பட்டாலும் இத்தகைய தொனிகளில் இருக்கிற ஆதிக்க சிந்தனையை மூடி மறைக்க முடிவதில்லை. இதே வசனத்தை முன்வைத்துத்தான் 'கண்ணன்கள்-கவிஞன்கள்-நித்தியகாதலன்கள்' எழுத ஆரம்பித்து, அதற்காக அவ்வப்போது எழுதி வைத்த குறிப்புகள் என் கண்ணுக்கே தூர்ந்து, அந்நியமாகி, கொடுமை செய்யத் தொடங்க தள்ளிப்போட்டிருந்தேன். இப்போதுவரையில், நசுங்கி நசுங்கி நம் காலத்தின் 'சொல்லப்பட்ட' முற்போக்காளர்கள் கூறுகிற கருத்துக்களை/கூத்துக்களைக் கேட்டால் வட்டக் கிணற்றில் (கிணறு வட்டம்தானே!) தேங்காயை உடைப்பதுபோல மண்டையை உடைத்து சிதறடிக்கவேண்டும்போல இருக்கிறது.

1980களின் இடையில் ஈழத்திலிருந்து விடைபெற்றுப்போன புலம்பெயர்ந்தவர்களும், தமிழ்நாட்டு இலக்கியவாதிகளும் the good old days இல் வாழ்பவர்களாக, பா.நெருடா முதல் எந்த திருவுருவையும் சிறிது விமர்சித்தாலும் அனுங்கிறவர்களாக இருக்கிறார்கள். ஒரு நூற்றாண்டிற்குப் பிறகும் அவரைப் பற்றி சிறு மறுப்பும் பலத்த உணர்ச்சிவசப்படல்களை உருவாக்குகிறது. இதில், தாம் காவுகிற உன்னதங்களை குறித்து சிறு களங்கமும் வேண்டாத –மறுபரிசீலனைக்கு தயாரில்லாத- ஒரு மரபு மனமே வெளிப்படுகிறது. பெண்கள் மற்றும் ஏனைய சிறுபான்மையினர் குறித்த தமது பயங்களை அடிப்படைவாதிகள்/மரபுவாதிகள் மதங்களால் பாதுகாத்துக்கொள்வதுபோலவே இத்தகையவர்களும். அதற்கு சிவப்பு முலாம் பூசிவிட்டால் எல்லா ஆதிக்கத்தனங்களையும் நியாயப்படுத்துவதற்கான தகுதி தமக்கு வந்துவிடுகிறதென நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால் இவர்களது இத்தகைய நடவடிக்கையானது மீளமீள அவர்களது அச்சப்படும் மரபுமனத்தையே அம்பலப்படுத்துகிறது. மக்களுக்கான அரசியல் தத்துவம் எதுவென்றாலும் சிறுபான்மையினரின் நலனிலிருந்து தன்னை மறுபரிசீலனை செய்ய அது தயாராக இருக்க வேண்டும். அதுவே மாற்றத்திற்கான/மாற்றத்தை வேண்டிற பண்பு. அல்லாதுவிடில் அதுவே கடுமையான விமர்சனத்துக்குமுரியது. `காலம்காலமாக' யாரோ ஒரு பக்கத்தை யாரோ ஒரு பக்கம் பயன்படுத்தி வருவதற்காக யாரும் உண்மையை பேசாமல் விடுவதில்லை; அதை மூடி மறைத்து, 'அவள்கள் மட்டும் என்ன யோக்கியம்' என பதின்பருவ ஆண்களது மனோபாவத்தோடு உண்மையை அணுகுவதில்லை. அப்படி செய்தபடி, மிகவும் அறிவார்த்தமான விவாதத்தை நடத்திக்கொண்டிருப்பதாக மனப்பால் குடிப்பதில்லை. வரலாற்றில் எந்த கொம்பரும் விமர்சனங்களிற்கு அப்பாற்பட்டவன்(ள்) இல்லை என்பதை ய.ரா. இற்கு புதிதாக சொல்ல வேண்டியதுமில்லை.

இந்தக் கட்டுரையில், தான் சார்ந்த ஒரு மனிதரை 'நியாயப்படுத்தும்' பொருட்டு, தன்னை நன்கு அம்பலப்படுத்திக்கொண்டுள்ளார் திரு.யமுனா ராஜேந்திரன். அவர் மேலும் எழுதுகிறார்:
இலத்தீனமெரிக்க கலாச்சாரத்திலும், மேற்கத்தியக் கலாச்சாரத்திலும் ஆண் பெண் உறவு தொடர்பான பார்வை என்பது கிழக்கத்திய சமூகங்களின் பார்வை போன்றதல்ல. ஸார்த்தர் எனும் எழுத்தாளரதும் ரிவரோ எனும் ஓவியரதும், வாழ்வை மட்டும் எடுத்துக் கொண்டால், திருமணம் மீறிய நிறைய உறவுகளை அவர்கள் கொண்டிருந்தார்கள். இவர்களோடு சமகாலத்தில் வாழ்ந்த ஸீமன் தீ பூவாவும் பிரைடா கோலாவும் அதேகாலத்தில் பற்பல ஆண்பால் உறவுகளை மேற்கொண்டிருந்திருக்கிறார்கள். ஒருவனுக்கு ஒருத்தி, துரோகம், திருமணம் போன்ற கருத்தாக்கங்கள் இவர்களது வாழ்வில் எந்தவிதமன புனித அர்த்தமும் பெறுவதில்லை. இன்று இவ்வகையிலான விவாதங்களை கத்தோலிக்கக் கிறித்தவக் கருத்தியல் ஆதிக்கத்துக்குள்பட்ட அமெரிக்க இலக்கியவாதிகளும், பழமைவாதக் கருத்துருவப் பாதிப்பு அதிகமுமள்ள பிரித்தானிய இலக்கிய விமர்சகர்களுமே முன்னிலைப்படுத்கிறார்கள். வைதீக இந்திய மரபுகளில் ஊறிப்போனவர்களாக இருக்கும் இந்திய எழுத்தாளர்களும் இவ்வகையிலேயே இந்தப் பிரச்சினைகளை முன்வைக்கிறார்கள். பாப்லோ பிகாஸோ போலவே, பாப்லோ நெருதா குறித்த பெண்நிலைவாத வாசிப்புகளும் அவரது கலைஆளுமையில் எந்தவிதமான புதிய வெளிச்சத்தையும் பாய்ச்சிவிடப் போவதில்லை. இரட்டை நிலைப்பாடும், சுரண்டலும், சுயநலமும் கொண்டவர்களாக ஆண்கள் மட்டுமே இல்ல. பிராங்காய்ஸ் ஜில்லெட்டினதும் பிரைடா கோலாவினதும் ஸீமன் தி புவாவின் வாழ்வுண்மைகளும் இதனையே தெளிவுபடுத்கின்றன. பாப்லோ பிக்காஸோவையும் நெருதாவையும் மார்க்ஸைப் போல, குவேராவைப் போல மனிதர்களாக விட்டுவிடுவதே நல்லது.

ய. ராஜேந்திரனின் விருப்பம் எதுவெனப் புரிகிறது. 'இரட்டை நிலைப்பாடும் சுரண்டலும் சுயநலமும் கொண்டவர்களாக ஆண்கள் மட்டுமே இல்லை' என்பதும் உடன்பாடானதே. ஆனால் இவையூடாக ய.ராஜேந்திரன் நிலைநாட்டியுள்ள 'உண்மை'தான் முக்கியமானது. அதிலும், இலத்தீனமெரிக்க/மேற்கத்தியக் கலாச்சாரங் குறித்த இவரது பார்வை புல்லரிக்கிறது. இலத்தீனமெரிக்கர்களதும் மேற்கத்தயர்களதும் ஆண் பெண் உறவு தொடர்பான 'பார்வை' நம்மிலும் வேறு என்பதற்காக, 'அவர்களை' துரோகங்கள் 'அவ்வளவாய்'ப் பாதிக்காது என நிறுவுவது அக் கலாச்சாரங்கள் பற்றிய புரிதல் இன்மையால்தான். அப்படியான 'பரந்த கலாச்சாரத்தவர்' என்றால் அவர்களிடம் ஷோப் ஒப்பறாக்களும் துரோக கவிதைகளும் இல்லவே இல்லையா?
கட்டிறுக்கமான, பாலியல்ரீதியாக ஒடுக்குகிற சமூகமாக இல்லையென்றால், துரோகங்கள் எமக்குப் போல 'எந்த ஒரு புனித அர்த்தமும் பெறாததால்' அதை இலகுவாக எடுப்பர் என அர்த்தங் கொள்ளலாமா?
திருமணம் என்கிற உறவும் காதல் என்கிற பன்ரஷியும் அந்த சமூகங்களில் இல்லையா? (சரி/தவறு விவாதங்களிற்கு அப்பால்) அறங்கள் அற்ற மனிதர்களா அவர்கள்?
பல பெண்களை/ஆண்களைக் கூடிய ஃபிரீடாவால் தீகோ தன் சகோதரியைப் புணர்ந்ததை –அந்த துரோகத்தை- இலகுவாக எடுத்துக்கொள்ள முடிந்ததா, எந்த புனித/அறத்தினதும் தலையீடும் இன்றி???? நெஞ்சிலறைந்த வலியின்றியா அவள் அதை எதிர்கொண்டாள்?

ஃபிரீடா பற்றி மொழிபெயர்த்தவர் மொழியை மட்டும் பெயர்த்ததால் வந்த புரிதல் இது. அதனாற்தான் 'ஃபீரீடாவிற்கும் சிமோனிற்கும் பிற உறவுகள் இருந்தன ஆகவே...' என வாதாடுகிறார். ஆனால் பாலியல் குறித்து 'அவர்களிடம்' குறுகிய எண்ணமில்லை 'பரந்தது' என்பதன் அர்த்தம்: அவர்கள் 'பாய்ஸ்' படம்போன்ற 'வெளிப்படையான' நடவடிக்கைகளில் அதிர்ந்தும் 'திருடா திருடி' வகையறாக்களை இயல்பாக எடுத்துக்கொள்வதுமான 'பாசாங்கை' விரும்புகிறவர்கள் இல்லை என்பதே. எமது நாடுகளது போல பாலியல் குறித்த இறுக்கம் இல்லை, திருமணம் வரையில் (அனேகமாக பெண்கள்) தமது பாலியல் தேவையை ஒடுக்கிற நிலைமை இல்லை என்பதே பொருள். ஆனால் அவற்றுக்கெல்லாம் எனது கணவன்/மனைவி இன்னொரு ஆ/பெண்ணைப் புணரலாம் துரோகிக்கலாம் என்றர்த்தமல்ல. குடும்பம், திருமணம் போன்ற நிறுவனங்கள் உள்ள எந்த கலாசாரங்களிலும் ஒரு ஆண் ஒரு பெண் என்கிற கருத்தாக்கம் மாறப் போவதில்லை. ய.ரா எடுத்துக் காட்டுகிற 'பெண்ணீயவாதி'யான சிமோன்கூட பின்னர் சார்ற்ரேபோல 'இலக்கங்களில்' ஆர்வமற்றுப் போய்விடுவதையும், 'உடமை' உணர்ச்சி என்பது வரிக்குவரி தொனிக்க நெல்சனென்கிற அமெரிக்கக் காதலனிற்கு எழுதிய கடிதங்களும் என்ன சொல்கின்றன?
மனித உடல் சார்ந்த சிக்கல்களை கலாச்சாரங்களுள் ஒதுக்கி ய.ரா தன்னுடைய கருத்தை, தன்னுடைய கருத்து வழி மனிதனை 'நியாயப்படுத்த' இவ்வளவு மெனக்கெட்டால் குறுகிய, தனது மத, இன அடையாளத்தை விட்டுவராத சனாதன மனம் எவ்வளவை நியாயப்படுத்தும்? என்னென்ன காரணங்களை அடுக்கும்?
பெண் குறித்த புரிதலில் ஜெயமோகனோ இன்ன பிறரிலிருந்தோ ய.ரா பார்வை வேறுபடவில்லை; பிரிய எதிரிகள் இந்தப் புள்ளியில் ஆரத் தழுவிக் கொள்ளலாம்.

பாப்லோ நெருடா எத்தனை மனைவிகள் கண்டார், எத்தனை பெண்கள் சிநேகிதிகள் கொண்டார் என்பதல்ல பிரச்சினை. அவருடைய படைப்புகளூடாக வெளிப்படுகிற ஆணாதிக்கம், அவரது காதலிகளில் குறித்த எந்தப் பெண்கள் குறித்த அவரது பார்வை என்னவாக இருந்தது? அவர் எப்படி குறிப்பிட்ட அவர்களை 'பார்த்திருக்கிறார்' அப்புறம் அது ஏன் முக்கியமானது பொருட்படுத்தப்பட வேண்டியது என்பனவெல்லாம் அலசப்படவேண்டியன. அதிலும், புரட்சிகரமான ஒருவருடைய எண்ணங்களே மிக முக்கியமாகப் பொருட்படுத்தவேண்டியதும் ஏனெனில் சமூகம்/மக்கள்/பெண்கள்/சிறுபான்மையினர் பற்றின அக்கறையை முதலாளித்துவ தலைவர்களிடமோ அதைப் பிரேரிக்கிறவர்களிடமோ நாம் எதிர்பார்த்து நிற்கமுடியாது; அவர்களுடைய எண்ணங்கள் எவ்வளவு ஆபத்தானதோ அவ்வளவு வெளிப்படையானவை.

இங்கே பிரச்சினை: இந்த புகழ்வாய்ந்த கவிஞர்களைப்போல இவர்களோடு இணைகிற பெண்கள் கலைஞர்கள் அல்ல. அந்த வகையில் குரலற்றவர்கள். உலகம் கவிஞர்களது (சோடிக்கப்பட்ட) ஒரு பக்கத்தையே கேட்டு தன் முடிவுகளை எடுப்பதோடல்லாமல் 'அவர்கள்' விரும்பித்தான் போனார்கள் என்றும் சொல்கிறது. சார்த்தரைப் பற்றி சிமோனது எண்ணங்களோ, ஃபிரீடாவின் தீகோவின் துரோகம் பற்றியதோ அவர்களும் படைப்பாளிகள் அல்லாதுபோயின் எப்படி பொதுவிற்கு வந்திருத்தல் சாத்தியம்? யாரோ ஒரு மொடலின் (Model) சகோதரியை டீகோ புணர்ந்திருந்தால் அதுபற்றி பொதுவில் பெறுமதிதான் என்ன?

இது, இந்த 'உன்னத'க் கலைஞர்களின் படுக்கையறையைத் துழாவி ஒரு இன்பம் பெறுவதற்காக அல்ல, தொழிலாளியைச் சுரண்டுவது பற்றிய பிரக்ஞைகொண்டவர்கள் சக தோழரின் உடலை சுரண்ட தமக்கு உரிமை இருப்பதாய் நினைக்கிற, அதுகுறித்து அக்கறைப்படாத உளவியலை விமர்சனத்துக்குள்ளாக வேண்டியே. அது மிகத் தேவையானதே (தேவையில்லை என்று பார்த்தால், எதுதான் தேவை?).
அந்தப் பிண்ணணியில் பா.நெருடா போன்றவர்கள் - கார்ல் மாரக்ஸ், சே குவேரா, ஸார்த்தர், மாவோ, ரோட்ஸ்கி போன்ற- ஏனையவர்களுடன் விமர்சனத்துக்குள்ளாகுகிறார்கள். அதை வலதுசாரிகள் 'உபயோகிக்கிறார்கள்' மார்க்சியத்தின் மானத்தை வாங்குகிறார்கள் என்பதற்காக அவர்களது ஆதிக்கத்தை கொண்டாடிக்கொண்டிருக்க முடியாது. அத்துடன் தத்துவங்களை அதைக் கொண்டு சென்ற மனிதர்களுடன் இணைத்து பார்ப்பதும் நிராகரிப்பதுமானவர்களின் பொருட்டு விமர்சனங்களை முன்வைத்துக் கொண்டிருக்க முடியாது.

ய.ரா அத்தகையவர்களுக்கு பதிலுறுக்கிற வேகத்தில், தானும் மார்க்சியத்தை இந்த பிம்பங்கள் ஊடாகப் பார்க்க விரும்புவதையே வெளிப்படுத்துகிறார். அவர்களுடைய தவறுகளை எந்த வித்தியாசமும் இல்லாமல், பலரிடமிருந்தும் ஏலவே கேட்டுக் கேட்டுப் புளித்துப்போன வகையிலையே நியாயப்படுத்துகிறார்:

...நெருதாவோ பிக்காஸோவோ யாரையேனும் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கியிருந்தாலோ, அல்லது கள்ளங்கபடறியா சிறுமியரை அறியாமயத் தமது பாலியல் சுரண்டலுக்குப் பலியாக்கி இருந்தாலோதான், இன்று அவர்கள உறவுகள் மீதான தார்மீகக் கேள்விகளை எவரும் எழுப்ப முடியும். ...

சரிதான். படைப்பாளியல்லாதவர்கள், வெகுசனத்தின் வெளிச்சத்துக்குள் இல்லாதவர்கள், வந்து தம்மை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய கதைகளை சாட்சிகளுடன் இனிமேலைக்கு வாக்குமூலந்தந்தால்தான் உண்டு உய்வு. கலைஞர்கள் யாரை பாலியல் வன்முறை செய்கிறார்கள், யார் விரும்பிப் போகிறார்கள் என உளவாளிகளை நியமிக்க முடியாது. படைப்புகளும் சுயசரித ஒப்புதல் வாக்குமூலங்களிலும் ஊடாக, 'ஆஹா கவிஞன் எவ்வளவு வெளிப்படையாக இருக்கிறான்' என அப்படியே பிரமித்துப்போய் மெய்சிலிர்த்து நின்றுவிடுவதால் எழுகிற கேள்விதான் மேலுள்ளது.

தம்மைச் சூழ்ந்துள்ள அரசியல்வாதிகளதும் கலை இலக்கியவாதிகளதும் படைப்புகள், நடவடிக்கைகள் குறித்த பெண்ணிலைவாத வாசிப்புக்களை தாம் வாழ நேர்நத சூழலில், மொழியில் துவங்கி வைப்பதுதான், நெருதா மீதான பெண்ணிய வாசிப்பைக் கோருகிறவர்கள், செய்ய வேண்டிய முக்கியமான பணியாகும். அவ்வாறான வாசிப்புகள் மேற்கொள்ளப்படுகிறபோது மகத்தான படப்பாளிகளின் படைப்புகள் மற்றும் வாழ்வின் மீதான பெண்ணிலைவாத வாசிப்புகள் என்பது பொய்த்துப் போவதை இவர்கள் காணவியலும். ஏனெனில் மனித உறவுகள் கருத்தியல் வரையறைகளுக்கு அகப்படாமல் நழுவுவதை இவர்கள் அப்போது காணமுடியும்.
இரண்டாவது விமர்சனம் பாப்லோ நெருதா, ஹங்கேரி மீது 1953 ஆம் ஆண்டு நடைபெற்ற சோவியத் படையெடுப்பைக் கண்டிக்கவில்லை என்பதோடு, ஸ்டாலின அத்மீறல்களை நெருதா வெளிப்படையாகக் கண்டிக்காதது மட்டுமல்ல, ஸ்டாலின் மரணத்தின் போது அவரை விதந்தோதி ஒரு அஞ்சலிக் கவிதையையும் எழுதினார் என்பதாக இருக்கிறது.

அவரைப் பற்றி 'துவக்கி வைப்பதே பணி' என்று சொல்லி அவரே ஒரு முடிவுக்கும் வந்திருக்கிறார், அதாவது அவர் வந்த முடிவே அனைவரும் வருவர் என!

பாப்லோ நெருடாவின் சில கவிதைகள் ஊடாக, அவர் பற்றிய (வலதுசாரிகளின் அவதூறுகள் அல்லாத) வாசிப்புகள் ஊடாக ய.ரா சொல்கிற முடிவிற்கு வரமுடியவில்லை. அவருடைய எல்லாப் படைப்புகளையும் சுயசரிதத்தையும் முன்வைத்து ஒரு விமர்சனம் எழுமாயின் அஃதில் பா.நெருடாவின் இடமே இல்லாது போகலாம். இதில், பா.நெருடா மீதான 'இன்னொரு' விமர்சனமான ஸ்டாலினிற்கு அஞ்சலிக் கவிதை விதந்தோதி எழுதியது குறித்து பெரிதாய் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஒரு நூற்றாண்டிற்குப் பிறகும் ஒரு கவிஞனை இப்படி தூக்கிப் பிடித்துத் தாங்கோ தாங்கென்று தாங்க முடியுமெனில், அது ஒரு அல்ப விசயம். அது ஒரு வலு இயல்பான சின்ன விசயமுங்கூட. எங்காவது மரணக்குறிப்பில் "இந்த ஆண் இன்று இறந்து போனான். ஏலவே திருமணமான ஒரு பெண்துணையுடன் வாழ்ந்தான். சிறந்த மனிதாபிமானி. இவனது சக தோழரான ஒரு பெண்ணை வாக்குவாதத்தில் 'வேசை' என்று விளித்தான். இறக்கும்போது சில சொச்சம் வயதுதான். மிகவும் நல்லவன். ஒரு போது மதுஅருந்துகையில் வாழ்நாளில் ஒருபெண்ணினது கன்னிமையாவது தான் உடைக்கவேண்டுமென குறிப்பிட்டான். பாவம்! அது நடைபெற முன்னவே இறந்தான்" என்கிற ரீதியில் யாரும் 'உண்மை' எழுதுவார்களா. தான் சார்ந்த, தான் -ய.ரா போல- நியாயப்படுத்தின ஒரு கட்சி விசுவாசத்தில் ஸ்டாலினுக்கு அஞ்சலிக் கவிதை எழுதுவதெல்லாம் ஒரு விடயமா? எல்லாவிடயங்களையும் 'முதலாளித்துவ அவதூறுகளையும்' தாண்டி கிடைக்கக்கூடிய தகவல் யுகத்தில் இருந்துகொண்டு இன்னமும் அதே பழைய துருப்பிடித்த –பேரீச்சம் பழக் காரனுக்குப் போடவேண்டிய- மரபின் எச்சங்களுடன் நூற்றாண்டுக்கு முந்தையவனை ஒருவர் நியாயப்படுத்தும்போது, பா.நெருடா ஸ்டாலினுக்கு அஞ்சலிக் கவிதை எழுதியதை அவருக்கெதிராக நிறுத்தும் இந்த நாசங்கெட்ட வலதுசாரி, முதலாளித்துவ விமர்சகர்களைத்தான் என்ன செய்ய முடியும்?

...கிறித்தவ அறவியலால் உந்தப்பட்ட தாந்தேவின் கனவு ஒரு துரோகமாகும் எனில், சோவியத் யூனியனால், உந்தப்பட்ட நெருதாவின் புரட்சிகர அறவியல்சார் கனவும் ஒரு துரோகம்தான். நெருதாவின ஸ்டாலினிய ஈடுபாடும் சந்தேகமில்லாமல் ஒரு துரோகம்தான். ஆனால் நெருதா முன்வைத்த, சகல மானுடருக்கும் விடுதலையெனும் நெடுங்கனவில் அவருக்கு இருந்த ஈடுபாடும், ஒரு ஆத்மார்த்தமான கம்யூனிஸ்ட்டாக சுயவிமர்சனத்தில் நெருதாவுக்கு இருந்த ஈடுபாடும் அவரது துரோகத்தை வரலாற்றின் மீது சுமத்திவிட்டு தன் மீதான விலங்குகளை உதறிவிடுகிறது.

இறுதியாக, அந்த நெடுங்கனவில் ('சகல மானுடருக்கும் விடுதலையெனும்' என்பதற்குள்) பெண்கள் அடங்கமாட்டார்கள் என்பதோடு, யமுனா ராஜேந்திரன் -வசீகரமான, ஆத்மார்த்தம் கம்யூனிஸம், சுயவிமர்சனம் ஆகிய, சொற்களின் துணையுடன்- உதறப்பட்டுள்ளதாக சொல்வது வேறொன்றைத்தான் என்பதையும் இங்கு மிகவும் நாகரீகமாய் எழுதிக் கொள்கிறேன்.

மேலும், ஒரு சுற்றுலாப் பயணிபோல தஞ்சை பெருங்கோவில் செல்கிற யமுனா ராஜேந்திரன்களிற்கு அங்குள்ள சிற்பங்களின் 'கலை'நேர்த்தி மட்டுந்தான் தெரியும். ஆனால், அரண்மனைகளது அந்தப்புரங்களது அழுகுரல்கள் அதைக் கடந்து சென்ற சிலருக்குத்தானும் கேட்டிருக்கவே செய்யும். உங்களை அவை அடைந்ததில்லை என்றால் உங்களுக்கு அதைக் கேட்கிற தன்மை/விழைவு கிடையாது என்றே அர்த்தம்.
0

Sunday, July 03, 2005

மாற்றம் ஏ..மாற்றம் (1)

(ஒரு warm up தொடர்)


She came home running
Back to the mothering blackness
Deep in the smothering blackness
White tears icicle gold plains of her face
She came home running

here to the black arms waiting
now to the warm heart waiting

black yet as Hagar’s daughter
tall as was Sheba’s daughter…

-மாயா ஆஞ்சலோ, கவிதை: The Mothering Blackness



சின்னப் புள்ளியளுக்கு எல்லாமே அதிசயந்தான். அதுகளிட உலகமே ஒரு தனிதான். அதுகள் ‘பிப்பி’ இருக்குங்கள் அல்லது ‘வீவீ ' இருக்குங்கள்.. திடீரெண்டு ஒருநாள் தாங்களா வந்து 'டூ' எண்டுங்கள். அவர்களுக்கென்றிருக்கிற ரகசிய மொழிகளும் நம்பிக்கைகளும் ஆய், ஒரு பருவத்தை களங்கமின்மைகளுடன் (நிறைய கள்ளத்தனத்துடன்) வாழ்ந்தபடி...

கன நாளைக்குப் பிறகு, நான் என்னோட குட்டிச் சாத்தானக் கண்டன். கொஞ்சம் வளர்ந்திருந்தான். ஆனாலும் இன்னும் சின்னப் புள்ள. இப்ப அவனுக்கு வாசிக்கத் தெரியுது. நல்லா. அதுவும், படு வேகமா எனக்கு காட்டாப்புக் காட்ட படிச்சண்டு போகேக்குள்ள நான் திருத்தினா, கொஞ்சம் நிண்டு அவமானப்பட்டு தொடர்ற அளவுக்கு!! ஆனா 'சொதி'க் கதை போகேல்ல. புதிய 'புதினங்களா' நிறையச் சொன்னான். திடுப்பென, "நான் இப்ப டான்ஸ் பழகிறன் தெரியுமா" எண்டான். "ஓ! உண்மையாவா? ஆடறனியா" எண்டன். " "ஹாஹா" எண்டிட்டு சொன்னான்: "நான் என்ன பெட்டையா? தங்கச்சிதான் பழகிறவள்." நான், "டேய்ய்ய்ய்ய் எண்டிட்டு பெடியங்களும் பழகிறவங்கள்தானடா" எண்டன். அவன் ஒரு புத்தகம் கொணந்தான். அது சின்னப் பிள்ளைகளுக்கான pictionary (பட(அ)கராதி?!?). அவன் அறிமுகப்படுத்தின விளையாட்டு: அதில இருக்கிற ஒரு படத்துக்கு அவன் விளக்கம் தருவான் (உதாரணம்: அது ‘பறக்கும்’), நான் அந்த சொல்லக் கண்டுபிடிக்கோணும் (பறக்கும் = பறவை). பெரீய விளையாட்டுத்தான், ஆனா எனக்கு விளையாட வரேல்ல, ஒரு சொல்ல விபரிக்கவே மிகவும் திணறினன். சுலபமான விசயங்கள்தான் எவ்வளவு கஸ்ரம்? ஆனா அவன் ஒவ்வொரு சொல்லையும் டாண்டாண் என்று விவரிச்சான். நானும் டாண்டாண் என்று பதில மட்டும் சொல்லிக்கொண்டே இருந்தன் (விவரிக்கத்தான் வரேல்ல). நல்லாப் போச்சு. கடேசியா அவன் சொல்றான் "ஐயோ உனக்கென்னண்டு எல்ல்ல்..லாச் சொல்லும் தெரியுது (அச் சொல்லுகளாவன பறவை, பந்து, புல்லு, முயல், கோழி, இத்தியாதி – அவனது விளக்கங்களாவன: பறக்கும், சின்னப்புள்ளையள் பூங்காவில வைச்சு விளையாடுறது, இது வந்து வடீ..வான ச்சின்ன மிருகம் ம்ஹீம் ம்ஹீம் வேற எப்பிடிச் சொல்றது ம்? ஆ.. அது வந்து முதல் எழுத்து ஆர் கடைசி எழுத்து 'ரீ' இடையில..., தரையில இருக்கும் பச்சைக் கலர், முட்டை வாறது, இத்தியாதி) நீ செரியான கெட்டிக்காரி."
எனக்கு என்ன சொல்றதெண்டே தெரியேல்ல. அவனுக்கு அவ்வ்வ்வளவு அதிசயம். முட்டைக் கண்ண அகல விரிச்சுப பாக்கிறான்.
நம்ம அவ (எவ?) சொன்னதுமாதிரி இந்த வாழ்க்கையே ஒரு மிகப்பெரிய நகைச்சுவைதான். யோசிச்சுப் பாக்கிறப்போ சிலவேளை blossoming memories ya(மலரும் நினைவுகள்)... ஒவ்வொண்டா. ஒவ் வொவ் வொண்டா.

அப்ப சின்னப் புள்ள. ஓ! அவனை மாதிரியே. இந்தியாப் புத்தகமெல்லாம் வீட்டில கிடக்கும். அதில வாற ஆங்கிலச் சொற்கள தமிழில படிச்சா எனக்கு விளங்காது (சரீ சரீ ஆங்கிலத்தில தெளிவா எழுதி இருந்தாலும் விளங்காது தான்). தமிழ்ல அப்பிடி ஒரு வார்த்தையே இராதே? இல்லது இருக்குதோ? எனக்குத் தெரியேல்லையா.. அப்பரிட்டப் போயி, கேட்டா அவர், "'டூ வீலர்' எண்டா 'ரூ வீலர்' அதான் இரு சக்கர வண்டி - மோட்டர் சைக்கிள்" சொல்லுவார். அய்ய்ய்ய்யோ! அப்பர் எவ்வளவு கெட்டிக்காரர். ஆவருக்கு எல்ல்...லாமே தெரியுதே. ஐயோ…………………………….. எப்பிடி???? அதிசயம் தாங்காது. 'ஆ' வெண்டண்டு பெரீய்ய பெருமையோட திரிவன். அப்பர்! என்ர அப்பர்!

அந்த 'அதிசயிப்பு' விவரிக்க முடியேல்ல.
அழியாத கோலங்கள் இல அந்தக் கறுத்த வடீவான பெடியன் பாத்தண்டு இருக்கிற கொளுகொளு எண்டிருக்கிற அந்த வடீ...வான ஷோபா டீச்சர்
சவத்துக்குதவாத படு ஆங்கீலேயப் படமான the end of the affair இல் கன்னத்திலையோ என்னவோ தேமல் படர்ந்த தன்னம்பிக்கையற்றிருக்கும் அந்தப் பையனுக்கு ஒரு தேவதைபோல ஜீலியானா மூர் கொடுத்த இதமான அந்த முத்தம்
நட்சத்திரன் செவ்விந்தியன் கவிதைகளில் வந்த மஞ்சட் பூக்காடுகள்
இந்த ஞாபகங்கள் எங்கிருந்து வருகின்றன?


போன விடுமுறைக்கு வீட்ட வந்து நிண்டாள் ஒரு சுந்தரி. அண்டைக்கு அவளோட தோஸ்த்து அக்காமார் எல்லாம் வெளியே போனபடியா மாட்டீற்றன் அவளிட்ட. நேரத்த எடுக்கப் போறாளே எண்டு இருக்குது எனக்கு. ஆனா அவள் கற்றுத் தந்த விளையாட்டு ரொம்ப சுலபம் (தப்பினன்!). அவ போனில கதைக்கிற மாரீ பாவனை பண்ணுவா, ஒலிவாங்கியை கையில எடுத்து ஹலோ ஹலோ எண்டுவா, நான் பதிலுக்கு சொல்லணும். அவ்வளவுதான். அவள் கதை போற திசையில என் பதில் விரியணும், அட! அவ்வளவே! கடேசீயாத்தான் விளையாட்டிட தலை புரியுதெனக்கு. திகைப்பாயீட்டு!
அதென்னண்டா ஒவ்வொருமுறையும் தொலைபேசி ஒலிக்கும். அவள் எடுப்பாள். ஹலோ சொல்லுவாள். பிறகு...
நான் ஹோலண்டில நிக்கிறன்.
நான் சுவிஸ் இல நிக்கிறன்
நான். ம்... பிறான்ஸில நிக்கிறன்
ஓமிப்ப நான் கனடாவில நிக்கிறன்

இப்பிடியே போகும். அவளோட வயசில எனக்குத் தெரியாத தேசங்கள் எல்லாம் அவள் வாயில வந்து வந்து போனதா, ஒரே திகைப்பாயிற்றுது. அவளுக்கொரு ஆறு வயசுதான் இருக்கும். இடையில ஆள நிப்பாட்டி “நீ என்னெண்டு கனடாக்க வந்தனி" எண்டு விட்டா, "எப்பிடியோ வந்து சேர்ந்திட்டன்" எண்டாள். அப்புறம்தான் மரமண்டையை துளைச்சதில கால் புரிஞ்சது, அவளோட அம்மாட அண்ணன், தம்பி, அவளோட அப்பாட உறவுக்காரர்கள் எல்லோரும் பயணமுகவர் (Agency) ஊடா ஐரோப்பாவில எந்தெந்தவோ தேசங்களில் வந்து நிண்டு அவளோட வீட்ட தொடர்புகொண்டத பார்த்து வளர்ந்தவள், அதை பாவனை செய்யிறாள், நடிச்சுக் காட்டுறாள்! என்ர சுந்தரீ!

ஆனா ஒண்டு. எல்லாச் சின்னப் புள்ளியளும் அப்பாவிகள் எண்டில்ல, சிலதுகள பாத்தாக் கொல்லுற ஆத்திரம் வரும். செரியான ஒசிலாங்கம்!!!!!! அதிலும் காதலனோட பழைய காதலியிட பிள்ளைகள். ehhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhh! அதுகள் விதிவிலக்கு. நுள்ளோணும்போலத்தான் இருக்கும். இளங்காலத்தில், எரிச்சலைக் கிழப்ப, பழைய காதலிகள் பற்றித்தான் எத்தனை திரைப்படங்கள்! அவர்கள் கையிலிருக்கிற குழந்தைகள இவர்கள் பாக்கிறதும், ஏக்கம் கலந்த சிரிப்பும், இதுகளப் படங்கள்ல அவுக காட்டக் காட்ட இங்க மனசில வலு காட்டமா இருக்கும்! என்ன அநியாயம்! கண்டமேனிக்கு V.P ஏறும், CUT! CUT!


ஒருபோதும், நான், கலியாண வீடு சாமத்திய வீடு கொண்டாட்டங்கள் வழிய இரு கரங்களிலும் பிள்ளைகளை கொண்டு நடை பயலுகிற எனது உறவுக்கார சிறு வயதுப் பெண்களாய் இருந்ததே இல்லை; எனக்குள்ள, குழந்தைகள் எண்டா ச்சோ சுவீட் எண்டெண்டு உண்மைக்கும் பூரிச்சுப் போற அந்தப் பிள்ளைகள் இல்லை. ஒரு புதுவருடத்துக்கு, வாழ்த்தா அவர் சொன்னார் "எல்லாரும் பிள்ளை பெத்து எல்லாரும் குடும்பம் கட்டி அப்புறமென்ன பிள்ள?" செரியா பதிஞ்சு போயிற்று மனசில. அப்ப, வகுப்பறையில, "யாருக்கு சின்னப்பிள்ளைகள் பிடிக்கும்" "பெற்றோராகப் பிடிக்கும்" "பிடிச்சாக்கள் கையை உயத்துங்கோ" கேள்விக்கு, நான் மட்டும்தான் தயங்கித் தயங்கிக் கையை உயத்துவன், கடே..சியா, பிள்ளைகள் விநோதமாய்ப் பார்ப்பார்களோ என்ற பயத்தில (மனதுக்குள்ள: 'என்ன stupid கேள்வி இது! ரொம்ப முக்கியம் இப்ப!").
ஆனா இன்றைக்கு இந்தக் குழந்தைகளூடா என்-னென்-ன-மோ தோணுது. இழந்த innocence ஆ, எல்லாத்தையும் முழுமையா நம்பி எல்லாத்தையும் அதிசயிச்சு நிக்கிற பாதுகாப்பான வளையத்திலிருந்து விலக்கப்பட்டுள்ளதை உணர்தலாலா?
அப்பா ஒருநாள் என்னைக் கூப்பிட்டார். ஒரு கடிதத்தத் தந்து "பிள்ளை செரியாண்டு பாரு, பாத்திற்று ஒருக்கா மெயில் பண்ணி விடு" எண்டார். ம். பார்க்கிறன். அப்பரிட கடிதத்தில –என்ர அப்பாட கடிதத்தில- அற்பத்தனமான 'ழ' 'ள' பிழையள். எனக்குத் தாங்கவே முடியேல்ல. எப்பிடி?

எனக்குள்ள இந்த உலகத்தில உள்ள மலரெல்லாம் தன்னோட ரோஜா போல அழகாய் இராது என நம்பிய குட்டி இளவரசன் ஒரு ரோஜாத் தோட்டத்தை கண்டபோதான துக்கம். ஐயோ! அனேகமா அப்பர் இந்த 15-20 ஆண்டுகளுக்குள்ளாற தனது இளம் பராய வாசிப்புப் பழக்கத்தை தொழிற்சாலையும் முதலாம் உலக உளைச்சலுக்குள்ளும் தொலைத்துவிட்டதால வந்த எழுத்துப் பிழைகளா அவை இருக்கலாம். அடிக்கடி எழுதாத/எழுதுதல் அபூர்வமாகிவிட்டதன் கைப் பிறழ்வாகக்கூட இருக்கலாம். ஆனால் அவர் என்னுடைய அப்பர். எனது பிழைகள் எல்லாம் திருத்தப்பட்ட, கேள்விகளுக்கெல்லாம் பதிலாய் இருந்த, எனது கண்கள் தன்னால் முடிந்தளவு விரியக் காரணமான ஒருத்தர்.

அந்த நாளில் அவரோட எழுத்துப் பிழையையும் என்ர சாத்தானோட அதிசயிப்பையும் என்னையும் தோழரிடம் சொல்லச் சிரிக்கிறாள். பச்! எனக்கு விவரிக்கத் தெரியேல்ல. ஆனா ஒரே பீலிங்கா இருக்கு.

(...பீலிங் whenever I feel like it தொடருமாம், மன்னிக்க!).