@font-face { font-family: TSCu_InaiMathi; font-style:normal; font-size: 10pt; font-weight:normal; src:url(http://mathy.kandasamy.net/fonts/TSCUINA1.eot); }

Monday, May 30, 2005

இரு ஆளுமைகளைச் சந்தித்தல்: ஆளுமை 02

முன்அனுமானங்கள், பரிந்துரைப்புகள் எதுவுமின்றி -ஒரு வெகுஜன இதழில்- படித்த சிறுகதையொன்றை எழுதியவராகவே கமலா தாஸ் (Kamala Das) அறிமுகமானார்.
அதுவரையில், கதையென்பதைத் தவிர சிறு சலனம், பதில்வினை எனவொரு அருட்டலையும் தந்திராத எத்தனையோ படைப்புகளை கடந்து சென்றதேயுண்டு; தனது கதைகளூடாக, துரோகத்தை அதன் கொடூரத்தை தயவுதாட்சண்யமே இல்லாத அதன் இருப்பை, கமலா தாஸ் போல அடித்தவர்கள் யாரும் தெரியாது.
பொய்கள் என்கிற அந்தக் கதையில் வந்த கதாபாத்திரங்கள் குடும்பம், காதல், உறவு இவை தொடர்பாக வெளியுலகம் புனைந்தவற்றிற்கு எதிரானதாக இருந்தது.
பிள்ளையை தகப்பனுடன் விட்டுவிட்டு வேலைக்குப்போகிற தாய். தாய் சென்ற பிறகு, வருகிற அப்பாவின் காதலி(கள்?);, அவர்கள் அப்பாவோடு இருப்பதை –அம்மா வருகிற நேரத்திற்குமுன் போய்விடுவதை- பார்க்கும் பிள்ளை; அந்தக் காதலிகள் பிள்ளையை அணைத்தும் கொஞ்சியும் இனிப்புகள் தந்து செல்வார்கள். பிள்ளையின் பார்வை மட்டும்தான் அங்கிருக்கும். இதை பிள்ளை தாயிடம் `தன்னுடைய மொழியில்` இனிப்புகளின்/அவர்கள் அணிந்து வந்த ஆடைகளின் வாசனையைக் குறிப்பிட்டுச் சொல்லும்போதெல்லாம், 'பொய்' சொல்வதாக வரவர அவன் பொய்கள் கூடுவதாக தகப்பன் சொல்லுவார், பொய் கூடக்கூட அடிப்பாரோ என்னவோ! தாய் அமைதியாக அவனிடம் அவன் சொல்லுகிற கதைகளைக் கேட்டபடி, ஏதேனும் கனவு கண்டடினியோடா என தடவிக் கொடுப்பாள். 'உண்மையாத்தான்' என அழுவான், கதையின் முடிவு வரை!

புரட்சிகரமான கண்ணோட்டத்தில் தென்பட்ட உலகிலே, ஒருபக்கம் அந்தக் கணவனை 'ஆம்பிளை' என நாலு வசனம் பேசி, இரண்டு சாத்து சாத்தி ஒரு புறமா தூக்கித் தொங்கவிட்டும், இன்னொரு பக்கம், அவனது 'கள்ளக்காதலிற்கான' சாப/பாப/பழி வார்த்தைகளை கதைபூரா இறைத்தும் வாசக (என்!) மனத்தைச் சாந்திப்படுத்தாமல், வாழ்வின் இயல்பாய், வலு சாந்தமாய், ஒரு கதையை அத்தகைய கருவில் படித்தது அதுதான் -போதாக்குறைக்கு- முதல் முறை. நெடுநாள் 'அந்தப் புள்ள எப்ப தாயிட்ட சொல்லீ... தாய் நம்பீ... (பிறகாவது என் மனச்சாந்திப்படும் 'உலுக்கல்கள்' நடக்காதா?)' எண்டு அருட்டிக்கொண்டே இருந்தது அது.
கதையைப் புரிந்துகொள்வது, தனியே தகப்பனோட பொய்கள்/களவு என்பதாக அல்ல; அந்தச் சிறுவன் வளர்ந்து, விபரம் புரிந்து, 'உண்மை'யைச் சொல்கையில் (காலம் தாமதமாகிவிடும்) அந்த உண்மை'க்கு பெறுமதி இருக்கப்போவதில்லை என்பதும், அப்படியானபோது, அதன்மேல் சாபங்களோ 'ஒழுங்காக்கும் தேவையோ' இல்லை என்பதும். அப்போ, குடும்பம், உறவுகள் இவைகளுPடாக உலகம் காவுற உண்மை என்ன அது எவ்வளவு போலியானது?

இந்தக் கேள்விகளாக, `உண்மை`யை/`உண்மை`யான எழுத்தைப் பற்றியதான உரையாடலில் கமலா தாஸ் வருகிறார். அம்பையின் கட்டுரைகள் மற்றும் சில படைப்புகள் எவ்வளவு கவர்ந்தனவோ, ஒப்பிடவியலா அளவில் மிகவாய்ப் பிடித்தது கமலா தாஸை, 'மலபாரில் பிறந்த பழுப்பு நிற இந்தியப் பெண்' என்று தன்னை அறிமுகப்படுத்திய கிறுக்குத்தனங்கள் நிறைந்த அவர், இயல்பு மிகுந்த மனிதர்களை நேசிக்கிற எல்லோருக்கும் பிடிக்கக்கூடியவராகவே இருப்பார். அதிலும் தம்முடைய கிறுக்குத்தனங்களை சமூகத்தின் பாசாங்குகளோடு ஒத்திசைந்து மறைக்க முனையாமல் வெளிப்படுத்துகிறபோது அது அந்த எழுத்தாளர்களை சுவாரசியமானவர்களாக நம்மை ஒத்தவர்களாக உணர வைக்கிறது. -விபரம் தெரியாத வயதுகளில் குளியலறை சொற்களை சொல்லி 'பெரியவர்களை' குழந்தைகள் அதிர்ச்சி ஊட்டுமாப்போல- பாசாங்கான உலகத்தின் மீது, தமது கிறுக்குத்தனங்களால் அதிர்ச்சி தருகிறார் இவர். பலவந்தமாய் தமக்கு ஒவ்வாத கருத்துகளுக்குள் தம்மை அடைத்துவைத்துக்கொண்டு தமக்கென ஒரு பிம்பத்தை உருவாக்குகிற எழுத்தாளர்கள் போரடிக்கக்கூடியவர்கள், தன்னை (சரியோ தவறோ) அத்தகைய அதிர்ச்சியூட்டல்களூடாக வெளிக்காட்டி வருபவர், தன் அறிமுகத்தில் இவ்வாறு எழுதுகிறார் (கவிதை: ஒரு முன்னுரை):

... நான் குழந்தையாயிருந்தேன்,
பிறகு அவர்கள் என்னிடம் சொன்னார்கள்
நான் வளர்ந்து விட்டதாக –
நான் உயரமானதால், கைகால்கள் பருத்ததால்,
ஓரிரண்டு இடங்கள் ரோமம் துளிர்த்ததால்.நான் காதலைக் கேட்டேன், வேறெதுவும் கேட்கத் தெரியாததால்.
பதினாறு வயது இளமையை அவன்
படுக்கையறைக்குள் இழுத்துச் சென்று மூடினான் கதவை.
அவன் என்னை அடிக்கவில்லை
ஆனால் சோகமான என் பெண்ணுடல் அடிபட்டதாய் உணர்ந்தது.
என் மார்பகங்களின், கருப்பையின் பாரம்
என்னை நசுக்கியது.
பரிதாபமாக சுருங்கினேன் நான்.

பிறகு... ஒரு சட்டையும்
என் சகோதரனின் கால்சட்டையையும் அணிந்தேன்,
என் தலைமுடியைக் கத்தரித்துக் கொண்டேன்,
என் பெண்மையை நிராகரித்தேன்.
அவர்கள் சொன்னார்கள்:
சேலை உடுத்து, பெண்ணாயிரு, மனைவியாகு.
பூத்தையல் வேலை செய், சமையல்காரியாகு,
வேலைக்காரிகளோடு சண்டையிடு.
பொருந்து, சமூகத்தோடு இணைந்துகொள்
என மனிதர்களை வகைப்படுத்துபவர்கள் கத்தினார்கள்:
''சுவர்களின் மீது உட்காராதே
திரைச்சீலையிட்ட ஜன்னல்களின் ஊடே நோட்டமிடாதே,
ஆமியாக அல்லது கமலாவாக இரு.
*மாதவிக்குட்டியாக இருப்பது இன்னும் நல்லது.
ஒரு பெயரை, ஒரு வாழ்க்கைப் பங்கைத்
தோந்தெடுக்கவேண்டிய நேரமிது.
பாசாங்கு விளையாட்டுகளில் ஈடுபடாதே.
மனநோயாளி மாதிரி நடந்துகொள்ளாதே,
காமம் நிரம்பியவளாக இருக்காதே.
காதலில் மோசம் போகும்போது
சங்கடம் தரும்படி அழாதே. "

...
விமர்சகர்களே, நண்பர்களே,
வீட்டிற்கு வரும் ஒன்றுவிட்ட சகோதர, சகோதரிகளே
என் வாழ்க்கையில் தலையிடாமல் இருக்கக் கூடாதா?

...
நான் பாவி
நான் புனிதமானவள்
அன்பிற்குரியவள் நான்
வஞ்சிக்கப்பட்டவள் நான்
உங்களுக்கில்லாத இன்பங்கள் எனக்கில்லை
உங்களுக்கில்லாத துன்பங்கள் எனக்கில்லை
...
-0-

நீங்கள் தவறான பால்த்தன்மையுடன் பிறந்துவிட்டதாகக் கூறினார்கள். ஆணாக இருந்திருந்தால் எழுத்தாளராக இருப்பது எளிதாக இருந்திருக்கும் என்று நினைக்கிறீர்களா?

ஆமாம், நிச்சயமாக. எனது மாமா நாலப்பாட் நாராயண மேனன் எல்லோரும் அறிந்த ஓர் எழுத்தாளராக இருந்தார். காலையிலிருந்து இரவு முடிய அவர் எழுதிக்கொண்டிருப்பதைக் கவனித்திருக்கிறேன். எழுதுவதைத் தவிர வேறெதையும் அவர் செய்யவேண்டியதில்லை. அது ஓர் ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கை என்று நினைக்கிறேன்.
(பக். 31, பனிக்குடம், ஜீலை-ஆகஸ்ட் 2003)


பனிக்குடம், 1996 இல் Rediff இணையத்தளத்தில் ஷோபா வாரியர் (Shobha Warrier) கமலா தாஸைக் கண்ட நேர்காணலின் சில பகுதிகளது மொ-பெயர்ப்பைப் போட்டிருக்கிறது (இதழில் நேர்காணப்பட்ட ஆண்டு 1996 என்பது போடப்படவில்லை).
படைப்புகளில் மனசிலறையும் வலியை உண்டுபண்ணுபவர், நேர்காணல்களில் சிரிப்பையும் உண்டுபண்ணுவார். அம்பையிலும்விட, இந்த மனுசியிடமிருக்கிற நிறைய கிறுக்குத்தனங்கள் அவ்வாறு சிரிப்பைத் தூண்டும், கணவர், தன்னை 'கவிதை எழுதுவதைப் பற்றி யோசிப்பதை நிறுத்தச் சொன்னது' பற்றி...... இயல்பெனவே இவர் சொல்லுகிறவை '...என்னுள் கவிதை செத்துவிட்டது. ஏனெனில் நான் நேரத்தை வீணடிக்கிறேன் என்ற குற்றவுணர்வின்றியும் அது என்னுடைய கணவருக்கு உதவப்போவதில்லை என்ற உணர்வோடும் என்னால் சிந்திக்க முடியாது' என்றும், 'காதலன் கிடைத்தால் அவனிடமே போய்விடுவேன்' என்கிற, ‘உன்னை நான் காணும்வரை/கவிதை எழுதினேன், ஓவியம் தீட்டினேன்;/தோழிகளுடன்/உலவி வந்தேன்./இப்போது, நான் உன்னைக் காதலிக்கிறேன்./என்வாழ்க்கை ஒரு நாயைப்போல/ஒடுங்கிச் சுருண்டு கிடக்கிறது/உன்னில் மனநிறைவைக் கண்டு’ என கவிதை எழுதிற, கமலாவைப் படிக்கையில் -வரட்டுத்தனம் அற்ற- அங்கதத்திற்கு இடமிருக்கும், அவருடைய வாசகமான “ஆண்கள் தந்திரசாலிகளாகவும் சந்தர்ப்பவாதிகளாகவும் இருக்கின்றனர்; பெண்களோ திறந்த புத்தகங்களாக இருக்கின்றனர்“ (அதை நான் நம்பவில்லையென்ற போதும்!) போல 'அவர்' இருப்பதாய்ப் படும்; அத்தகைய பண்புகளாலேயே, அவரது, எனது கதை என்கிற சுயசரிதம் வந்தபோது ஒழுக்கமற்றவராகவும் nymphomaniac ஆயும் பார்க்க/விமர்சிக்கப்பட்டிருக்கிறார்.

எமது இடங்களில் Womanizer என்கிறபதம்கூட ஆண்களை நோக்கி சொல்லப்படுவதில்லை. இங்கே, ஆண்கள், பெண்டாளுதலும் பல உறவுகள் 'வைத்திருப்பதும்' அவனுடைய பண்பாக 'ஏற்கப்பட்டும்', பெண்கள் உறவுகளில் 'வீழ்வதையும்' அவ் உறவுகளை முன்வைத்து 'துரோகத்தை'ப் பற்றி பேசுவது சலனமூட்டக்கூடியதாய் இருப்பதும், ஆச்சரியமானதல்ல. இங்கே பெண்கள் விடயத்தில் ஆண் கொஞ்சம் பலவீனனாகவும், பெண்ணோ காம நோய் பிடித்தவளாயும் நிறுவப்படுகிறாள்.
இவற்றில் பொருட்டின்றி, கமலா தாஸ், காதல், கருணை, துரோகம், சரணடைதல், பழகுதல் என மனிதப் பொதுக் குணங்களின் முன்னால் தன்னை மறைப்பின்றி முன்வைக்கிறார். அந்த முன்வைப்பு, அதன் நேர்மை, எதிர்கொள்ள முடியாததாய் இருக்கிறது, ஏனென்றால் எல்லோருமே பாதுகாப்பான வளையங்களில் வளைய வந்துகொண்டிருக்கவே விரும்புகிறார்கள்/றோம். உண்மையை நெருங்குதல் முன்வைத்தல் என்பதானது பாதுகாப்பான வளையங்களை அகற்றுவது என்றாகிறது; அவற்றை என்ன காரணங்களுக்காக ("புகழுக்காக" "பணத்துக்காக") இவர்கள் அகற்றினாலும், அதில் பிறக்கிற இலக்கியப் பிரதிகள் முக்கியமானவை.

இந்த இரண்டு சுவாரசியமான பெண்களுக்குமிடையேயான இன்னொரு பொது ஒற்றுமை: இவர்கள் இருவருமே ஆதிக்க ஜாதிப் பின்னணியை உடையவர்கள் என்பது. பொருளாதாரரீதியாக கீழ் மட்டங்களில் ஒடுக்கப்படுகிற ஜாதிப் பின்னணியில் இருந்தெழுதுகிற பெண்களால் இவர்களது காலத்தில் -இவர்களை விமர்சனங்களுடனும் வாழ விட்ட இச் சமூகத்திலையே- இவர்கள் பேசிய விடயங்களை பேசியிருந்திக்க முடியுமா என்கிற கேள்வியும் உண்டு.

இவை தவிர்ந்து, அம்பையின் நேர்காணல் படித்துவிட்டு அம்பையைப் பார்க்க மும்பாய் செல்ல நினைத்திருந்திருந்திருக்கிறேன்; தத்துவங்கள் எல்லாவற்றையும் கோஷமாகவே சுருக்கிய நபர்களுள் அதை வாழ்வின் பிரிக்க முடியாத பகுதியாக தன்னுடன் இணைந்ததாக அவர் பேசியதாக உணர்ந்ததால்.

கமலா தாஸின் சிறுகதைகளின் ஈரத்தில் கேரளத்தில் அந்த அவரது வீட்டுப் படலையைத் திறந்து –hope fully- காவல் நாய்கள் இல்லாததான அவரது வீடு நோக்கி சென்றுகொண்டிருந்திருக்கிறேன், பாலசந்திரன் சுள்ளிக்காடின் சிதம்பர நினைவுகள் (மொ-பெ: கே.வி.ஷைலஜா, காவ்யா பதிப்பகம்) நூலில் அவர் எழுதிய, ''..அவளுடைய கதைகள் எனக்கு துர்சொப்பனங்களாக இருந்தன. அவை உலகத்தினுடையதும், வாழ்க்கையினுடையதுமான சூட்சுமமான அந்தரங்கத்தை எனக்கு அறிமுகப்படுத்தியது. மின்விசிறியில் அடிபட்டு துடிக்கும், அந்த சிட்டுக் குருவியின் ரத்தம் தெரிந்த கறை இப்போதும் என் இதயத்துள் ஒட்டிக் கிடக்கிறது" என்கிற அதே, அதே எண்ணத்தோடு.

இன்றைக்கு அவ்வாறான சந்திப்புகளில் ஆர்வம் போய்விட்டது; அப் பாதிப்புகளிலே நெடுநாள் தங்க முடிந்ததுமில்லை (தங்கித்தான் என்ன செய்வது?!). ஆனால் இப்போது சந்திக்கையிலும், விமர்சனங்களுக்கு அப்பால், இந்தப் பெண்கள் வியப்பிலும் நெகிழ்ச்சியிலும் ஆழ்த்துகிறார்கள். தம்முடன் இயல்பென இவர்கள் கொண்டிருக்கிற அவைதான் அவர்களுடைய ஆளுமையை நிலைநாட்டிக்கொண்டிருக்கிறது என்றும் தோன்றுகிறது.



நீங்கள் என் கதை எழுதியபோது ஏன் மக்கள்
அதிர்ச்சியடைந்தார்கள்?

இல்லை, அவர்கள் அதிர்ச்சியடையவில்லை. அதிர்ச்சியடைந்ததைப்போல் பாசாங்கு செய்தார்கள். மற்றவர்களிடம் தாங்கள் அறியாமை நிறைந்தவர்கள் என்றும் புனிதமான திருமணத்தின்பின் கட்டுப்பாடுகளை ஒருபோழுதும் மீறியதில்லை என்றும் நிரூபிப்பதற்குத்தான். எவருமே அதிர்ச்சியடையவில்லை. இம்மாதிரியான விஷயங்கள் வருடவருடங்களாக நடந்துகொண்டேயிருந்திருக்கின்றன. நான் நிலப்பண்ணை உரிமை சார்ந்த ஒரு பின்புலத்திலிருந்து வந்தவள். இரவில் ஆண்கள் எப்படித் திரிவார்கள். ஏழைகளின் வீட்டிற்கள் நுழைந்து அவர்களது பெண்களை எப்படிப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவார்கள் என்றும் நன்கு அறிவேன். அவர்கள் கர்ப்பமுற்றால் மூழ்கடிக்கப்படுவார்கள் இவையெல்லாம் நிகழ்ந்துகொண்டேயிருக்கின்றன. இவற்றை நாங்கள் அறிந்தவர்களாயிருந்தோம் ஆனால் இது இரவில் மட்டும்தான் நிகழும். நான் எப்பொழுதுமே அன்பொன்றையே விரும்பினேன். உங்களது வீட்டில் அன்பு கிடைக்கவில்லையென்றால் கொஞ்சம் கவனிப்பாரற்ற குழந்தையாக வெளியே திரிவீர்கள்.
(பக். 34, பனிக்குடம்)

  • *கமலா தாஸின் புனைபெயர்
  • கமலாதாஸ் சந்திப்பு மொழியாக்கம்: மாலினி
  • கவிதை தமிழாக்கம் எழுத்தாளர் ஆர். சிவக்குமார் (ஒழுங்கு மாற்றிப் போடப்பட்டுள்ளது)·
  • காதல், கவிதை பனிக்குடம், பக்.21, கமலா தாஸ், மொ-பெ:வேணுமாதவன்
  • தடிப்பெழுத்து என்னோடது

--------------------------------------------------------------------------

Saturday, May 28, 2005

இரு ஆளுமைகளைச் சந்தித்தல்

குட்டி ரேவதியை ஆசிரியராகக் கொண்டு, (ஜீலை-ஆகஸ்ட்) 2003 இலிருந்து, இருமாதமொருமொறை வந்த, பனிக்குடம் இதழ் 3 (மார்ச்-ஏப்ரல், 04) கிடைத்தது; சிறிய, கையடக்கமான, லேசான வாசிப்பிற்குரிய (Light reading!) இதழ்.
மொழிபெயர்ப்பு/கவிதைகள், கவிதை நூல்களிற்கான மதிப்புரைகள், கவிதை தொடர்பான கட்டுரைகள் என இதழ் கவிதைகளையும் அவை தொடர்பான உரையாடல்களில் பெண்ணிலைநோக்கையும் மையங் கொண்டிருக்கிறது.

படைப்புகளென்று பார்த்தால், இதில் இடம்பெற்றிருக்கிற பஹீமா ஜஹானின் கவிதைகளை `இலங்கைப் பெண் கவிஞர் கவிதைகள்' என ஆசிரியர் குறிப்பில் குறிப்பிட்டுப் போடப் பட்டிருக்கிறது. கவிதைகளுக்கு அப்பால், ஒரு பழைய நண்பரைப் கண்ட மகிழ்ச்சி. தினமுரசு பத்திரிகை கொழும்பில் ஆரம்பித்ததில் இருந்து அதன் கவிதைப் பக்கத்தில் ஒவ்வொரு கிழமையும் தவறாமல் வீற்றிருக்கிற கவிதைகளுக்கு உரியவர் பஹீமா. யாரோ ஒரு தோழனுக்கான பிரிவாற்றாமையைப் பகிர்ந்துகொண்டிருந்தன அக் கவிதைகள் அப்போது. பிறகு, மூன்றாவது மனிதனில் 2000 இன் ஆரம்பங்களில் கண்டபோதில், அந்தத் தோழன் யுத்தத்திலோ காணாமல் போனவர்கள் பட்டியலிலோ இராணுவத்திலோ? சேர்ந்தவனாய் ஆகி, பிரிவாற்றாமை தொடர்ந்தபடியிருந்தது! இதில் பஹீமாவின் ஒன்பது சற்றே நீளமான கவிதைகள் கிடக்கின்றன; 'கருமுகிலே!... வீசும் பவனமே...!' எனவெல்லாம் சொற்கள் விழும், ஆச்சரியக் குறிகள் அதிகமிருக்கிற இந்தக் கவிதைகளில், `இலங்கைக்கான' அடையாளத்தை (குறிப்பிட்டு, அப்படியாய்ப் போடுகையில்) த்தேடுகையில் காணவில்லை; ஆனால், இதே இதழிலுள்ள கமலா வாசுகியின் வரிகள், இந்த அடையாளங்கள் ஏதுமின்றி குஜராத் கலவரத்திற்கோ வேறெங்கும் இடம்பெறக்கூடிய பெண்கள் மீதான வன்முறைக்கோ பொருந்திப் போகிறது:

பெண்ணுக்கு ஒரு மணம்,
இரண்டாம் மணமோ கண்டனத்துக்குரியது
இரண்டாம் புணர்ச்சியோ
கடவுளுக்கெதிரானது, தண்டனைக்குரியது

ஆயின்,
குழந்தைகளை மார்புடன் அணைத்த
தத்தம் மனைவியர் வீட்டிலுறங்க,
கோடரி தூக்கிய ஆடவ வீரர்
கடவுளின் பெயரால் ஆயுதம் ஆவர்.

மதத்தின் பெயரால் குறிகள் விறைக்கும்
மதத்தில் பெயரால் தம் நிலை மறக்கும்,
மார்புடன் அணைந்த குழந்தைகள் எறிந்து
''வேற்று''ப் பெண்டிரைப் புணர்ந்து
தண்டிப்பர்.

...வாழிய கடவுளர், வளர்க மதங்கள்
மதங்களைக் காக்க, இனங்களைக் காக்க,
மனிதரைப் படைக்கும் பாவத்தைப்
புரிவதால்…
அழிந்தொழிக பெண்கள்!
-0-

இதை `இன மத இன்னோரன்ன காரணங்களுக்காகப் பாலியல் பழி தீர்க்கப்பட்ட உலக சகோதரிகளுக்காக' என எழுதியிருக்கிறார் க.வாசுகி. இவ்வாறான பல பிரதிகள் ஈழத்தில் ஏலவே வந்துள்ளன, இதில் சண்முகம் சிவலிங்கத்தின் கவிதையின் பாதிப்பும் உள்ளதுதான் எனினும் இங்கே இப் பிரதிக்கான `அடையாளங்கள்' அவசியமற்றிருப்பது முக்கியமானது (கமலா வாசுகி, இவரும், ஈழத்தைச் சேர்ந்த ஓவியை என்றே நினைக்கிறேன்).

தவிர, இக் குறிப்பிட்ட இதழைப் பற்றி எழுதத் தோன்றுவதற்கான முக்கிய காரணம்: மிகப் பிடித்தமான இரு பெண்களோடான சந்திப்புகள் இதில் இடம்பெறுவதுதான். அதிலும், சிலகால இடைவெளிக்குப் பிறகு அவர்களை இங்கே (மீண்டும்) சந்திக்கிறேன் என்பதும்...


ஆளுமை 01:

1998இல் காலச்சுவடில் வந்த அம்பையின் நேர்காணல் என்னைப் பாதித்த நேர்காணல்களில் ஒன்று. உயிர்ப்பாக, இயல்பாக, பேச்சில் ஒருவர் தன்னை வெளிப்படுத்துவது –அவர் `உண்மையாய்' வாழ்கிறாரா இல்லையா என்பதற்கு அப்பால்- பிடித்திருந்தது. (பேச்சில் மட்டும்) தவறு ஆகிரக்கூடாதென்கிற `கவனத்துடன்' மிக நிதானமாக, வாக்குசாதுர்யத்துடன் பேசப்பட்டுத் தரப்படும் ஆட்களின் பேட்டிகள்/நேர்காணல்கள் அனேகம். அவற்றில் ஒரு ஆளுமையை அடையாளங் காணமுடிந்ததில்லை. அந்தவகையில் அம்பையிடத்தில் சொந்த வாழ்க்கையில் அவரது போலித்தனங்கள் பற்றிய கவனம் இன்றி பெண்ணியமோ எந்த ஒரு தத்துவத்தையும் `வரட்சி'யாக முன்வைக்காதது நேர்மறையான அம்சமாக இருந்தது.

இன்று, அம்பையின் புனைவுகள் தொய்ந்து, சில ஆண்டுகளிற்குப் பிறகு, இதில் மீளச் சந்திக்கிற அம்பையின் பேட்டியிலும் அவர் தமிழில் ஒரு நிராகரிக்க இயலாத ஆளுமையாக எழுகிறார். பெண்ணிய மொழியாடலில் சமகாலத்து மாற்றங்கள்வரை அறிந்திருக்கிற, தேடல் உள்ளதொருவளாய் கருத்தாடுகிறார். அவை சின்னச் சின்ன விடயங்கள்! புதிய தலைமுறை –கவனத்தில் எடுக்கவேண்டியவை- அம்பையால் இயல்பாக எடுத்துச் சொல்லப்படுகின்றன, தன்னுடன் ஒன்றிக் கலந்திருக்கிற கருத்துக்களாலேயே அது சாத்தியமாகும். தொடர் வாசிப்பும் அவசியமாயின் எதிர்வினையாற்றுவதும் பெண்ணிய உரையாடல்களில் இயல்பாக வருகிற சமத்துவத் தேடலும் அம்பையின் பலங்கள்; அம்பைக்கும் குட்டி ரேவதிக்குமிடையே இடம்பெற்ற இந்த உரையாடல் பனிக்குடத்திலிருந்து ஆரம்பிக்கிறது.



...காலம், சரித்திரம் இவை தொடப்படாத உடல் இல்லை, பெண் உடல். குழந்தை உடல், இளம் பெண் உடல், தாயின் உடல், தாயாகாத உடல், வயோதிக உடல். நோய்வாய்ப்பட்ட உடல், ஆரோக்கியமான உடல், உடலுக்கான இன்பங்களை அனுபவித்த உடல், அவற்றைத் தவிர்த்த உடல், சாதி அடையாளம் உள்ள உடல், பலாத்காரத்துக்கு உட்பட்ட உடல் என்று உடல்கள் பலதரப்பட்டவை. உடல் பற்றிய உணர்வுகளும் பலதரப்பட்டவை. எந்தவித வித்தியாசமும் அற்ற ஒற்றை உடலாய், ஒரே குணங்கள் உடையதாய்ப் பெண் உடலைப் பார்ப்பது சரித்திரத்தை புறக்கணிக்கும் செயல். ஹெலன் ஸிஸ்யூ போன்றவர்கள் உடலில் ஊறும் ரசங்களால் எழுதுவது –பால், மாதவிடாய்க் குருதி போன்றவை- என்று கூறும்போது அதை ஓர்
எதிர்வினைச் செயலாகவே நோக்க வேண்டும். அதாவது, ~இது பெண் என்று நீ என்னைக் குறுக்கினால் அதையே ஒரு பிரும்மாண்டமாக்கிக் காட்டுகிறேன் பார் என்று கூறும் செயலாக அதைப் பார்க்கலாம். ஆனால் அதில் ஏற்கனவே கருப்பையை மையப்படுத்தி அடையாளப்படுத்திய பெண் உடலில் மீண்டும் புகுந்துகொள்ளும் அபாயம் இருக்கிறது. அந்தக் குறுக்கலை ஏற்கும் நிலை இருக்கிறது. அது மட்டுமில்லை. இதுதான் நான் என்று அடையாளப்படுத்திக்கொண்டு நிலைபட்டபின் அது இல்லாத மற்ற உடல்களை விலக்கும் உதாசீனம் இருக்கிறது. பால் இல்லாத, மாத விடாய்க் குருதி நின்றுபோன பெண்கள் எதைக் கொண்டு எழுதுவார்களாம்? இப்படிப் பெண்ணின் உடலைக் குறுக்குவது
இதுவரை இருந்த விளக்கங்களுக்கு உள்ளேயெ பெண்ணை இருத்தும் செயல்தான். ஒரு காலகட்டத்தில் பனிக்குடத்தை பிரதானப்படுததுவது தவறு அல்ல. ஆனால்
பனிக்குடமே
பெண் உடல் அல்ல. பனிக்குடமே இல்லாத, பனிக்குடத்தை சுமக்காத ஏகப்பட்ட பெண் உடல்கள் உண்டு.
புற்றுநோய்க்காக அறுவைச் சிகிச்சை செய்து கொண்டு முலைகளை இழந்த பெண்கள் உண்டு. ஒருவகை உடலையோ, ஓர் அங்கத்தையோ நாம் பிரதானப்படுத்தும்போது சிலரைக் கூட்டிக்கொண்டு சிலரை ஒதுக்குகிறோம்.
...
(பக். 17, 19)

இன்று பெண்களது எழுத்து தொடர்பாய் `ஆண்களைப்போல எழுதுகிறார்கள்' என்கிற அட்டவணையின் கீழ் நிறைய விமர்சனங்களும் தூற்றல்களும் வந்தாலும் அவற்றால் இத்தகைய அவதானங்களை முன்வைக்க முடிந்ததில்லை. மாறாக, அம்பை போன்றவர்களிடமிருந்தே இயல்பாக வரக்கூடிய இப் பதில்கள் மனதை நெகிழ்த்திவிடுகின்றன. பெண்கள் தம் கர்ப்பப்பையை கையகப்படுத்துவது தொடர்பான உரையாடல்களில் எல்லாம் கர்ப்பப்பை அற்ற நம்முடைய ஓலம் இருக்கிறது என்பாள் தோழரொருவர் (இதைப் பற்றி ஃப்ரீடாவை முன்வைத்து பிறிதொருபோது தொடரவேண்டும்).
பனிக்குடம் என்கிறபோது அதில் 'சொல்லப்பட்ட' பெண்மையின் குணாம்சங்களிற்கான அழகியல், கவித்துவம், சாந்தம், அமைதி என ஒரு பவித்திரமான உணர்வு வெளிப்படுகிறது (தமது வெளியீட்டிற்கும் 'சூல் பெண்ணிலக்கிய வெளியீடு' எனவே பெயரிட்டிருக்கிறார்கள்).

அம்பை தொடர்கிறார்:

...72 இல் பெண் எழுத்தாளர்களைப் பற்றிய ஆராய்ச்சியை நான் மேற்கொண்டபோது ''உங்களுக்கு வேறு முக்கியமான விஷயம் எதுவும் கிடைக்கவில்லையா?'' என்று கேட்டார்கள். பெண்கள் சம்பந்தப்பட்ட எதுவும் முக்கியத்துவம் இல்லாதது என்றே
கருதப்பட்டது; கருதப்படுகிறது. இப்போதும் நாங்கள் சில பெண்களைப் பேட்டி காணப்போகும்போது அவர்கள் வீட்டார் அல்லது சுற்றியுள்ளவர்கள் ''இவள் என்ன
செய்துவிட்டாள் என்று இவளைப் பேட்டி காண்கிறீர்கள்?'' என்று கேட்பதுண்டு. அந்தப் பெண் ஒரு மருத்துவச்சியாக இருக்கலாம் அல்லது நிலஉரிமைக்குப் போராடிய ஓர் ஆதிவாசியாக இருக்கலாம்; ஓர் எழுத்தாளராக இருக்கலாம். தொடர்ந்து நடக்கும் ஏய்ப்பு இது.

(பக். 18)

...பல ஆண்கள், பெண்களைச் சுவைக்கும் ஒன்றாகப் பார்த்தனர். உதடுகள் கோவைக்கனி, கண்கள் திராட்சைப் பழம், முலைகள் மாம்பழம் என்று எல்லாம் ஒரே சாப்பாட்டுச் சமாசாரம்தான்! மணியம் ஒரு கதையில் திருமணமாகாத முதிர்கன்னியை 'ஊசிப்போன பண்டம்' என்று வர்ணிப்பார். பெண்கள் எழுத்தில் ஆண்களைச் சாப்பிடும் வகையில் எதுவும் இல்லை. அவர்களுக்கு விருந்து படைக்கும் வைபவம்தான்! 'பின் தொடரும் நிழலி'ன் குரலில் ஒரு கதாபாத்திரம், தனியாக இருக்கும் பெண் பாலூட்டும் இரு முலைகளுடையவளாகவும் பல பெண்கள் கூடி இருக்கும்போது அவர்கள் பெருச்சாளிகள் போல் இருப்பதாகவும் கூறுவார். ஊட்டும் தொழிலைத் துறந்து விட்டால் பெருச்சாளிகளாவதுதான் வழி போலும்!
(பக். 16, 17)


நன்றி
பின் தொடரும் நிழல் போன்ற நூல்களின்மீது பெண்ணினுடைய வாசிப்பே நிகழாத சூழலில் (சக்தி இதழில் ராஜினி என்பவர் எழுதிய ‘இயலாமையின் புகலிடம் தாய்மையா?’ என்கிற கட்டுரை பி.நி.குரல் மீதான நல்லதொரு விமர்சனம்), அத்தகைய எழுத்தாளர்களின் தந்திரமான மொழியின் ஊடே இவற்றை பகுத்தறிவதும், சனாதனவாதியாய் அவர் பெண்கள்மேல் -கட்டுரைகளிலும் பெரு நாவல்/புனைவுகளிலும்- வைக்கிற பார்வைகளை அடையாளங்காணுவதென்பதும் சிக்கலானது (உ-ம்: அதி நவீனக் கதையாடலில் பெண்ணை சக்தி என்று அவளது இயலுமைகளை (தான் விரும்பிய வண்ணம்) முன்வைத்து, மேல ஏற்றி, அவளைப் பிள்ளைபேற்றிற்காகவும் கட்டுப்பட்ட/தன்னை அச்சமூட்டாத காமத்திற்காகவும்- பரிந்துரைப்பது, அப்படி இருப்பவளே அற்புதமானவளென (புனிதத்திற்குப் பதில்சொல்லாய் 'சக்தி' என) முன்வைப்பது போன்றன); அம்பை அவற்றிற்கு இயல்பாக எதிர்வினையாற்றுகிறார்.

அம்பையைப் பற்றி எழுத ஆரம்பிக்கிறபோதே, மேலே, 'உண்மையாய்' இருத்தல் பற்றி எழுதியிருக்கிறேன். கு.ரேவதி அம்பையிடம், 'இன்றைய தமிழ் சூழலில் பெண்களின் எழுத்துக்கள் எந்த அளவிற்கு உண்மையாக உள்ளன?' என்று கேட்கிறார்:

உண்மையாக இருப்பது என்றால் என்ன குட்டி? எண்ணங்களுக்கா, வாழ்க்கைக்கா, சுற்றியுள்ள யதார்த்தத்துக்கா, எதற்கு? எழுத்து என்பது இதற்கு எல்லாம் உண்மையாக இருப்பது என்று நினைக்கிறாயா? போலி அல்லாத எழுத்து என்று நீ சொல்ல நினைக்கிறாய் என்றால் எது போலி, எது உண்மை என்பதைப் பாகுபடுத்தக் காலம்தான் உதவ முடியும். மேலும் சில சமயம் ஒரு வெளிப்பாட்டின் போலித்தனத்தை நம் நுண்ணுணர்வால் மட்டுமே நாம் உணர முடியும். 'உண்மை' என்று நீ நினைப்பது 'சந்தையுடன் உடன்படாமை' என்ற அர்த்தத்தில் நீ சொல்லி இருந்தால், இது பெண், ஆண் இருவர் எழுத்துக்கும் பொதவான அளவுகோல் இல்லையா? இந்த அளவுகோல் மிகவும் ஒழுக்க உணர்வை ஒட்டி இருக்கிறது. இதை நாம் வேறு மாதிரி பார்க்கலாம். இன்றைய சூழலில் பெண்களின் எழுத்தின் மொழியும், உள்ளடக்கமும் எவ்வளவு தூரம் அவர்கள் சுயதேர்வாக இருக்கிறது? விருதுக் கெடுபிடி, பிரசுரிப்பதற்கான கெடுபிடி, புகழுக்கான கெடுபிடி, இவை எல்லாம் இல்லாமல் வெளிப்பாடு ஒன்றையே குறியாகக் கொண்டுள்ளது என்று வேண்டுமானால் பார்க்க முடியும். ஆனால் இதுவும் பால்தன்மை அற்ற ஓர் அளவுகோல்தான். ஏனென்றால் வாழ்க்கையில் உள்ள 'உண்மைகளை'ப் பற்றியது
அல்ல இலக்கியம். உண்மை என்று நாம் உணர்வதற்கும் நமக்கும் இடையே உள்ள உறவு பற்றியது இலக்கியம். மேலும் இந்த 'உண்மை'யின் தன்மை மாறியபடியே இருக்கிறது, ...
(பக். 14, 15)

உண்மை பற்றிய இவ் உரையாடல் சுவாரசியமானது; எப்போதும் 'உண்மையாய்' இருத்தல் என்பது உடலோடு –அதனால்- ஒழுக்கத்தோடு சம்மந்தப்பட்டதாயே ஒலிக்கிறது; அதை விசுவாசம்/நன்றியாய் இருத்தல் இப்படித்தான் வாசிக்கிறார்கள். உண்மையாய் இருத்தல் என்பதை பாசாங்கற்று இருத்தலாகப் பார்த்தால், தாம் நம்புகிற கருத்துகளிற்கு, சேருகிற துணைக்கு உண்மையாய்/நேர்மையாய் இருத்தல் என்பதை உடம்பு/மனம் எனப் பிரிக்க முடியாதென்றே தோன்றுகிறது.

...பல ஆண் எழுத்தாளர்கள் பெண்கள் வாழ்க்கை பற்றி, அவர்கள் உணர்வுகள் பற்றி சிறப்பாகவே எழுதி உள்ளார்கள். இதற்கும் பெண்கள் தங்கள் வாழ்க்கை பற்றி எழுதுவதற்கும் வித்தியாசம் உண்டு. ...ஒரு பிச்சைக்காரன் தன்னைப் பற்றி எழுதினால் தன் அழுக்குச் சால்வை, பரட்டைத் தலை, வளைந்த நகம் இவை பற்றி எழுத மாட்டான். அவை அவனுக்கு இயல்பானவை. அன்றாட வாழ்க்கையுடன் பிணைந்தவை. ஆனால் அவன் வாழ்க்கை பற்றிய 'உண்மை'யை எழுத விரும்புபவர்கள் இதை எழுதாமல் விட முடியாது.
(பக். 17)

பெண்கள் உரிமைகளைப் பற்றி எழுத விழைபவர்களுக்கு எவ்வளவோ விடயங்கள் உறுத்தலாம், அவர்கள் போடுகிற பர்தா, பின்னால் காவுகிற ஆண் பெயர், அவர்களிடம் இருக்கிற ஆணாதிக்கக் கருத்துக்கள் என்று... தேர்தல் சமயத்தில், கருணாநிதி ஜெயலலிதாவை 'மலடி' எனத் திட்டியதைப் பற்றி அம்பை (காலச்சுவடு 54, ஜீன் 2004)) எழுதியிருந்தார் (அம்பை மட்டும்தான் எழுதியவர் என நினைக்கிறேன்); அவருக்குப்போல, நிறையப் பேரை 'இவை' உறுத்தும்வரையில் அம்பை போன்றவர்களின் இருப்பு அவசியமானது.

---------------------------------------------

  • அம்பை நேர்காணல்: குட்டிரேவதி
  • ஹெலன் ஸிஸ்யூ - Hélène Cixous
  • மேற்கோள்களில் தடிப்பெழுத்து என்னோடது

Wednesday, May 18, 2005

ஊழி

- சேரன்

Riders of the Apocalypse
ங்களுடைய காலத்தில்தான்
ஊழி நிகழ்ந்தது.
ஆவிக் கூத்தில் நிலம் நடுங்கிப்
பேய் மழையில் உடல் பிளந்து
உள்ளும் வெளியும் தீ மூள
இருளின் அலறல்.
குழந்தைகளை, மனிதர்களை
வெள்ளம் இழுத்து வந்து
தீயில் எறிகிறது.

அகாலத்தில் கொலையுண்டோம்
சூழவரப் பார்த்து நின்றவர்களின்
நிராதரவின்மீது
ஒரு உயிரற்ற கடைக்கண் வீச்சை
எறிந்துவிட்டு
புகைந்து புகைந்து முகிலாக
மேற் கிளம்பினோம்

காஃப்காவுக்குத்தான் தன்னுடைய எழுத்துக்களைத்
தீயிலிட வாய்க்கவில்லை
ஆனால் சிவரமணி எரித்து விட்டாள்
அந்தர வெளியில் கவிதை அழிகிறது
மற்றவர்களுடைய புனைவுகள்
உயிர் பெற மறுக்கின்றன.

எல்லோரும் போய் விட்டோம்
கதை சொல்ல யாரும் இல்லை

இப்பொழுது இருக்கிறது
காயம்பட்ட ஒரு பெருநிலம்
அதற்கு மேலாகப் பறந்து செல்ல
எந்தப் பறவையாலும் முடியவில்லை
நாங்கள் திரும்பி வரும் வரை.
0


( ஊழி, பக். 201, 'நீ இப்பொழுது இறங்கும் ஆறு')