III - என் ஜன்னலுக்கருகே வா
----------------------------------
படைப்புகளில் ‘அவர்கள்’
---------------------------------
thanks
சியாம் செல்வதுரையின் முதல் நாவலான Funny Boy (1994) வந்தபோது அவர் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்பதாலேயே அதற்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டது என விமர்சிக்கப்பட்டது. எப்போதும், சிறுபான்மைக் குரல்கள் ஒலிக்கையில் எல்லாம் ஒத்ததான இந்த விமர்சனத்தை காணலாம்.
பெண்ணென்பதால்
தலித் என்பதால் - இத்தியாதி.
ஏ.ஜே.கனகரத்னா எனக்குப் பிடித்தமான விமர்சகர். அவர் Third Eye (ஆறாவது இதழ், யனவரி 2000) இதழில் இந்நூல் பற்றி எழுதுகையில் இப்படி எழுதுகிறார்:
The phenomenal success of Funny Boy when it was first published in Canada was due no so much to its literary merits (considerable as they are) but to the author’s going public about being a ‘gay’ and the attendant media hype”
(பக் 24. book review, Tales of Innocence and Experience, A.J.Canagaratna)
Funny boy ஐ எல்லோரும் ஒரு வாசிப்பிற்குட்படுத்தலாம் என்பதும், எமது சூழலில் இருந்து வந்த பிரதிகளில் இந் நாவல் எனக்கொரு முதல் அறிமுகமாக இருந்தது என்பதும் தவிர எனக்கு அதில் வேறு முக்கியத்துவங்கள் இல்லைத்தான். ஆனால் இவர் ஒரு ஓரினப்புணர்ச்சியாளர் என்பதால்தான் தரப்படுகிற கவனம் என்கிற கூற்று நெடுகிலும் வருவதால் நெருடுகிறது.
தொடர்ந்து ஏ.ஜே. இதைப்போலவே அடுத்த நாவலும் வருமா, அல்லது மேற்கின் இத்தகைய அணுகுமுறைகளுக்குள் அடிபட்டுப்போய்விடுமா எனக் கேட்டிருந்தார் (நாவலைப்பற்றிய அவரது விமர்சனமும் எதிர்மறையாக இருக்கவில்லை, அரசியல்தரீதியாக சில விமர்சனங்கள் இருந்தனவே தவிர.) அந்த இரண்டாவது நாவலான, Cinnamon Gardens (1998) எனக்கு முதலாவதைவிட முக்கியத்துவம் மிக்கதாய் பட்டது.
Funny Boy: இலகுவான வாசிப்பை கோருகிற ஒரு பிரதி, ஓரினச்சேர்க்கையாளனான பையனின் வளரிளம் பருவம் (adolescence) பற்றியது, தனது பாலியல் விருப்பை அவன் தன்னுடன் படிக்கும் இன்னொரு மாணவனூடாக கண்டடைகிறான் என்பது அந்தக் கதை. அத்துடன் 1983 கலவரத்தைப் பற்றியும் அதன்பின்பு அவன் கனடாவிற்கு புலம்பெயர்வதுவரை சொல்கிறது. அதற்கு தொடர்ச்சி இல்லை. இரண்டாவது பிரதியோ ஏலவே எழுதியதுபோல பிரதிக்குப் பிறகும் பேசுகிறது; சொல்லப்போனால் வாசித்து முடிந்தபிறகுதான் அது பேசவே ஆரம்பிக்கிறது.
அந்த வகையில் இந்தப் பிரதி முக்கியமானது; இதன் ஒப்பற்ற இலக்கியத்தரத்திற்காக அல்ல. இதிலும்விட கலைநேர்த்திமிக்க படைப்புகள் பிற மொழிகளில் நிறையவே வந்திருக்கும்தான் ஆனால் ஓரினச்சேர்க்கையாளர்களது உளவியல்ரீதியான பக்கங்களை அணுகுகிற தமிழ்ப்பிரதிகள் இல்லை. அவைக்கான தேவையோ மிக அதிகம். இதுபோன்ற, இலகுவான, எமது சூழலோடு இணைகிற பிரதி, தமிழில் மொழிபெயர்க்கப்படுமாயின் எல்லோராலும் வாசிக்கப்படும்.
தமிழில் சரிநிகர் இல் எஸ்.கே.விக்கினேஸ்வரன் Funny Boy இன் முதல் சில பாகங்களை மொழிபெயர்த்திருந்தார். சரிநிகர், நிகரி என வந்து பிறகு அதுவும் நின்றுவிட்டதால் அவர் அதைத் தொடரவில்லை போலும்! இந்த இரண்டு பிரதிகளுமே வாசிப்பைப்போலவே மொழிபெயர்க்கவும் மிகமிக இலகுவான பிரதிகள். எளிய ஆங்கிலம், கூடவே புட்டு, அம்மாச்சி போன்ற பல தமிழ் சொற்கள் மேலும் இலகுவாக்குகின்றன.
இது தவிர, எமது பரப்பில், படித்த ஒரு நூல்: ஹஸீன் என்கிற கிழக்குப் பகுதி தமிழ் இளைஞரின் ‘சிறியதும் பெரியதுமாய் எட்டுக் கதைகள்’ ( 2002 ). ரஞ்சகுமாரால் ‘முற்றுப்பெறாத நாவலின் முதற்படி’ என எழுதப்பட்டிருக்கிற இந் நூலின் இறுதிப் பகுதி ஒரு குறுநாவல்: அதன் பெயர் ‘பூனை அனைத்தும் உண்ணும்.” சொந்த அனுபவங்கள் ஆக இவை சொல்லப்பட்டிருந்தாலும், சியாம்போல இவர் ஓரினச்சேர்க்கையாளர் அல்ல. இந்தத் தலைப்பின் பிரகாரமே தொடர்ந்தோமானால், இக் குறுநாவலில் வருகிற கதாபாத்திரம் இருபால்உறவாளர். அவருக்கு ஒரு வயதுகூடிய ஆணுடன் உறவிருக்கிறது. அதேநேரம் பள்ளியில் படிக்கிற ஒரு மாணவிமீது ஈர்ப்பும் இருக்கிறது!
ஏற்கனவே சியாமைப் படித்திருந்ததால், அவரது முதல் நாவலில் ஒரு கதையான ‘பன்றிகளால் பறக்க முடியாது’ என்ற பிரதி ‘பூனை அனைத்தும் உண்ணும்’ என்பதை வாசிக்கிறபோது நினைவுவந்தது. ஹஸீன் Funny Boy படித்திருக்கவேண்டுமென்பதில்லை. ஆனால் சமூகத்தில் பேசப்படாத ஒரு பாலுறவை பேசும்போது (‘வக்கிரக் காமத்தை’ப் பேசுகிறதுபோதும்!) படைப்பாளிகள் தம்மை மிருகங்களுடன் ஒப்பிடுவதன் பின்னணி பற்றி நினைக்கத் தோன்றிற்று.
சியாமும் சரி, ஹஸீனும் சரி தங்களுடைய பாலியல் தேர்வை குறியீடாக்கும் போது ‘பன்றிகளால் பறக்க முடியாது’ என்றும், “பூனை அனைத்தும் உண்ணும்” என்றும் மிருகங்களுடன் அத்தேர்வை ஒப்பிடுகிறார்கள் (சியாம், தனது ‘சமர்ப்பணக்’குறிப்பில் ‘பன்றிகளால் பறக்க முடியும் என நம்பிய எனது பெற்றோருக்கு’ என்பதூடாக அதைத் தான் முறியடித்ததைத் தெரிவிக்கிறார்). இரு பிரதிகளிலும் சியாமிடம் இருப்பது வலி மிகுந்த ‘புறக்கணிக்கப்பட்ட’ ஒரு குழந்தையின் தேடலும், தான் ‘வித்தியாசப்பட்டுப்போனதற்கான’ குற்றஉணர்ச்சிகளும். மாறாக, ஹஸீனின் பிரதியில் அத்தகைய உணர்வுகள் எதுவும் இல்லாததும் -இவை கலந்துபேசப்படாத தமிழ்ச் சூழலில்- படு அலட்சியமாக தனது கதாபாத்திரத்தின் பாலியல்தேர்வுகளை ஹஸீன் எழுதியிருப்பதும், அவரது சமூக அச்சமின்மையும் மகிழ்ச்சி அளிக்கிற விடயங்கள்.
இன்னொருபுறத்தில் இருபாலுறவாளர்கள் பாலியல் ஒடுக்குமுறைக்கு உள்ளாகிறவர்கள் என்கிற வகைப்பிரிப்புக்குள் அடங்கார்கள் என்பதையே இது காட்டுகிறது. ஏனெனில், அவர்களுக்கு சமூகத்துடன் ‘ஒத்துப்’ போகக்கூடிய உறவும் இருக்கிறது; அது அவர்களுக்கு ‘வதை’யும் இல்லை. தமிழில், பெண்களுடைய பிரதிகளில், உமா மகேஸ்வரி, யாரும் யாருடனும் இல்லை (தமிழினி பதிப்பகம், 200?) என்கிற நாவலில் அதில்வருகிற அண்ணி கதாபாத்திரத்திற்கும் பதினாறு பதினைந்து வயதுகளில் இருக்கக்கூடிய பெண்ணிற்குமிடையேயான உடல்ரீதியான உறவு மறைமுகமாக எழுதப்பட்டிருக்கிறது (ஓரினஈர்ப்பைப் பற்றி வெளிப்படையாக எழுதப்படவேண்டுமென்பது தவிர, இது ஒரு தனிநபரை
மற்ற சிறுபான்மையினர்போல பாதிப்புக்குட்படுத்தப்போவதில்லை என்றே நினைக்கிறேன்.).
மற்றப்படி, பெண்-ஓரினச்சேர்க்கையாளர்கள் என்றதும் மடோனாவும் பிரிட்னி ஸ்பியர்ஸ் உம் முத்தமிட்ட காட்சிதான பலருக்கு இவர்கள் பற்றிய ஒரு பதிவாக கண்முன் வரலாம்; இணையத்தில் எல்லையற்ற பக்கங்களில் காணக்கிடைக்கிற உறவுகொள்ளும் ‘கிளுகிளுப்பான’ இருபெண் உடல்களே பலருக்கு ‘இது’வாக இருக்கலாம். இன்னமும் அமெரிக்க பதின்மக்காரிகளிடையே தமது காதலன்களைப் பொறாமையூட்ட காதலிகள் வைத்திருப்பது பாஷன் என்றும் –அவர்கள் தம் தோழிகளை
முத்தமிட்டால்- ஆண்கள் பொறாமையடைவார்கள் என்றும் ஒரு myth இருக்கிறது.
இவற்றின் பின்னணியில், மாண்ட்ரீஸர் தனது பின்னூட்டமொன்றில் ஓரினச்சேர்க்கையாளர்களில் பெண்களை ‘sexy’ ஆயும் ஆண்களை விரோதத்துடனனும் பார்ப்பது தொடர்பாய்,
“...gays மீது உள்ள வெறுப்பு lesbians மீது இருப்பதில்லை. அது sexy என்பார்கள் - இது, ஆண்கள் சேர்ந்து உருவாக்கிய பிம்பம் என்றாலும், தவறிருக்கமுடிவதாகச் சொல்லமுடியாது” என்று எழுதியிருந்தார்.
ஜேன் றூல் போன்ற பெண்ஓரினச்சேர்க்கையாளர்களின் கட்டுரைகளைப் படிக்கிறபோது லெஸ்பியன்கள் அப்படியொன்றும் கவர்ச்சியான இடத்தில் இருப்பதுபோல படவில்லை (அவரது ஆரம்பம் 1970கள் என்பதையும் கவனிக்கவேண்டும்தான்). அவர்களும் தமது காதலிகளை மற்றவர்கள் (ஆண்களுங்கூட) ‘திருடிவிடுவதைப்’ பற்றி துயருறுகிறார்கள். இன்றைக்கும் பாரம்பரிய, கிறிஸ்தவ, மேற்கத்தையக் குடும்பங்களில் இது ‘ஏற்றுக்கொள்ளப்படாத’ ஒன்றுதான். தொலைக்காட்சியில் ‘ஓடிப்போன’ லெஸ்பியன்கள் பற்றிய செய்தி வருகிறபோது, தலையை ஆட்டி, தொலைக்காட்சியை நிறுத்திவிட்டு “யேசுவே! உலகம் எங்கு போய்க் கொண்டிருக்கிறது” என மறுகுகிற கறுப்பு/வெள்ளை நண்பர்களுள்ளார்கள்.
இணையத்தில் உள்ள பெருவாரியான போர்னோப் படங்கள் தருகிற லெஸ்பியன்கள்மீதான கவர்ச்சி முகம், அதன்மீதான ஆண்களின் ஈர்ப்பு, இதற்கு காரணமாய் ஒன்றிற்கு பதிலாக, இரண்டு பெண் உடல்கள் (சந்தையில் வடிவமைக்கப்பட்டவை!) புணர்வதை பார்க்கிற இன்பம் என்பது தவிர வேறொன்றும் இல்லை. இத்தகைய ‘கவர்ச்சியான’ பிம்பங்களை ஹோலிவூட் படங்களும் பொப் பாடகர்களும்தான் உருவாக்குகிறார்கள். ஆனால், பெண்களும் கூட entertainment business இல் இருப்பவர்கள் தாம் பெண்ஓரினப்புணர்ச்சியினர் என்பதை அறிவிப்பதில்லை என்பதை கவனிக்கலாம் ((Rosie O.Donnell); ஆண்களுக்குத்தான் இது (பெண் இரசிகைகளை இழக்கிறது போன்ற) பிரச்சினை என்றால் ஏன பெண்கள் அதை பகிரங்கப்படுத்தத் தயங்குகிறார்கள்? என்கிற கேள்வி எழுகிறது.
இன்றைக்கு ‘அவர்கள்’ இல் ஒருவளான மெலிஸா எத்திறிட்ஸின் பாடல்கள் எனக்குப் பிடித்திருக்கிறது. தான் காதலுக்கு உரியவள், காதல்வசப்பட தகுதியானவள், தனக்கு காதலை நிராகரிக்க நீங்கள் யார் என்றெல்லாம் அவள் பாடுகிறாள். இதிலிருக்கிற காதல் என்னை/உங்களை காதல்வசப்படுகிற எல்லோரையும் அவளுடன் இணைக்கும்; அதற்கு வித்தியாசங்கள் இல்லை!
என் ஜன்னலருகே வா,
தவழ்ந்து, உள் நுழைந்து
நிலா வெளிச்சத்தில் காத்திரு
சீக்கிரம் வீடு வருவேன்!
நான் தொலைபேசியில் எண்களை சுழட்டுவேன்
உன் சுவாசத்தை கேட்டிருக்க மட்டுமாய்
என் நரகத்துள்ளே நின்றபடி
மரணத்தின் கரங்களை பற்றிநின்று
இந்த பிரத்தியேக வலியை லேசாக்க
உனக்குத் தெரியாது – நான்
எவ்வளவு தூரம் போவேன் என்பது.
உனக்கத் தெரியாது
உனக்கு
நான் எவ்வளவைத் தருவேன்
அல்லது எடுப்பேன் என்பது- எல்லாம்
உன்னை அடைய.
உன்னை அடைய
உன்னை அடைய
...
கண்கள் திறந்து வைத்தபடி
என்னால் தூங்கத்தை வாங்க முடியவில்லை
வாக்குறுதிகளைத் தருகையில்
தெரியும் அவற்றை காப்பாற்ற முடியாதென்பதும்.
என் நெஞ்சுள் வடிந்த இருளை
எதாலும் போக்க முடியவில்லை;
என் இரத்தத்துள் நீ வேண்டும்
எல்லாவற்றையும் நான் கைவிடுவேன்
உன்னை அடைய
உன்னை அடைய
ஓ! உன்னை அடைய
இவர்கள் என்னை நினைக்கிறார்கள் என்பது எனக்கு கவலையில்லை
இவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது எனது கவலையில்லை
சரிதான்! இவர்களுக்கு இந்தக் காதலைப் பற்றி என்ன தெரியும்’
‘என் ஜன்னலருகே வா’ என்ற இந்தப்பாடல் லெஸ்பியன்கள் மத்தியில் மிகப் பிரபலமானது என்று ஒரு பேட்டியில் இவர் சொல்லியிருந்தார். முக்கியமாக, ‘இவர்களுக்கு ‘இந்தக் காதலைப் பற்றி’ என்ன தெரியும்’ என்ற பாடலின் இறுதி வரி அவர்களுக்குப் பிடிப்பதாக அவர் மேலும் சொன்னார். உண்மைதான் தமது காதலையே திருமணத்திற்குப் பிறகு முடித்துவிடுகிற, சொத்துக்களையும் வாரிசுகளையும் ‘சேர்க்கப்’ போய்விடுகிற ‘இவர்களுக்கு’ இந்தக் காதலைப் பற்றி மட்டும் என்ன தெரியும்?
===================
இந்த இவர்கள் குறித்த ‘உரையாடலை’ நான் முடிக்க நினைக்கிறபோது, எனது தோழியொருத்தி நான் ஏற்கனவே படித்த கவிதையை ‘இது ஒரு லெஸ்பியன் பெண்ணுக்காக எழுதப்பட்டது” என்று தந்தபோது, அதன் முழு அனுபவமும் மாறிப்போனதை பகிர்ந்து முடிக்கலாம் என நினைக்கிறேன். இதை விட முடிப்பதற்கு வேறு பிரதிகள் தேவையில்லை. இந்தக் கவிதையை மைதிலி எழுதியிருக்கிறார். எந்தக் குறிப்புமின்றி பார்க்கிறபோது இதற்கு வலு இல்லை. ஆனால் தனது ஆசிரியர் ஒருவரிடமிருந்து ‘பிரித்து’ பெற்றோரால் (சமூகக் காவலரால்?) வன்கூவர் (கனடாவில் இன்னொரு மாநிலத்திலுள்ள நகரம்) கொண்டு செல்லப்பட்ட அவ் ஆசிரியரின் காதலி பிரிவிலும் அடக்குதலின் அழுத்தத்திலும் அங்கே இறந்துபோய் (தற்கொலை?) விடுகிறாள். அவளது புதைகுழி இருக்கிற இடம்கூட கனடாவின் எதிர்முனையில், இந்த மாநிலத்தில் இருக்கிற இவரிற்கு தெரியாது (இன்னமும்).
நினைவு
-மைதிலி
கைகளில்
குளிர்மையாய் ஏதோ படத்
திடுக்கிட்டுப் போனேன்
உன் கண்ணீரோ?
இப்போது எங்கே இருக்கிறாய் நீ?
குளிர்காலம் முடிந்து விட்டது
நீர் நிறைந்த சிறு குட்டைகளிலெல்லாம்
லூண் பறவைகள்
வெப்பமும் வியர்வையும்
எல்லோரையும்
தூசும் மரங்களும் நிறைந்த
பூங்காக்களுக்கு விரட்டுகின்றன
போன கோடையில்
உன் கருப்பையில்
என் முலைகள் அழுந்த...
காமம் வற்றிப் போயிற்று
இன்று
கடைசியில்
ஒரு மலாச் செண்டையோ
ஒரு கவிதையையோ கூட
உன்னிடம் தர முடியவில்லை
எனைவிட்டு
உன்னுடல் சுமந்து சென்றது விமானம்
ஜோ-ஆன்
வான்கூவரில்
எந்தப் புதைகுழியில் தேடுவேன்
உன் உறைந்துபோன புன்சிரிப்பை
0
நன்றி: இரவில் சலனமற்றுக் கரையும் மனிதர்கள் (2003)
கவிதைத் தொகுப்பு, காலச்சுவடு பதிப்பகம்